நயன்தாராவுக்கு எப்போது திருமணம் என்பது அவருக்காவது தெரியுமா என்கிற அளவுக்குச் சந்தேகம் பரவிக்கிடக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே அவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிப்பது ஊரறிந்த ரகசியம். இருவருக்கும் இதோ திருமணம், ஆறு மாதங்களில் திருமணம் என்றே மாறி மாறித் தகவல்கள் வருகின்றனவே தவிர எதுவும் ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை.
இந்நிலையில் 2020ம் ஆண்டு பிற்பாதியில் இந்தக் காதல் ஜோடியின் திருமணம் நடைபெறும் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பியிருந்தனர். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் முளைத்திருப்பதாக தமிழக முன்னணி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா விவகாரத்துக்கு முன்பிருந்தே விக்னேஷ், நயன்தாரா ஜோடி தொடர் ஆன்மீகப் பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். முதலில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருவரும் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.
இதையடுத்து திருச்செந்தூர் முருகன் கோவிலில் இந்தக் காதல் ஜோடியைக் காணமுடிந்தது. இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதுமே நயன்தாரா சைவத்துக்கு மாறிவிட்டதாகவும் அவர் விரதமிருந்து பகவதி அம்மனைத் தரிசித்ததாகவும் ஒரு பேச்சு கிளம்பியது.
நயன்தாரா, விக்னேஷ் இருவரும் சில கோவில்களுக்குச் சென்று வழிபட இருப்பதாக இருவருக்கும் நெருக்கமான வட்டத்தில் இருப்பவர்கள் தெரிவித்தனர். ஆனால், சம்பந்தப்பட்ட இருவரும் இதுபற்றி வாய்திறக்கவில்லை.
இந்நிலையில் நயன்தாரா ஜோதிடத்தில் தீவிர கவனம் செலுத்தி வருவதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. திரையுலகத்தினருக்கு நன்கு அறிமுகமான அந்த ஜோதிடர், நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் உச்ச நாயகியாக வளர்ச்சி காண்பார் என்று கூறினாராம். இதையடுத்து அவர் சொல்வது போலவே நயன்தாரா செயல்படுவதாக கோடம்பாக்கத்தில் முணுமுணுக்கின்றனர்.
“அந்த வகையில் காளஹஸ்தி, பகவதி அம்மன், திருச்செந்தூர் முருகன் கோவில் ஆகிய ஆன்மீகத் தலங்களை அடுத்து, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் கோவிலுக்கும் சென்று வருமாறு அந்த ஜோதிடர் அறிவுறுத்தி உள்ளார்.
“ராகு பகவான் திருத்தலத்துக்குச் சென்று வந்தால் திருமணத்தடை நீங்கும் என்பதே அவரது அறிவுறுத்தலாக இருந்திருக்கிறது. ஆனால், அங்கு செல்வதற்கு முன்பே கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்துவிட்டதால் ஏமாற்றத்தில் உள்ளாராம் நயன்தாரா.
“ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் நயன், விக்னேஷ் ஜோடியை திருநாகேஸ்வரத்தில் காணமுடியும்,” என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். இருவரும் ராகு பகவானை தரிசித்தபின் திருமணம் செய்துகொள்வார்களா, அல்லது திருநாகேஸ்வரம் ஆலயத்திலேயே திருமணத்தை வைத்துக்கொள்ளப் போகின்றார்களா என்பது அவர்கள் இருவருக்கும்தான் வெளிச்சம்.