சத்தமில்லாமல் ஒரு இந்தி இணையத் தொடரில் நடித்துள்ளார் பிரியா ஆனந்த். அதுமட்டுமல்ல முதன்முறையாக இந்தியில் பின்னணிக் குரலும் கொடுத்திருக்கிறாராம்.
இதனால் மனம் நிறைந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் தொடர்ந்து பல விஷயங்களைப் பதிவிட்டு வருகிறார். இந்த உற்சாகம் ரசிகர்களையும் தொற்றிக்கொண்டுள்ளது.
‘சிம்பிள் மர்டர்’ என்ற இணையத் தொடரில் முகமட் அயூப், சச்சின், பதக், முகேஷ் சப்ரா, அயஸ்கான் உள்ளிட்டோர் பிரியாவுடன் இணைந்து நடித்துள்ளனர். கடைசியாக தமிழில் விக்ரம் மகன் துருவ்வுடன் ‘ஆதித்ய வர்மா’வில் நடித்திருந்தார் பிரியா. அதன்பிறகு தமிழில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ‘ஆதித்ய வர்மா’ எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் பிரியாவுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் ‘சிம்பிள் மர்டர்’ வாய்ப்பு தேடிவர, எந்தவிதத் தயக்கமும் இன்றி ஒப்புக் கொண்டாராம்.
“படப்பிடிப்பு தொடங்கி மூன்று வாரங்களுக்குப் பிறகே சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிடுகிறேன். கடந்த மூன்று வாரமும் உற்சாகமாகக் கழிந்தது. முதன்முறையாக மின்னிலக்கத் தளத்தில் கால்பதித்துள்ளேன்.
“அதுமட்டுமல்ல, முதன்முறையாக இந்தியில் சொந்தக் குரலில் வசனங்களைப் பேசியிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. தொடர்ந்து இதுபோன்ற வாய்ப்புகள் கிடைத்தால் எனது திரைப்பயணம் மேலும் சிறப்பாக அமையும்,” என்று தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார் பிரியா.
ஊரடங்கு வேளை என்பதால் அரசு அறிவுறுத்தி உள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகவும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.
கொரோனா கிருமித்தொற்றின் தாக்கம் அதிகமிருப்பதால் நான் கவனமாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் அறிவுரை கூறியுள்ளனர். இந்த அன்பு நெகிழ வைக்கிறது,” என்கிறார் பிரியா.