நட்சத்திர நாயகியாக உருவாகவேண்டும் என்னும் ஆசை தமக்கு அறவே இல்லை என்கிறார் நந்திதா ஸ்வேதா.
ரசிகர்களைத் திருப்திபடுத்தும் கதைகளில் நடிக்கவேண்டும் என்பது மட்டுமே இதுவரை தமது இலக்காக இருந்து வந்துள்ளது என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“என்னைப் பொறுத்தவரை ரசிகர்களுக்குத்தான் முன்னுரிமை. ஏனெனில் ஒரு திரைப்படம் வெற்றி காண்பதும் தோல்வி அடைவதும் ரசிகர்களின் கையில்தான் உள்ளது. படம் ஓடினால்தான் நான் பெரிய நட்சத்திரம். இல்லையென்றால் அடுத்த வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும்.
“ஒரு நடிகையாக தரமான படங்களில் நடித்து அடுத்தடுத்த கட்டங்களை எட்டிப் பிடிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஒரு கதையைக் கேட்கும்போதே நமக்கு அதில் நடிக்கவேண்டும் எனும் உணர்வு ஏற்பட வேண்டும்.
“மனதுக்குப் பிடித்த கதையாக அமைந்து, அந்தப் படத்தைத் திரையரங்கில் கண்டு ரசிக்க ரசிகர்கள் மீண்டும் வருவார்கள் என்று நம்பிக்கை அளிக்கும் கதைகளில்தான் நடிக்க விரும்புகிறேன். இதுவரையில் கூடுமானவரை அப்படிப்பட்ட கதைகளையே தேர்வு செய்திருப்பதாக நம்புகிறேன்,” என்கிறார் நந்திதா.
இதுவரை திகில், நகைச்சுவை நிறைந்த படங்களில் நடித்திருப்பவர், கிராமத்துப் பெண்ணாகவும் நிறைய நடித்தாகி விட்டது என்கிறார்.
ஒரே ஒரு படத்திலாவது அம்மன் வேடத்தில் நடிக்கவேண்டும் என விரும்புகிறாராம்.
தமிழில் பக்திப் படங்கள் வெளிவந்து நீண்ட நாட்களாகி விட்டதாக சுட்டிக்காட்டுபவர், இவ்வாறு நீண்ட இடைவெளி இருக்கும்போது அத்தகைய படங்கள் வந்தால் நிச்சயம் வெற்றி பெறும் என்கிறார்.
நந்திதாவைப் பற்றி கிசுகிசுக்கள் அதிகம் வந்ததில்லை. விருந்து, கேளிக்கை நிகழ்வுகள் எல்லாம் இவருக்கு அறவே பிடிக்காதாம். அத்தகைய நிகழ்வுகளில் ஒலிக்கும் இசையின் இரைச்சலும் பங்கேற்கும் பெரும் கூட்டமும் தமக்கு ஒத்துவராது என்கிறார்.
“என் தோழிகள் பலர் விருந்து நிகழ்வுகளுக்கு என்னை அழைத்துள்ளனர். ஆனால் ஒருமுறை கூட நான் சென்றதில்லை. ‘திரைத்துறையில் பணியாற்றிக் கொண்டு விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கப் பிடிக்கவில்லை என்று சொல்கிறாயே’ என்று பலர் என்னை வறுத்தெடுத்துள்ளனர். ஆனால் நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை,” என்கிறார் நந்திதா.
அப்படியானால் படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நேரங்களில் என்ன செய்வாராம்?
“வேறென்ன, முடிந்தவரை தூங்குவேன். அதிலும், தூக்கம் என்றால் சாதாரண தூக்கமல்ல, கும்பகர்ணனே தோற்றுப் போகும் அளவுக்குத் தூங்குவேன். ஒருமுறை காலை 10 மணிக்கு தூங்கப் போவதாகச் சொல்லிவிட்டு படுத்தவள்தான். மறுநாள் காலைதான் கண்விழித்தேன்.
“அதிகபட்சமாக தொடர்ந்து 31 மணி நேரம் கூட தூங்கியுள்ளேன். ஆனால், இந்த ஊரடங்கின்போது வீட்டிலேயே அடைந்து கிடந்தாலும் முழுமையான ஓய்வு கிடைத்தாலும் அவ்வாறு தூங்க முடியவில்லை.
“எனக்கு விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். நன்றாக பேட்மின்டன் ஆடுவேன். யோகாசனத்திலும் கணிசமான நேரத்தைச் செலவிடுவேன்,” என்று சொல்லும் நந்திதாவைப் பற்றி அதிகம் தெரியாதவர்களுக்காக இந்தத் தகவல்.
இவரது இயற்பெயர் ஸ்வேதா. கன்னடத்தில் ‘நந்தா லவ்ஸ் நந்திதா’ என்ற படத்தில் அறிமுகமானதால் நந்திதா என்ற பெயரிலேயே நடித்து வந்தார்.
எனினும், நந்திதா தாஸ், நந்திதா ராஜ் எனப் பல நடிகைகள் இருந்ததால் பெயர்க் குழப்பம் வரக்கூடாது என்பதற்காக நந்திதாவுடன் இயற்பெயரையும் சேர்த்துக்கொண்டாராம்.
“இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் நடித்தபிறகு அதில் நான் ஏற்ற கதாபாத்திரமான குமுதா என்ற பெயரும் ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டது. தமிழ் ரசிகர்கள் குமுதா என்றுதான் என்னைக் குறிப்பிடுகிறார்கள்.
“அதேபோல் தெலுங்கில் அமுதா என்ற பாத்திரத்தில் நடித்தபிறகு அங்கு அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. இப்படி எனக்குப் பல செல்லப் பெயர்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று சொல்பவர் தற்போது அரவிந்த்சாமியுடன் ‘வணங்காமுடி’, காவல்துறை பெண் அதிகாரியாக ‘ஐபிசி 376’, சிபிராஜுடன் ‘கபடதாரி’ என பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.