ஆர்யா நடிப்பில் உருவாகி வருகிறது 'கேப்டன்'. இதற்கு முன்பு `டிக் டிக் டிக்', `டெடி' ஆகிய படங்களின் மூலம் நம்பிக்கைஊட்டிய இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜனோடு மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார் ஆர்யா.
இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி அண்மையில் வெளியாகி, ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையுடன் களமிறங்கி இருக்கிறார் ஆர்யா.
"எல்லா நாடுகளிலும் நெடுஞ்சாலைகள் இருக்கும். அவற்றில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தினமும் செல்லும். அதேசமயம் ஒற்றையடிப் பாதைகளும் இருக்கும். அவற்றில் நமக்கு முன்பு யாரேனும் ஒருவராவது சென்றிருப்பார். பாதையே இல்லாமல் திசைகாட்டியை உதவிக்கு வைத்துக்கொண்டு முன்னேறிச் சென்றால் எப்படி இருக்கும். அதை விவரிக்கும் வகையில் இருக்கும் இந்தப் படம்.
"ராணுவப் பின்புலம் கொண்ட கதை. இதில் நாயகனின் கதாபாத்திரம் புது ரகமாக இருக்கும். வெற்றிச் செல்வன் என்ற ராணுவ கேப்டனை மையப்படுத்தியுள்ள கதை. முழுப் படமும் அவரைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளது. கேப்டன் வெற்றிச் செல்வனின் தனிப்பட்ட பிரச்சினைகள், பணி நிமித்தமான அவரது போராட்டங்களைச் சொல்லியபடியே கதை நகரும்.
"கணினித் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கிய சில விநோத உயிரினங்களுடன் பெரிய அளவில் சண்டை போடுவார் ஆர்யா. காடுகளிலும் பனியிடங்களிலும் படத்தை உருவாக்கி உள்ளோம். முற்றிலும் வித்தியாசமான முறையில் காட்சிகளைப் படமாக்கி உள்ளோம்," என்கிறார் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன்.
முதல் தோற்றச் சுவரொட்டியில் இறுகிய முகத்துடன் காட்சியளிக்கிறார் ஆர்யா. ராணுவ அதிகாரியின் தோற்றத்துடன் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார்.
"எப்போதுமே நேர்மறையாகச் சிந்திப்பது ஆர்யாவிடம் உள்ள சாதகமான அம்சங்களில் மிக முக்கியமானது. இதை அவருடன் பணியாற்றிய அனைவருமே ஒப்புக்கொள்வார்கள். அவரைப் பார்த்தாலே ஒருவித புத்துணர்ச்சியும் நம்பிக்கையும் மனத்தில் தோன்றும்.
"கதாநாயகனாக நடிக்கும் ஒருவர் தனது உடல்நலத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கதாநாயகர்களின் முதலீடுகளில் அதுவும் ஒன்று. என்னதான் நடிப்புத்திறமை இருந்தாலும் உணவுப்பழக்கங்களில் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மீதான அக்கறை ஆகியவை இல்லாமல் அடிதடிப் படங்களில் நடிக்க இயலாது.
"ஆர்யாவைப் பொறுத்தவரை உடற்பயிற்சி வெறியர் எனலாம். மது, புகை என்று எந்தவிதமான கெட்டப் பழக்கங்களும் கிடையாது. அதனால் இந்தப் படத்தின் கேப்டன் கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்துள்ளார்," என்கிறார் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன். இப்படத்தின் நாயகன் மட்டுமல்ல, தயாரிப்பாளரும் ஆர்யாதான்.
'டெடி' படத்தில் சக்தியும் ஆர்யாவும் இணைந்து பணியாற்றியபோது ஒருவர் மீது மற்றொருவருக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடி வேளையில் மிகப்பெரிய தொகையை இந்தப் படத்துக்காக முதலீடு செய்தாராம் ஆர்யா. மேலும், சத்யம் திரையரங்க உரிமையாளர் சொரூப் ரெட்டியும் மற்றொரு தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.
"எப்போது, எது தேவை என்றாலும் தயாரிப்புத் தரப்பில் இருந்து எந்தக் கேள்வியும் வராது. ஆனால் நான் கேட்ட அனைத்தும் தயாராக இருக்கும். இதனால் நமக்கான பொறுப்பு கூடிவிடும். 'சார்பட்டா' படத்துக்குப் பிறகு, இன்னும் சரியாகச் சொல்லப்போனால் திருமணத்துக்குப் பிறகு ஆர்யாகிட்ட ஏதோ வேதிமாற்றம் நடந்திருக்கிறது.
"திருமணத்துக்குப் பின் அவர் நடித்த எல்லா படங்களும் வசூல் ரீதியில் வெற்றி கண்டுள்ளன. நடிப்பிலும் நிறைய மாற்றங்கள் தென்படுகிறது. எனவே தமிழ் சினிமா நாயகர்கள் இனி ஆர்யாவிடம் கவனமாக இருக்க வேண்டும். நம்மிடம் இயல்பாகப் பேசிக் கொண்டிருப்பவர், கேமரா முன்னால் நிற்கும்போது அடுத்த நொடியே முற்றிலும் மாறிப் போகிறார். அனுபவம் அவரை நன்கு புடம்போட்டுள்ளது," என்று பாராட்டுகிறார் சக்தி சௌந்தர்ராஜன்.
'கேப்டன்' படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, காவ்யா என்று பெண் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா லட்சுமிதான் முதன்மை நாயகி.
"தமிழ் தெரிந்த பெண் என்பதால் ஐஸ்வர்யாவுடன் பணியாற்றுவது எளிதாக இருக்கும். தமிழுக்குதான் அவர் புது நாயகி. ஏற்கெனவே தெலுங்கில் இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அனுபவம் உள்ளவர். முக பாவங்களில் அசத்துகிறார். உணர்வுபூர்வமான காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் இயல்பான நடிப்பு வியக்க வைத்தது.
"காட்டுக்குள் நடக்கும் அடிதடிக் காட்சிகளை திரையில் பார்க்கும் ரசிகர்கள் சிலிர்த்துப்போவார்கள். ஆனால் அவற்றைப் படமாக்க பட்ட சிரமங்களை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. தினமும் காட்டுக்குள் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருக்கும். அறைவண்டி (கேரவன்), கழிப்பறை வசதி என எதுவும் கிடையாது. ஆனால் அனைவரும் ஒத்துழைத்தனர்," என்றார் சக்தி.