மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் நேற்று சிங்கப்பூரில் ஷா, கெத்தே, கோல்டன் வில்லேஜ், கார்னிவெல் சினிமா ஆகியவற்றின் எல்லா திரையரங்குகளிலும் வெளியீடு கண்டது. வேலைநாளாக இருந்தபோதும் அத்தனை காட்சிகளுக்கும் அரங்கம் நிறைந்த கூட்டம். படம் பார்க்க வந்தவர்கள் பலரும் இளையர்கள். பெற்றோருக்கும் டிக்கெட் வாங்கி அழைத்து வந்தனர் பலர்.
தமிழ்ப் பதிப்பு மட்டுமே, இந்த வாரயிறுதியில் ஒவ்வொருநாளும் 280க்கும் அதிகமான காட்சிகள் சிங்கப்பூர் அரங்குகளில் இடம்பெறுகின்றன. இந்தி பதிப்பு வேறு உள்ளது. இத்தனை அதிகமான அரங்குகளில், இவ்வளவு காட்சிகள் இடம்பெறும் முதல் தமிழ்ப்படமாக ‘பொன்னியின் செல்வ’னே இருக்கலாம்.
‘பொன்னியின் செல்வன்’ தமிழ் சினிமாவின், தமிழ் மக்களின் கனவுப் படம். கிட்டத்தட்ட 70 ஆண்டு களுக்கு முன்னர் கல்கி எழுதிய ஐந்து பாகத் தொடர்கதையைப் படமாக எடுக்க எம்ஜிஆரும் கமலும் முயன்று, இப்போது இயக்குநர் மணிரத்னம் சாத்தியமாக்கியுள்ளார்.
ஜெயமோகன், குமரவேல், மணிரத்னம் ஆகியோரின் திரைக்கதை பெரும் நாவலை கச்சிதமான திரைக் காவியமாக்கியுள்ளது.
திரைக்காவியமாக மாறிய கற்பனை கலந்த வரலாற்றுக் கதை
அரியணை ஏறவேண்டிய மன்னன், முடியை இன்னொருவனுக்குச் சூட்டிவிட்டு 14 ஆண்டுகள் கடலோடி நாடுகள் பிடிக்கிறான். சோழப் பேரரசை விரிவாக்குகிறான். உலக வரலாற்றில் எங்குமே காண முடியாத பெரும் கதை இது.
இந்த ஒற்றை வரியைக் கொண்டு, 10ஆம் நூற்றாண்டில் தென்கிழக்காசியா வரை படையெடுத்து சோழப்பேரரசை விரிவாக்கிய இராசராச சோழனின் கதையை கற்பனை கலந்து கல்கி வடித்த கதாபாத்திரம், பொன்னியின் செல்வன்.
சோழ மன்னராக இருந்த சுந்தர சோழருக்கு மூன்று பிள்ளைகள். பட்டத்து இளவரசர் மூத்த மகன் ஆதித்த கரிகாலன், இரண்டாவதாக மகள் குந்தவை, இளைய மகன் அருண்மொழி வர்மன். இதில் ஆதித்த கரிகாலன் இராஷ்டிரகூடர்களுக்கு எதிராக போர் புரிந்து அதில் வெற்றியும் பெறுகிறார்.
தனது தந்தைக்கும் சோழ நாட்டிற்கும் எதிராக சதி நடக்கவிருப்பதை அறிந்த ஆதித்த கரிகாலன், தனது நண்பன் வந்தியத்தேவனை தஞ்சைக்கு ஒற்றனாக அனுப்பிவைக்கிறார்.
வந்தியத்தேவனின் பயணம் வழியாக நாவல் நகரும். ஆனால் திரைப்படம் அப்படியில்லை.
வீரம், அன்பு, பாசம், நட்பு, காதல், துரோகம், வஞ்சகம், போட்டி, பொறாமை என அனைத்தும் நிறைந்த ஒரு நாவலை இரண்டு பாகங்களில் திரைப்படமாக எடுக்க முடிந்திருப்பதும் தமிழ் கதைக்கு உலக மக்களிடம் இத்தனை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதும் முதல் வெற்றி.
கதாபாத்திரங்கள் வெற்றி
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ பதின்ம வயது இளைஞன். பெரியவர்களை மதிப்பவன். அமைதியும் அன்பும் நிதானமும் நிறைந்தவன். போர்த் திறத்தில் வல்லவன், கலைகளை ரசிப்பவன், யானைமொழி அறிந்தவன்.
