இந்த உலகத்தை மேம்பட்ட இடமாக மாற்றுவதே தனது விருப்பம் என்றும் இதற்கான தமது பங்களிப்பை வழங்குவதில் எந்தவித குறையும் வைக்கப் போவதில்லை என்றும் நடிகை ஆத்மிகா தெரிவித்துள்ளார்.
முடிந்தவரை தம்மைச் சுற்றியுள்ள அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை ஆத்மிகாவின் தந்தை ஜூன் 26ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையொட்டி அவர் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் தந்தையின் நினைவுகளை உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
“அப்பாவின் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை எதைக் கொண்டும் நிரப்ப இயலாது. இதனால் ஏற்பட்டுள்ள வலியை எதனாலும் குறைக்க முடியாது. எனக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தவர், எனக்கு பக்கபலமாக இருந்தவர். என்னை சுதந்திரமான, வலிமையான பெண்ணாக வளர்த்தார். அவர் கற்றுக்கொடுத்த உயர்வான விஷயங்களும் அவரது நற்பண்புகளும் என்னுடன் எப்போதுமே இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார் ஆத்மிகா.
தனது தந்தையின் மரணம் திடீரென நிகழ்ந்ததால் அதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், வாழ்க்கையில் நல்ல நிலையை எட்டிப் பிடித்து தனது தந்தைக்கு பெருமை சேர்ப்பதே இனி தனது இலக்கு என்றும் கூறியுள்ளார்.
“எப்போதுமே பணத்தையும் சொத்துகளையும்விட கண்ணியமும் நேர்மையும்தான் முக்கியம் என்று அப்பா அடிக்கடி சொல்வார். மேலும், சுயநலமாக யோசிக்காமல் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நன்மை கருதி செயல்பட வேண்டும் என்றும் அறிவுரை கூறுவார். அவரது இறுதி தருணத்தின்போது வழியனுப்பும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை.
“இனி வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும் என் தந்தையின் நினைவோடு புன்னகையுடன் எதிர்கொள்வேன்.
“என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் கவலையில்லை. என்னைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன். என் மீது நான் எந்தளவு நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என்பதுதான் முக்கியம்,” என்று நெகிழ்வுடன் சொல்கிறார் ஆத்மிகா.