ஒருவழியாக ‘சூரரைப் போற்று’ படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது. அதேபோல் கடைசியாக அறிவித்தபடி நவம்பர் 12ஆம் தேதி படம் வெளியீடு காண்பது உறுதி என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முன்னோட்டம் மிகச்சிறப்பாக இருப்பதாக ரசிகர்களும் பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
முன்னோட்டம் வெளியான சில மணி நேரத்திலேயே ஆயிரக்கணக்கானோர் அதை இணையத்தில் கண்டு ரசித்து, தங்களுக்குப் பிடித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் படக்குழு உற்சாகம் அடைந்துள்ளது.
இந்நிலையில் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்ததன் மூலம் தமது நீண்டநாள் கனவு நனவானதாக உணரத் தோன்றுகிறது என்று படத்தின் நாயகி அபர்ணா பாலமுரளி தெரிவித்துள்ளார்.
“இயக்குநர் சுதா கொங்கரா அபாரமான திறமை கொண்டவர். இப்படத்தில் முன்னணிக் கலைஞர்கள் பலரும் பணியாற்றி உள்ளனர்.
“அவர்களுடன் இணைந்து பணியாற்றும் பெரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இப்படிப்பட்ட ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்ற கனவு நனவாகி உள்ளது,” என்று அபர்ணா கூறியுள்ளார்.
தாம் ஏற்ற கதாபாத்திரத்துக்காக மிகக் கடினமாக உழைத்திருப்பதாகவும் உடல், மன ரீதியாக தம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டி இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு முயற்சி, காதல், வாழ்க்கையில் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள், பறப்பதற்கான ஓர் இளைஞனின் கனவு என்று பல்வேறு அம்சங்களைக் கொண்ட கதையை இயக்குநர் திறமையாகக் கையாண்டிருப்பதாக பாராட்டும் அபர்ணா, கனவு காண்பவர்களுக்கு இந்தப் படம் பெரும் ஊக்கமாக அமையும்.” என்கிறார்.
இதற்கிடையே பிரபல நடிகர்கள் அபிஷேக் பச்சன், மாதவன் உள்ளிட்ட நடிகர்கள் ‘சூரரைப் போற்று’ முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் படம் பிரம்மாண்டமாகவும் நல்ல தகவல்களுடனும் வெளிவரும் என்பது உறுதியாகி இருப்பதாக பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ‘சூரரைப் போற்று’ தன் இதயத்துக்கு மிகவும் நெருக்கமான படம் என்று நாயகன் சூர்யா தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் மூலமாக சமூகத்துக்குத் தேவையான நல்ல கருத்து சொல்லப்பட்டிருப்பதாக அவர் தமது சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“இது வழக்கத்தைவிட சற்றே முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான படம் என்பேன்.
“இப்படத்தின் வாயிலாக, நாம் உண்மையாகவும் அர்ப்பணிப்பு உணர்வோடும் செயல்பட்டால் நம் கனவுகள் நனவாகும் செயலை எதுவும் தடுக்க முடியாது என்ற நல்ல செய்தியை சொல்ல விரும்புகிறோம். ரசிகர்கள் தங்கள் நிலையான ஆதரவைத் தொடர்ந்து வழங்குவார்கள் என்று நம்புகிறோம்,” என்று சூர்யா கூறியுள்ளார்.