வித்தியாசமான, கனமான கதாபாத்திரங்கள் என்றால் உடனே ரெஜினா கஸான்ட்ராவின் பக்கம்தான் இயக்குநர்களின் பார்வை திரும்புகிறது. அவரும் நடிப்பில் குறைவைப்பதே இல்லை.
'கள்ளபார்ட்' படத்தின் இயக்குர் ராஜபாண்டியும் இந்தப் பாராட்டை வழிமொழிகிறார்.
"இந்தப் படத்தில் அரவிந்த்சாமி நாயகன் என்றால், ரெஜினாதான் நாயகி. ஆனால் இருவரும் ஜோடியல்ல. ஆனால் இருவருமே தத்தமது பாணியில் அசத்தலாக நடித்துள்ளனர்," என்கிறார் ராஜபாண்டி.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக தயாரிப்பில் உள்ளது இந்தப் படம். 90 விழுக்காடு படப்பிடிப்பை முடித்திருந்த வேளையில்தான் கொரோனா விவகாரம் தலைதூக்கியதாம்.
அதனால், படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதனால் விரக்தியின் உச்சத்துக்கே போய் வந்ததாகச் சொல்கிறார் இயக்குநர்.
"பத்து நாள்கள் படப்பிடிப்பு நடந்தால், அடுத்த சில தினங்களில் படத்தை வெளியிட்டுவிடலாம் என்று இத்தனை நாள்களாக காத்திருந்தோம். இடையில் ஒரு கட்டத்தில் தொடர்ந்து படங்களை இயக்கலாமா வேண்டாமா? புதுப்பட வேலைகளைத் தொடங்கலாமா? 'கள்ளபார்ட்' முழுமையடையுமா என மனதில் பல்வேறு கேள்விகள் எழுந்தன.
"ஒருவழியாகப் பட வேலைகள் மீண்டும் தொடங்கியபோது, 'தலைவி' படத்தில் நடிப்பதற்காக அரவிந்த்சாமி தன் தோற்றத்தையும் சிகையலங்காரத்தையும் மாற்றி இருந்தார். ரெஜினாவும் வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இப்படியே இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.
"இயக்குநரான எனக்கே மனக்கஷ்டம் அதிகம் என்றால், தயாரிப்பாளரின் நிலைமையை யோசித்துப் பாருங்கள். எனவே திரையரங்குகளில் வெளியாகுமா அல்லது 'ஓடிடி' வெளியீடா என்பதை அவர்தான் முடிவு செய்வார்," என்கிறார் ராஜபாண்டி.
'கள்ளபார்ட்' என்ற தலைப்பைத் தேர்வு செய்ய என்ன காரணம் என்று பலரும் கேட்கிறார்களாம். அதற்கு எளிமையாக விளக்கம் அளிக்கிறார்.
"கள்ளபார்ட் என்றால் திருடனாகவும் இருக்கலாம் அல்லது திருடன் வேடம் போடுகிறவராகவும் இருக்கக்கூடும். இப்படியொரு சிக்கலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கதை நாயகன் அரவிந்த்சாமி. அவருக்கு இதில் கணினி வன்பொருள் நிபணர் வேடம்.
"அந்தக் கால மேடை நாடகங்களில், 'ராஜபார்ட்', 'ஸ்திரீபார்ட்', 'கள்ளபார்ட்' என்றுதான் முக்கிய கதாபாத்திரங்களைக் குறிப்பிடுவார்கள். அங்கிருந்துதான் இந்தத் தலைப்பைத் தேர்வு செய்தேன். அரவிந்த்சாமி எப்படிப்பட்டவர் என்பதை உடனடியாகத் தீர்மானிக்க இயலாது.
'கள்ளபார்ட்' படத்தை தொடங்கியபோது ரெஜினா சராசரி நாயகியாக பல படங்களில் நடித்துக் கொண்டிருந்ததாகக் குறிப்பிடுபவர், அவரது திறமையின் மீது நம்பிக்கை வைத்து, தனது கதையின் நாயகியாக தேர்வு செய்தாராம் ராஜபாண்டி.
"கடந்த 2018ல் ரெஜினாவை சந்தித்துக் கதை சொன்னபோது, அவருக்கு மிகவும் பிடித்துப்போனது. அச்சமயம் நாயகனின் காதலி, காதல் பாடல் என்று வழக்கமான கதைகளில் நடித்து வந்தார். அதன் பிறகு பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
"ஆனால் எத்தனை கதைகள், கதாபாத்திரங்களில் நடித்தாலும் 'கள்ளபார்ட்' படம் அவ ரது திரைவாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இருக்கும். இதில் ஜும்பா நடன ஆசிரியையாக நடித்துள்ளார். இப்பாத்திரத்துக்கு ரெஜினாவை தவிர யாரும் பொருத்தமாக இருக்க வாய்ப்பில்லை.
"அதேபோல் அரவிந்த்சாமியும் அனுபவ நடிகர் எனும் பந்தா இல்லாமல் பேசிப் பழகினார். படப்பிடிப்பு தொடங்கிய இரண்டே நாள்களில் மொத்த படக்குழுவுக்கும் அவர் நண்பராக மாறிப்போனார். அவ்வப்போது சில கருத்துகள், ஆலோ சனைகளைப் பகிர்ந்து கொள்வார். கதையில் தலையிடமாட்டார்்," என்கிறார் ராஜபாண்டி.
, :
ரெஜினா