ஊரடங்கின்போதும் தன் வீட்டுக்கு அருகே உள்ள தனிப்பட்ட அலுவலகத்துக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வந்து போகிறார் விஜய் சேதுபதி.
ஊரடங்கு முடிவுக்கு வந்த அடுத்த நாளே படப்பிடிப்பில் பங்கேற்க காத்துக் கிடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது குறைந்தபட்சம் ஐந்து படங்களில் அவர் கவனம் செலுத்திவருவதாகக் கூறப்படுகிறது. அவற்றுள் ‘துக்ளக் தர்பார்’ படமும் ஒன்று. தலைப்பைப் போலவே இதன் கதையும் சுவாரசியமாக இருக்குமாம்.
அரசியல் கலந்த சரித்திரத்தைக் கொண்ட ஒருவரை முன்வைத்து சொல்லப்படும் கதை இது என்கிறார் இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன். இதில் தாம் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாகவே விஜய் சேதுபதி வாழ்ந்து காட்டி இருப்பதாகவும் பாராட்டுகிறார்.
“பொதுவாக மனசுக்குள் ஒரு கதை உருவாகத் தொடங்கியதுமே அதற்குத் தேவையான சில கற்பனை முகங்கள் மனதில் பூக்கும். அப்படி என் மனதில் மலர்ந்த ஒரே முகம் விஜய் சேதுபதிதான். இந்தக் கதைக்கான கதாபாத்திரத்தில் நடிப்பது அவ்வளவு எளிதல்ல. எல்லோராலும் நடித்துவிட முடியாது. இதை உணர்ந்திருந்தும் விஜய் சேதுபதி இருக்கிறார் என்ற நம்பிக்கையில் கதையை எழுதி முடித்தேன்.
“எந்தவொரு நடிகராக இருந்தாலும் இதில் நான் நடித்தே ஆகவேண்டும் என்று விரும்பக்கூடிய கதாபாத்திரம் இது. நான் எதிர்பார்த்தது போலவே சேதுபதி இதில் நடிக்க ஒப்புக்கொண்டார்,” என்கிறார் டெல்லி பிரசாத் தீனதயாளன்.
ஒரு கதையில் இருக்கும் சிரமமான அம்சங்களைக்கூட மகிழ்ச்சியான அம்சங்களாக மாற்றக்கூடிய ஆற்றல் சேதுபதிக்கு உண்டு என்று குறிப்பிடுபவர், ரசித்து நடிப்பதால் வரக்கூடிய மனோபாவம் இது என்கிறார்.
சிரமங்களை ரசித்தபடியே அனுபவிப்பதுதான் சேதுபதியிடம் இயக்குநர்களுக்குப் பிடித்த அம்சம் என்றும் இந்தப் படம் அவரது திரைவாழ்க்கையில் முக்கியமான படைப்பாக இருக்கும் என்றும் பிரசாத் உத்தரவாதம் அளிக்கிறார்.
இது அரசியலும் நையாண்டியும் அதிகமுள்ள கதையாம். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பே விஜய் சேதுபதியிடம் இதை சொல்லியிருக்கிறார். கதை கேட்டு முடித்ததும் “டெல்லி இதை அப்படியே வைத்திரு. நிச்சயம் வருகிறேன்” என்றாராம் சேதுபதி. அதன்பிறகு கால்ஷீட் ஒதுக்கும்வரை அவ்வப்போது தொடர்புகொண்டு நலம் விசாரிப்பாராம்.
ஓர் இளம் அரசியல்வாதி எப்படியாவது முன்னுக்கு வந்துவிட வேண்டும் என்றும் வெகு விரைவாக அரசியல் களத்தில் சாதிக்கவேண்டும் என்றும் நினைக்கிறான். குறுகிய கால இலக்கு என்பதால் அதற்குத் தேவைப்படும் துரோகங்கள், சிறுசிறு வஞ்சகங்கள், காலை வாரிவிடுதல் என எதற்கும் அவன் அஞ்சுவதில்லை. இது தொடர்பான அடுத்தடுத்த சம்பவங்களுடன் கதை திரையில் விரியும் என்கிறார் இயக்குநர்.
“சிலருக்கு மட்டுமே இந்த உண்மை தெரிந்திருக்கும். சேதுபதி நல்ல எழுத்தாளர். கமல் சார் மாதிரியான ஒருவர் அமர்ந்துள்ள இடத்துக்கு அருகே செல்லக்கூடிய தகுதி உடையவர். அனுபவம் கூடும்போது அவரது திறமை மேலும் அழகாக வெளிப்படும். இந்தப் படத்தின் இடைவேளையின்போது சேது மட்டுமே இடம்பெறும் ஒன்பது நிமிடக் காட்சி உள்ளது. கிட்டத்தட்ட நாடகம் போன்ற அமைப்புதான். ஆனால், ஒற்றை ஆளாக நின்று களமாட வேண்டும்.
“இவ்வளவு சிரமமான களத்தில் அவர் தன் நடிப்பை வெளிப்படுத்திய விதம் மிரள வைத்தது. மொத்தப் படக்குழுவும் திகைத்துப் போனது. சேது இந்தக் காட்சியில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். நாங்கள் அனைவரும் அசந்து நிற்க, அந்தக் காட்சியை கட் சொல்லி முடித்து வைத்ததும் அவர்தான். படம் வெளியான பிறகு மீண்டும் பேசுவேன்,” என்கிறார் டெல்லி பிரசாத்.