'அன்பை வாங்கிக்கொள்ளுங்கள்'
அண்மையில் 'மண்டேலா' திரைப்படத்தைப் பார்த்துள்ளார் பிரியா பவானி சங்கர். அந்தப் படம் தம்மை வெகுவாகக் கவர்ந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
அஸ்வின் இயக்கத்தில் யோகிபாபு நாயகனாக நடித்துள்ள படம் இது. விமர்சன, வசூல் ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
"நன்கு யோசித்துப் பார்த்தால் கடந்த சில நாள்களில் என் கண்ணில், கருத்தில் பதிந்த ஒரே நல்ல விஷயம் 'மண்டேலா'தான். இயக்குநர் மடோனா அஸ்வின், யோகிபாபு அண்ணா... என் அன்பை வாங்கிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் வேறொன்றுமில்லை. நன்றி வணக்கம்," என தமது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.
நன்றி தெரிவித்த சாக்ஷி அகர்வால்
நடிகை சாக்ஷி அகர்வால் காவல்துறைக்கு நன்றி தெரிவித்து சமூக வலைத்தளப் பதிவில் பதிவிட்டுள்ளார்.
அண்மையில் சென்னையில் உள்ள மேம்பாலத்தின் மீது சென்றபோது இவரது கார் திடீரெனப் பழுதடைந்து நின்றுவிட்டதாம். அப்போது அங்கு வந்த காவல்துறை அதிகாரி ஒருவர் காரை அகற்ற உதவி உள்ளார்.
"நீண்ட நேரமாக காரை அகற்றப் போராடியபோது அங்கு வந்த போலிஸ் அதிகாரி ஒருவர் உதவி செய்தார். என்னால் முடங்கிய போக்குவரத்து சீராகி வாகனங்கள் செல்லத் தொடங்கிய பிறகுதான் நிம்மதியாக உணர்ந்தேன்.
போலிசார் இப்படி வலிய வந்து உதவி செய்வது பாராட்டுக்குரியது. அவருக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் நன்றி. உழைப்பாளர் தினத்தன்று இந்த அனுபவம் ஏற்பட்டது," என்று சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால்.
அவருக்கு உதவிய காவல்துறை அதிகாரியை ரசிகர்களும் பாராட்டி உள்ளனர்.
சேவைக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு தரப்புகளில் இருந்து உதவிகள் குவிந்து வருகின்றன.
சினிமா கலைஞர்கள் தனிப்பட்ட வகையில் நிதியளிப்பதுடன் நிதி திரட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இந்தி நடிகர் அக்ஷய் குமார் கொரோனா பரவல் தடுப்புப் பணிகளுக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். நடிகை பிரியங்கா சோப்ரா 'கிவ் இந்தியா' என்ற அமைப்புடன் இணைந்து நிதி திரட்டுகிறார்.
லண்டனில் இருந்தபடி நிதி திரட்டும் அவருக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் ஒரேநாளில் 1.85 கோடி ரூபாய் திரண்டுள்ளதாம். இந்தத் தொகையைக் கொண்டு பெங்களூரு, மும்பையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் ஏற்பாடு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இளம் நடிகை ஆலியா பட்டும் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். தன்னைப்போல் மற்றவர்களும் இத்தகைய சமூகப் பணியில் ஈடுபட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.