பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். ஸ்ரீபதி பண்டிதராத்யுல பாலசுப்ரமணியம் என்ற எஸ்பிபியின் சொந்த ஊர் தமிழக - ஆந்திரப் பிரதேச எல்லையில் அமைந்துள்ள கொனேட்டம்பட்டு ஆகும்.
கடந்த 1946ஆம் ஆண்டு ஜூன் 4ம் தேதி பிறந்த எஸ்பிபி, சிறு வயதிலேயே இசையில் ஆர்வம் கொண்டிருந்தார்.அதனால்தான் முறைப்படி கர்நாடக சங்கீதம் பயிலாவிட்டாலும் அவரால் மிகச்சிறந்த பாடகராக உருவெடுக்க முடிந்தது. எஸ்பிபியின் தந்தை எஸ்பி. சாம்பமூர்த்தி ஒரு ஹரிகதா கலைஞர்.
வழிகாட்டிய குரு: கோதண்டபாணி
பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் சென்னையில் உள்ள கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்தார். அச்சமயம் கல்லூரி அளவில் நடைபெற்ற இசைப்போட்டிகளில் பல்வேறு பரிசுகளை வென்ற அவர், 1964ஆம் ஆண்டு தெலுங்கு இசையமைப்பாளர் எஸ்.பி. கோதண்டபாணியும் பாடகர் கண்டசாலாவும் நடுவர்களாக இருந்த மெல்லிசைக் கச்சேரிகளுக்கான போட்டியில் முதல் பரிசை வென்றார்.
இதையடுத்தே அவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு கோதண்டபாணி மூலம் கிடைத்தது. அவரையே பின்னர் தமது குருவாகவும் வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டார் எஸ்பிபி.
தமிழில் பாடி வெளியாகாத முதல் பாடல்
1966ஆம் ஆண்டு தெலுங்குப் படத்தில் தமது முதல் பாடலைப் பாடிய எஸ்பிபி, பின்னர் தமிழிலும் அறிமுகமானார். தமிழில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த ‘ஹோட்டல் ரம்பா’ படத்தில் இவர் பாடியிருந்த நிலையில் அந்தப் படம் வெளியாகவில்லை.
அதன்பிறகு எம்ஜிஆர். நடித்த ‘அடிமைப்பெண்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆயிரம் நிலவே வா’ என்பதே இவர் தமிழில் பாடி வெளியான முதல் பாடலாக அமைந்தது. எஸ்பிபி திரையுலகில் அறிமுகமான புதிதில், நீண்ட காலமாக மூத்த பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜனுக்கு மாற்றே இல்லை என்ற நிலை இருந்தது. எல்லாவிதமான பாடல்களையும் உயிரோட்டத்துடன் பாடும் தன்னுடைய திறமையால் தமிழ்த் திரையுலகில் மெல்ல காலூன்றினார் பாலா.
பெரும் புகழ் தந்த ‘சங்கராபரணம்’
1980ல் வெளிவந்த ‘சங்கராபரணம்’ எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் கலைப்பயணத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. இப்படத்துக்கு கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார். முறைப்படி கர்நாடக சங்கீதம் பயிலாதவர் என்றாலும் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மூலம் பெரும் சங்கீத வித்வான்களின் மனதையும் கவர்ந்தார் எஸ்பிபி.
இந்தப் படம் அவருக்கு சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.
விருதுகளை வாங்கிக்குவித்த அபார கலைஞர்
சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதை ஆறு முறை வென்றிருக்கிறார் எஸ்பிபி. இவர் பெற்ற மாநில அரசு விருதுகள், இதர அமைப்புகள் அளித்த விருதுகளின் பட்டியல் மிக நீளமானது.
நான்கு பல்கலைக்கழகங்களால் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். மேலும் இந்திய அரசின் பத்மபூஷணன் விருதையும் பெற்றவர்.
அண்மைய பேட்டி ஒன்றில், மறுபிறவி என்று ஒன்று இருந்தால் மீண்டும் எஸ்.பி.பாலாவாக பிறக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்று கூறியிருந்தார்.
“உலகெங்கும் உள்ள ரசிகர்கள் காட்டும் அன்பும் என் மீதான அக்கறையும் என்னை நெகிழ வைக்கிறது. அதற்கு பிரதிபலனாக எனது குரலால் அவர்களை மகிழ்விக்கிறேன். வாழ்க்கையில் இந்த ஒரு பாக்கியம் போதுமானது எனக் கருதுகிறேன்,” என்றார் பாலா. இது சாத்தியமானால் அவரது ரசிகர்கள் மகிழ்வார்கள்.