எதிர்பாராத விபத்து, சில வாய்ப்புகள் கைநழுவிப் போனது என ஒன்றிரண்டு மாதங்கள் சில தவிப்புகளுக்கு ஆளாகியிருந்த மஞ்சிமா மோகன், மீண்டும் பழைய தெம்புடனும் உற்சாகத்துடனும் களமிறங்கி உள்ளார்.
விஜய் சேதுபதியுடன் ‘துக்ளக் தர்பார்’, ஜீவா-அருள்நிதியுடன் ‘களத்தில் சந்திப்போம்’, விஷ்ணு விஷாலுடன் ‘எஃப்.ஐ.ஆர்’ என வரிசையாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தனது தந்தையுடன் கூட்டணி அமைத்து மஞ்சிமா ஒரு படத்தை இயக்கப் போவதாக வெளியான தகவல் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இவரது தந்தை மோகன் கேரளாவில் பிரபல ஒளிப்பதிவாளர். பல முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
இயக்குநராகப் போகிறீர்களா என்று கேட்டால், “ஏன் ஆகக்கூடாதா?” என மஞ்சிமாவிடம் இருந்து எதிர்கேள்வி வருகிறது. அது மட்டுமல்ல, தந்தை எழுதிய கதையைத் தான் இயக்கப் போவதாகவும் விவரம் தெரிவிக்கிறார்.
“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அப்பா ஒரு அழகான கதையை எழுதியிருந்தார். அதை என்னிடமும் விவரித்திருந்தார். ஆனால் கதையின் முடிவை மட்டும் எழுதவில்லை. எனக்கு ஏதாவது தோன்றினால் தெரிவிக்குமாறு சொல்லி பல மாதங்களாகிவிட்டன. எனக்கும் அந்தக் கதையை எப்படி முடிப்பது என்று தெரியவில்லை. யோசித்துக்கொண்டே இருக்கிறேன்.
“ஒருவேளை நல்ல முடிவு தோன்றினால் அப்பா அந்தக் கதையை நிச்சயம் இயக்குவார். ஒருவேளை அவர் இந்த முயற்சியைக் கைவிட்டால் நிச்சயமாக நான் இயக்குவேன்,” என்கிறார் மஞ்சிமா.
எந்தவித முன் அனுபவமும் இல்லாமல் மஞ்சிமா இந்த முடிவை எடுக்கவில்லை. சில படங்களில் நடித்திருப்பவர், உதவி இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார் என்பது பலருக்குத் தெரியாது.
மலையாளத்தில் ‘ஒரு வடக்கன் செல்ஃபி’யிலும் தமிழில் ‘அச்சம் என்பது மடமையடா’விலும் பணியாற்றிய உதவி இயக்குநர்களில் இவரும் ஒருவர்.
‘ஒரு வடக்கன் செல்ஃபி’ யில் நடித்தபோது மிகவும் தயங்கினாராம். இதைக் கவனித்த இயக்குநர், இரண்டு வாரங்களுக்கு தனது உதவியாளராக படப்பிடிப்பில் பங்கேற்குமாறு அறிவுறுத்தி இருக்கிறார்.
“இதனால் மனதில் இருந்த தயக்கம் ஓடிப்போனது. பிறகுதான் எனக்கான முதல் காட்சியில் நடித்தேன்,” என்று சொல்லும் மஞ்சிமா, ‘துக்ளக் தர்பார்’ படத்தில் விஜய் சேதுபதியின் தங்கையாக நடிக்கிறார் என்பதும் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும்போது தங்கை வேடம் ஏற்பது சரிப்பட்டு வருமா? என சமூக வலைத்தளங்களில் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தங்கை வேடத்துக்காக தம்மை அணுகியபோது மஞ்சிமாவும் ஆச்சரியப்பட்டாராம்.
இவரது மேலாளர்தான், ‘ஒருமுறை கதை கேட்போம். பிறகு முடிவு செய்யலாம்’ என்று கூறியுள்ளார்.
“ஆனால் கதை கேட்டதும் எனக்கு முழு திருப்தி. உடனே கால்ஷீட் ஒதுக்கிவிட்டேன். இது வழக்கமான தங்கை வேடம் அல்ல. என் நடிப்பை முழுமையாக வெளிப்படுத்த முடியும். அது மட்டுமல்ல, சற்றே கடினமான கதாபாத்திரம் என்றும் சொல்லலாம்.
“பொதுவாக வசனம் பேசி நடிப்பது ஓரளவு சுலபமானது. ஆனால் குறைவான வசனங்கள் பேசி, முகபாவனைகள், உடல்மொழி மூலம் உணர்வுகளை வெளிப்படுத்துவது கடினம். தங்கையாக நடிப்பதில் தவறு இல்லை,” என்கிறார் மஞ்சிமா.
விஷ்ணு விஷாலுடன் நடிக்கும் ‘எஃப்.ஐ.ஆர்.’ படத்தில் வழக்கறிஞராக நடிப்பவர், இதுவும் ஒரு வகையில் சவாலான வேடம்தான் என்கிறார்.
‘களத்தில் சந்திப்போம்’ படத்துக்காக ஜீவா, அருள்நிதி, ப்ரியா பவானி சங்கருடன் இணைந்து நடித்தது ஜாலியான அனுபவமாக இருந்ததாம்.
“ஜீவா எல்லோரையும் கிண்டல் செய்து கொண்டிருப்பார்.
“திடீரென நம்மை பயமுறுத்துவது போல் ஏதாவது செய்வார். அதற்கு நேர்மாறாக அருள்நிதி ரொம்ப அமைதியானவர்.
“பிரியா பவானி சங்கர் நல்ல தோழி. அவருடன் குறைவான காட்சிகளில்தான் நடித்தேன். அதற்குள் நெருக்கமாகி விட்டோம்,” என்று உற்சாகமாகப் பேசும் மஞ்சிமா, தமிழில் மேலும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்.