உருவாகிறது 'துக்ளக் தர்பார்-2'
அண்மையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'துக்ளக் தர்பார்'. இதில் பார்த்திபன், சத்யராஜ் இருவரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என இயக்குநர் அறிவித்துள்ளார்.
இரண்டாம் பாகத்தில் சேதுபதியும் சத்யராஜும் மோதிக் கொள்வார்கள் என்றும் அதற்கேற்ப கதைக்களம் அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 10ஆம் தேதி சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது துக்ளக் தர்பார். அதையடுத்து மறுதினமே ஓடிடி தளத்தில் வெளியானது.
தொடர் தாமதம்: ஹன்சிகா வருத்தம்
ஹன்சிகா மோத்வானியின் நடிப்பில் உருவாகி உள்ள 'மஹா' படம் சில மாதங்களுக்கு முன்பே வெளியீடு காணத் தயாராகிவிட்டது.
எனினும், படம் வெளியானபாடில்லை.
பணப் பிரச்சினைதான் இதற்குக் காரணம் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், கொரோனா விவகாரம், ஊரடங்கு காரணமாகவே படத்தின் வெளியீடு தாமதமாகிவிட்டது என்றும் விரைவில் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப் படும் என்றும் தயாரிப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாமதத்தால் ஹன்சிகா வருத்தத்தில் மூழ்கியுள்ளாராம். இது நாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகி உள்ள படம். சிம்பு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனால் அவரது ரசிகர்களும் இப்பட வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
உலக திரைப்பட விழாவில் 'கர்ணன்'
தனுஷ் நடிக்கும் படங்கள் சத்தமின்றி சில சாதனைகளைத் தொடர்ந்து படைத்து வருகின்றன. 'ரவுடி பேபி' பாடலை இணையத்தில் கோடிக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.
அவர் நடித்த படங்களையும் இணையத்தில் பார்ப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'கர்ணன்' திரைப்படம் ஜெர்மனி திரைப்பட விழாவில் திரையிடப்பட தேர்வாகி உள்ளது. ஃபிராங்ஃபர்ட் நகரில் அக்டோபர் மாதம் அனைத்துலக திரைப்பட விழா நடக்கிறது. மேலும், சில அனைத்துலக திரைப்பட விழாக்களிலும் 'கர்ணன்' திரையிடப்பட வாய்ப்புள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, வெற்றிமாறன் இயக்கும் படத்தில் தனுஷும் அவரது சகோதரர் செல்வராகவனும் இணைந்து நடிக்க இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. எனினும், சம்பந்தப் பட்ட மூவரும் இது குறித்து எதுவும் கூறவில்லை. ஆனால், அப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.