மனித இனத்தின் மீதான நம்பிக்கை தமக்கு வேகமாக குறைந்து வருவதாகச் சொல்கிறார் சாய் பல்லவி.
குரலற்றவர்களுக்கு உதவுவதற்காக கொடுக்கப்பட்ட அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் இந்நிலை நீடிக்கக் கூடாது என்றும் அவர் தமது அண்மைய டுவிட்டர் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
பலவீனமானவர்கள் காயப்படுத்தப் படுவதாகவும் சிலர் தங்களது அரக்கத்தனமான ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள குழந்தைகளைக் கொல்வதாகவும் சாய் பல்லவி காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.
“நாம் கடக்கும் ஒவ்வொரு நாளும், இயற்கை மனித இனத்தைச் சுத்திகரிக்க எண்ணுவதாகவே தோன்றுகிறது.
“இப்படிப்பட்ட நிகழ்வுகளைப் பார்த்து எதுவும் செய்ய இயலாத பயனற்ற, மோசமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் வாழும் இந்த மனிதத்தன்மையற்ற உலகம் இன்னொரு குழந்தையின் பிறப்புக்குத் தகுதியானது அல்ல.
“ஊடக வெளிச்சத்துக்கு வரும் குற்றங்களுக்கும்கூட சமூக வலைத்தளத்தில் ‘டிரெண்ட்’ செய்தால் மட்டுமே குற்றங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நிலை வரக்கூடாது,” என்று சாய் பல்லவி கூறியுள்ளார்.
நிலைமை இவ்வாறு இருந்தால் புகார் அளிக்கப்படாமல், கவனிக்கப்படாமல் போகும் குற்றங்களின் கதி என்ன ஆகும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தின் புதுக்கோட்டை பகுதியில் நிகழ்ந்துள்ள அண்மைய பாலியல் குற்றம் தொடர்பாக சாய் பல்லவி உட்பட தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த மேலும் பலர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.