தாம் காதலில் தோல்வி அடைந்தது உண்மைதான் என நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.
அந்தத் தோல்வியில் இருந்து மீண்டுவிட்டதாகவும் தன்னைப் பற்றி சிலர் வீண் வதந்திகளைப் பரப்பி வருவதாகவும் அவர் அண்மைய பேட்டியில் கூறியுள்ளார்.
'அங்காடி தெரு' படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சலி. பின்னர் 'எங்கேயும் எப்போதும்', 'மங்காத்தா', 'பலூன்', 'கலகலப்பு' உள்ளிட்ட படங்களில் நடித்துப் பெயர் பெற்றார்.
இவருக்கும் நடிகர் ஜெய்க்கும் இடையே காதல் மலர்ந்ததாக தகவல் பரவியது. எனினும் இருவரும் அதுகுறித்து வெளிப்படையாக ஏதும் அறிவித்ததில்லை. மறுப்பும் தெரிவித்ததில்லை.
இந்நிலையில் உடல் பருமன் காரணமாக திரையுலகில் இருந்து சிலகாலம் விலகியிருந்தார் அஞ்சலி. அதன்பின்னர் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு பழையபடி கட்டுக்கோப்பான உடல் வாகுடன் வலம் வந்தார்.
மேலும், குடும்பப் பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டவர் மீண்டும் படவாய்ப்புகளை இழக்க நேரிட்டது. அந்தச் சமயத்திலும் அவரது காதலர்தான் பல வகையிலும் ஆறுதல் அளித்து அவருக்குத் துணை நின்றதாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் தமது காதல் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார் அஞ்சலி. அத்தகைய தோல்வியால் ஏற்படும் மனவேதனையைத் தாங்கிக் கொள்வது மிகவும் கடினம் என்று அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"நடிகை என்பதால் என்னால் தோல்விகளைத் தாங்கிக்கொள்ள முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள். அது சரியல்ல. நானும் இவ்விஷயத்தில் சராசரிப் பெண்தான்.
"பொதுவாகவே காதல் தோல்வி என்பது பெண்களைத்தான் அதிகம் பாதிக்கிறது. பெண்களின் இதயம் கற்களால் ஆனவை அல்ல. அதனால் காதல் தோல்வியின்போது கடும் மனவேதனையை அனுபவித்தேன்," என்று அஞ்சலி தெரிவித்துள்ளார்.
தாம் காதல் வயப்பட்டதன் விளைவாக குழந்தை பெற்றுக்கொண்டதாகவும் தற்போது இரு குழந்தைகளுடன் சினிமாவை விட்டு ஒதுங்கி வாழ்ந்து வருவதாகவும் தகவல் பரவியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய பல தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை எனக் கூறியுள்ளார்.
"நான் யாரையும் காதலிக்கவே இல்லை என்று கூறமாட்டேன். நான் ஒருவரைக் காதலித்தது உண்மைதான். ஆனால், அந்தக் காதல் கைகூடவில்லை. இதுதான் உண்மை.
"ஒருவேளை எனது காதல் ஏற்றுக்கொள்ளப்பட்டு நல்லவிதமாக இருந்திருந்தால் அதுகுறித்து நானே வெளிப்படையாக விவரம் தெரிவித்திருப்பேன். ஆனால், எனது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. அந்த ஏமாற்றம் எனக்கு என்றும் இருக்கும்," என்கிறார் அஞ்சலி.
காதல் தோல்வி காரணமாக தாம் சில பட வாய்ப்புகளை இழந்தது உண்மைதான் என்று குறிப்பிட்டுள்ள அவர், அதுகுறித்து இப்போது கவலைப்பட்டு ஏதும் நடக்கப் போவதில்லை என்கிறார்.
காதல் தோல்வியால் ஏற்பட்ட வேதனையிலிருந்து தாம் வெளியே வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
"மனதைப் பாதிக்கும் ஒரு தோல்வியிலிருந்து மீண்டு வருவது எவ்வளவு சிரமம் என்பதை உணர்ந்துள்ளேன். இவ்வாறு மீண்டு, மீண்டும் என் பணியில் முழுக்கவனத்தையும் செலுத்த என் தாயார்தான் காரணம். அவர் மிக வலிமையான பெண்மணி.
"வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு மீண்டவர் என் தாய். நிறைய வேதனைகளை அனுபவித்திருக்கிறார். சிறுவயது முதல் அவரைப் பார்த்து வளர்ந்ததால் அவரைப் போலவே நானும் வலிமையான பெண்ணாக மாறவிரும்புகிறேன்.
"என் தாயார்தான் தோல்வியிலிருந்து மீண்டுவர எனக்கு தைரியம் அளித்தார். அவர் தொடக்கம் முதல் கொடுத்த ஊக்கத்தால்தான் திரையுலகில் இன்னும் என்னால் தாக்குப்பிடிக்க முடிகிறது.
"தொடர்ந்து சினிமாவில் நீடிப்பேன். எனக்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் என்னைத் தேடி வந்தடையும் என்றும் நம்புகிறேன். மிக விரைவில் என்னைத் திரையில் பார்க்க முடியும்," என்று சொல்லும் அஞ்சலி, அடுத்து சுந்தர்.சி இயக்கி தயாரிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாகத் தகவல்.
, :
அஞ்சலி