நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் தொடர்ந்து தமக்கு மிரட்டல் விடுத்து வருவதாக நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.
தினமும் பல்வேறு திறன்பேசி எண்களில் இருந்து தமக்குப் பலவிதமான மிரட்டல்கள் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் கோடம்பாக்க வட்டாரங்களில் சலசலப்பு நிலவுகிறது.
சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இணைந்து நடித்துள்ளார் மீரா மிதுன். இந்நிலையில் சூர்யாவுக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியவில்லை என்றும் சாதாரண காட்சியில் நடிப்பதற்குக்கூட 20 ‘டேக்’ வாங்குவார் என்றும் தமது சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் மீரா கிண்டல் செய்திருந்தார்.
இதற்கு சூர்யா ரசிகர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே ரஜினி, விஜய், தனுஷ் குறித்தும் இவர் இவ்வாறு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமக்கு தினந்தோறும் மிரட்டல் வருவதாக மீரா கூறியுள்ளார்.
“சூர்யா, விஜய் ரசிகர்களிடமிருந்து மிகவும் மோசமான குறுந்தகவல்கள், கைபேசி அழைப்புகள், பாலியல் மிரட்டல்கள் வருகின்றன. உங்கள் மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ இதுபோல் நடந்தால் ஏற்பீர்களா? எனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு சூர்யாதான் பொறுப்பு,” என்று அண்மைய சமூக வலைத்தளப் பதிவில் மீரா மிதுன் மேலும் தெரிவித்துள்ளார்.