மீண்டும் தமிழ்ப் படத்தில் ரீமா
நடிகை ரீமா கல்லிங்கல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்கிறார்.
சண்டைப் பயிற்றுவிப் பாளர் ஸ்டண்ட் சில்வா இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் ரீமாவை முக்கியக் கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
"சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்கிறேன். தமிழ் ரசிகர்களை மீண்டும் சந்திக்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்தில் சமுத்திரகனி, இயக்குநர் சுப்ரமணியன் சிவா, நடிகை சாய்பல்லவியின் இளைய சகோதரி பூஜா, ஆகியோரும் நடித்துள்ளனர்.
"இயக்குநர் விஜய் கதை எழுதியுள்ளார். நல்ல குழு என்பதால் தயக்கமின்றி நடிக்க ஒப்புக்கொண்டேன்," என்கிறார் ரீமா கல்லிங்கல்
விஜய்க்கு வில்லனாகும் ஜான்
விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 65' படத்தின் வில்லனாக இந்தி நடிகர் ஜான் ஆப்ரகாம் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ஜார்ஜியாவில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க இந்தி நடிகர் ஜான் ஆப்ரஹாமை ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல். அடுத்த கட்ட படப்பிடிப்பில் அவர் பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது. மலையாள நடிகர் சைன் டாம் ஷாக்கோவையும் முக்கியக் கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனராம். மேலும் திடீர் திருப்பமாக இப்படத்தில் இயக்குநர் செல்வராகவனும் வில்லனாக நடிப்பார் என கூறப்படுகிறது.
சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் மிரளவைக்கும் வகையில் அவரது கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஞாயிற்றுக்கிழமை சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவியது எனினும் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
நடிகர் 'ஜோக்கர்' துளசி காலமானார்
பழம்பெரும் நடிகர் 'ஜோக்கர்' துளசி கொரோனா கிருமித்தொற்றுப் பாதிப்பால் உயிரிழந்தார்.
'மருதுபாண்டி', 'உடன்பிறப்பு', 'தமிழச்சி', 'இளைஞரணி', 'அவதார புருஷன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் துளசி.
மேலும் சின்னத்திரை தொடர்களிலும் முத்திரை பதித்தவர். 'கோலங்கள்', 'வாணி ராணி', 'கேளடி கண்மணி' எனப் பல தொடர்களில் துளசி நடித்துள்ளார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா தொற்றால் இயக்குநர் தாமிரா, கே.வி.ஆனந்த், நடிகர் பாண்டு ஆகியோர் அண்மையில் உயிரிழந்தனர். இந்நிலையில் தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த மற்றொரு நடிகர் காலமானது கலைஞர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.