அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய தனுஷுக்கு, வடிவேலு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“தமிழ் சினிமா் மீது காதல்கொண்டு, புதுப்பேட்டையில் படிக்காதவனாய் வலம் வந்து, வேலையில்லா பட்டதாரியாய் கொடி நாட்டி, வடசென்னையில் நீ அசுரனாய் மாறியபோது, நம் மக்களைப்போல் நானும் மகிழ்ந்தேன். இந்த ஜகத்தினில், நீ கர்ணனாய் தோன்ற வாழ்த்துகிறேன்..”
- இப்படி தனுஷ் நடித்த பல வெற்றிப் படங்களின் தலைப்புகளை வைத்தே வாழ்த்தினார் வடிவேலு.
இது பலரை வியக்க வைத்தது. காரணம் இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு.
தனுஷ் முன்னணி நடிகரான பிறகும் கூட தனது தந்தை கஸ்தூரி ராஜாவால் சினிமாவில் அறிமுகமான வடிவேலுடன் இணைந்து நடிக்கவில்லை.
வடிவேலுவுக்காகவே திரைக்கதையில் நகைச்சுவைக் காட்சிகளை அதிகமாக இடம்பெறச் செய்பவர் இயக்குநர் சுராஜ். ‘தலைநகரம்’, ‘மருதமலை’ உள்ளிட்ட சில படங்களை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
அப்படித்தான் தனுஷை வைத்து எடுத்த ‘படிக்காதவன்’ படத்திலும் வடிவேலுவுக்கான காட்சிகளை சேர்த்திருந்தார். ஆனால் தனுஷுக்கும் வடிவேலுவுக்கும் திடீரென முட்டிக் கொண்டது என்கிறார் கோடம்பாக்க மூத்த செய்தியாளர் ஒருவர்.
“படப்பிடிப்பின்போது வடிவேலுவிடம் பேசிய தனுஷ், “அண்ணே, படத்துல நான் நாயகன். ஆனால் நகைச்சுவையில் நீங்க என்னை தூக்கிச் சாப்பிட்டுருவீங்க. அதனால் முன்பே எழுதப்பட்ட வசனத்தை மட்டும் பேசுங்க. கூடுதலாக ஏதும் பேசுவதாக இருந்தால் முன்கூட்டியே தெரியப்படுத்துங்கள். நானும் அதற்குத் தயாராகி உங்களுக்கு பதிலடி தருகிற வசனங்களைப் பேசுகிறேன் என கேட்டுக்கொண்டார்.
“ஆனால் வடிவேலு இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
“நான் உங்கள் மாமாவுடன் (ரஜினி) நடிக்கும்போதுகூட கேமரா ஓடத்தொடங்கியதும் ஏதாவது நல்ல வசனம் தோன்றினால் பேசிடுவேன். அதுதான் எனது தனித்துவம். அதை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்? என்று கேட்டார்.
“முன்பு ‘தலைநகரம்’ படத்தில் ரவுடி என்ற பெயரில் வலியப்போய் போலிஸ் வாகனத்தில் ஏறும் வடிவேலு, “நல்லா பார்த்துக்குங்க... நான் ஜெயிலுக்குப் போறேன், ஜெயிலுக்குப் போறேன்’ எனச் சொல்லியிருப்பார். அது மக்களால் ரசிக்கப்பட்டது.
“உண்மையில் அப்படியொரு வசனம் எழுதப்படவில்லை. ‘டப்பிங் பேசும்போது சேர்த்துக் கொள்ளலாம்’ என முடிவு செய்து சும்மா வெறும் வாயை அசைத்தார் வடிவேலு. பிறகுதான் ‘ஜெயிலுக்குப் போறேன்’ வசனம் சேர்க்கப்பட்டது.
“இப்படி கேமரா ஓடத்துவங்கிய பின்புகூட புது வசனத்தைப் பேசுவது வழக்கம். இதைத்தான் வடிவேலு சொன்னார். ஆனால் தனுஷ் அதை ஏற்கவில்லை. இதனால் ‘படிக்காதவன்’ படத்திலிருந்து வடிவேலு விலக, விவேக் நடிக்க வைக்கப்பட்டார்.
“இப்போதும் ‘படிக்காதவன்’ படத்தின் விவேக் காமெடி காட்சிகளைப் பார்த்தால் அதில் வடிவேலு வசன பாணி இருப்பதை உணரலாம். இந்த பிரச்சினைக்குப் பின் இருவரும் இணையவில்லை,” என்கிறார் அந்த மூத்த செய்தியாளர்.
இதோ, உலகம் அனைத்துலக நண்பர்கள் தின வாழ்த்தை பரிமாறிக் கொண்ட வேளையில், தனுஷுடனான பகையை மறந்து, வாழ்த்தி இருக்கிறார் வடிவேலு.
பகையை ஆற்றும் வலிமை நட்புக்கு உண்டு என்பார்கள். அது உண்மையாகட்டும் என்பதே இருதரப்பு ரசிகர்களின் விருப்பம்.