முன்பெல்லாம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகிகள் பல்வேறு எழுதப்படாத விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருந்ததாகச் சொல்கிறார் பிரியாமணி.
குறிப்பாக, நாயகிகள் என்றால் ஒல்லியாகவும் பார்க்கப் பளிச்சென்று நிறமாக இருக்கவேண்டும் என்றும் திரையுலகத்தினரும் ரசிகர்களும் விரும்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"நான் திரையுலகில் அறிமுகமான தொடக்கத்திலேயே சில சவாலான கதாபாத்திரங்கள் அமைந்தன. தமிழில் 'பருத்தி வீரன்', 'சாருலதா' ஆகிய இரு படங்களிலும் மிகக் கவனமாகவும் முழு ஈடுபாட்டுடனும் நடித்தேன். நல்ல பெயர் கிடைத்தது.
"எனது நிறம், உடல்வாகு குறித்தெல்லாம் நான் கவலைப்பட்டதே இல்லை. 1970களுக்கு முந்தைய காலகட்டத்தில் நாயகிகள் நிறமாகவும் ஒல்லியாகவும் இருக்கவேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. கட்டுப்பாடுகள் இல்லாமல் அவர்கள் வழியிலேயே நல்ல உடல்நலத்தைப் பேணி அழகாகவும் காட்சி அளித்தனர்.
"ஆனால், இந்தித் திரையுலக நாயகிகளை தமிழ் திரையுலகம் பார்த்ததிலிருந்து அவர்களைப் போலவே தென்னிந்திய நடிகைகளும் மாற வேண்டும் என்றும் கூறத்தொடங்கிவிட்டனர். ஆனால், நான் என்னை மாற்றிக்கொள்ளவில்லை," என்கிறார் பிரியா மணி.
வடஇந்தியப் பெண்களுக்கு நல்ல நிறமும் உடல்வாகும் இயற்கையாகவே அமைந்துவிட்டது என்று சுட்டிக்காட்டுபவர், தமிழகப் பெண்களிடம் அதேபோல் எதிர்பார்ப்பது சரியல்ல என்கிறார்.
"இதைப் புரிந்துகொள்ளாமல் தமிழ்த் திரைப்பட கதாநாயகிகள் சில நெருக்கடிகளுக்கு ஆளாகினர். ஆனால் இப்போது நிலைமை மாறி இருக்கிறது. இப்போது வடக்கிலும்கூட நமது நிறத்தை விரும்புகிறார்கள். நமது திறமையை மதித்து நல்ல வாய்ப்புகளை வழங்கத் தொடங்கி உள்ளனர். இந்த மாற்றமும் வரவேற்பும் நல்ல விஷயங்கள்.
"பாலிவுட்டைக் கடந்து ஹாலிவுட்டிலும்கூட நிறைய கதாபாத்திரங்களில் இந்தியர்களாகவே நம்முடைய நடிகர்கள் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்ற வகையில் மகிழ்ச்சி," என்கிறார் பிரியாமணி.
கதாநாயகர்களுக்கும்கூட எழுதப்படாத சில வரையறைகள் உள்ளன என்றாலும், அவர்கள் அதற்காக அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை என்று குறிப்பிடுபவர், நாயகர்களால் நீண்ட காலம் திரையுலகில் நீடித்து நிற்கமுடியும் என்பதால் அவர்கள் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை என்கிறார்.
நாயகியை மையப்படுத்தி உருவாகும் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் அப்படிப்பட்ட சில கதைகள் தம்மைத் தேடி வந்திருப்பதாகவும் சொல்கிறார் பிரியாமணி.
"இந்தியில் நடிக்கக் கேட்டு சில வாய்ப்புகள் வந்தபோது நான் அலட்சியப்படுத்தியதாக கூறப்படுவது தவறு. அனைத்து மொழிகளிலும் நடிக்க நான் தயார். எனினும், முன்பே ஒப்புக்கொண்ட படங்களை முடிக்க வேண்டியது அவசியம்," என்கிறார் பிரியாமணி.