'மாஸ்டர்' உள்ளிட்ட சில படங்களின் வசூல் தமிழ்த் திரையுலகத்தினருக்குத் தெம்பளித்துள்ளது.
இதையடுத்து முன்னணி கதாநாயகர்கள் இப்போது நடித்து வரும் படங்கள் தொடர்பான பணிகளை வேகப்படுத்தி வருகின்றனர்.
"மேலும் தாங்கள் நடிக்கும் புதுப்படங்கள் குறித்து அண்மையத் தகவல்களையும் அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றனர்.
"இதனால் தங்கள் படம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்கின்றனர். சற்றே தாமதமாக வெளியீடு கண்ட படத்தின் வசூல் குறையாமல் இருக்க இந்த நடவடிக்கைகள் உதவும்," என்கின்றனர் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.
நடிகர் அருண் விஜய் நடிக்கும் 31வது படமான 'ஏவி 31'ன் முதல் தோற்ற சுவரொட்டி இன்று வெளியீடு காண்கிறது. தற்காலிகமாக 'ஏவி 31' என்று குறிப்பிடப்படும் இப்படத்தின் தலைப்பையும் இன்று அறிவிக்க உள்ளனராம்.
இப்படத்தில் ரெஜினா, உட்பட இரண்டு நாயகிகள் உள்ளனர். அறிவழகன் இயக்கத்தில் திகிலும் மர்மங்களும் நிறைந்த படமாக உருவாகிறது. அறிவழகன் ஏற்கெனவே அருண் விஜய்யை வைத்து 'குற்றம் 23' படத்தை இயக்கியவர்.
வசூல் ரீதியில் வெற்றி பெற்ற அந்தப் படத்தை அடுத்து மீண்டும் அருணுக்கு ஏற்ற கதையுடன் அவர் களமிறங்கி உள்ளார். இதற்கிடையே இரண்டு முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் அருண் விஜய் ஒப்பந்தமாகி உள்ளார்.
*** 'வலிமை' படம் குறித்த அண்மையத் தகவல்களைச் சரிவர வெளியிடுவதில்லை என்று அஜித் ரசிகர்கள் தரப்பில் தொடர்ந்து புகார்கள் எழுப்பப்பட்டு வந்தன. இந்நிலையில் அண்மையில் வெளியான தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இப்படத்தில் இடம்பெறும் ஒரு துரத்தல் காட்சிக்காக பெரிய பேருந்து ஒன்றை அஜித் ஓட்டிச்சென்றாராம். படத்தின் முக்கியமான கட்டத்தில் இடம்பெறும் இந்த சண்டைக்காட்சியில் நடிப்பது ஆபத்து நிறைந்தது என்று இயக்குநர் எச். வினோத், அவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அஜித்தோ 'டூப்' கலைஞர் தேவையில்லை என்றும் தானே நடிப்பதாகவும் திட்டவட்டமாகக் கூறிவிட்டாராம்.
"'வலிமை' படத்தின் மிக அதிரடியான காட்சியாக இந்த துரத்தல் காட்சி இருக்கும். ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி மகிழ்வார்கள்," என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
*** 'அண்ணாத்த' படம் மீண்டும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்காக ஹைதராபாத்துக்கு தனி விமானத்தில் பறந்து சென்றார் ரஜினி.
படப்பிடிப்பின்போது ரஜினியும் இயக்குநர் சிவாவும் பேசிக்கொண்டிருக்கும் காட்சியுடன் கூடிய புகைப்படம் ஒன்றைத் தயாரிப்புத் தரப்பு வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்த் அதில் வேட்டி சட்டையில் இளமைத் தோற்றத்தில் காணப்படுகிறார்.
இந்தப் புகைப்படத்தைக் கண்டு ரசிகர்கள் உற்சாகமடைந்ததுடன் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர். கிராமத்துப் பின்னணியில் உருவாகி வரும் 'அண்ணாத்த' இந்தாண்டு தீபாவளிப் பண்டிகையின்போது திரை காண்கிறது.
ஹைதராபாத் படப்பிடிப்பில் ரஜினியுடன் சூரியும் பங்கேற்றுள்ளார். ரஜினியுடன் இணைந்து நடிப்பது இதுதான் முதல் முறை என்பதால் ரசிகர்களைப் போலவே சூரியும் உற்சாகத்தில் உள்ளார்.
"தலைவர் படப்பிடிப்புத் தளத்தில் கலக்குகிறார். இது வேறு லெவல் எனர்ஜி. அவருடன் நடிப்பதில் மகிழ்ச்சி," என்று அண்மைய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் சூரி.
*** 'கர்ணன்' படம் வெளியான மூன்று நாள்களில் 23 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். தனுஷ் நடித்து வெளியான படங்களில் தமிழகத்தில் அதிக வசூல் கண்ட திரைப்படம் இதுதான்.
இந்தியில் 'அந்த்ராங்கிரே' படத்தை முடித்துள்ளார் தனுஷ். மேலும் 'தி கிரே மேன்' என்ற ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். இதையடுத்து நான்கு புதிய படங்களில் நடிக்கிறார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷின் 43வது படம் உருவாகிறது. அதன் பின்னர் தன் அண்ணன் செல்வராகவனின் 'நானே வருவேன்' படத்திலும் ராம்குமார், அருண் மாதேஸ்வரன் படங்களிலும் நடிக்கிறார்.