நெற்றியில் நீறும், சண்டையில் தீரமும் பேச்சிலும் செயலிலும் நிதானமும் நிறைந்தவனாக, அருண்மொழி வர்மன் பாத்திரத்துக்கு உயிர்கொடுத்துள்ளார் ஜெயம் ரவி.
வந்தியத்தேவனாகவே மாறிவிட்டார் கார்த்தி. துறுதுறுவென்று படம் முழுக்க ஓடுகிறார், சண்டை போடுகிறார், பார்க்கும் பெண்களிடம் காதல் வசப்படுகிறார், ஆழ்வார்க்கடியானை வம்பிழுக்கிறார், அவசரப்போக்கால் மாட்டிக்கொள்கிறார், நகைச்சுவையாகப் பேசி படத்தை கலகலப்பாக்குகிறார்.
ஆதித்த கரிகாலனாக சில காட்சிகளில் மட்டுமே தோன்றும் விக்ரம், கோபத்தையும் தீரத்தையும் உணர்ச்சி ததும்ப வெளிப்படுத்தி உள்ளார். ‘ராவணன்’ படத்தை நினைவூட்டுகிறார்.
வஞ்சமும் கோபமும் நிறைந்த பேரழகி நந்தினியாக ஐஸ்வர்யா ராய், அரச குடும்பத்தை வழிநடத்தும் இளவரசி குந்தவையாக த்ரிஷா, விக்ரம், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், கிஷோர், ஐஸ்வர்ய லட்சுமி என்று அனைவரும் கல்கியின் பாத்திரங்களுக்கு உயிரூட்டியுள்ளனர். சிறு பெண்ணாக மயங்கி மயங்கி விழும், மென்மை நிறைந்த கொடும்பாளூர் இளவரசி வானதி பாத்திரத்தில் வரும் சோபிதா துலிபாலா பெரும் ஏமாற்றம்.
‘ஐமேக்ஸ்’ தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ள முதல் தமிழ்ப் படம் இது.
கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தை மட்டுமே அதிகம் பயன்படுத்தாமல், நேரடி இடங்களில் நடத்தப்பட்ட படப்பிடிப்பிலும் தோட்டா தரணியின் மிகப் பெரும் அரங்கங்கள் வழியாகவும் 10ஆம் நூற்றாண்டைக் கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள்.
ரவிவர்மனின் ஒளிப் பதிவும் தோட்டா தரணியின் கலை இயக்கமும் ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் மிகச் சிறப்பு. ஏ.ஆர் ரஹ்மானின் பின்னணி இசை, பாடல்கள் இன்னும் ஈர்க்கும் விதமாக அமைந்திருக்கலாம்.
அச்சர சுத்தமான நீண்ட தமிழ் வசனங்களில் வரலாற்றுப் படங்களைப் பார்த்து வளர்ந்தவர்களுக்கு இசைக்குள் அமுங்கிவிடும் சுருக்கமான பேச்சும் சிலரது தமிழ் உச்சரிப்பும் பாடல் வரிகளும் வருத்தத்தைத் தரலாம்.
ஏற்கெனவே பல தமிழ், பிற மொழிப் படங்களில் பார்த்த அதே போர்க் காட்சிகளை மீண்டும் மீண்டும் திரையில் காண்பது கொஞ்சம் அலுப்பூட்டலாம். கிராஃபிக்கிலும் காட்சியமைப்பிலும் இன்னும் சிறிது கவனம் செலுத்தியிருந்தால் போர்க் காட்சிகளில் ஏற்பட்ட சொதப்பலைத் தவிர்த்திருக்கலாம்.
தேவராட்டம் அருமை. கம்சன் வதம் நடனக்காட்சியையும் வடமொழி மந்திரங்களுடான பூரண கும்ப மரியாதையையும் காட்டியவர்கள், சிவபக்தர்களாக வாழ்ந்த சோழர்களை ஒரு தேவாரமாவது முழுமையாக பாட வைத்திருக்கலாமே என்ற ஆதங்கம் ஏற்பட்டால் அது நியாயமானதே.
தமிழர் சிறப்புகளில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்
துணைப் பாத்திரங்களைப் போலவே, முக்கிய பெண் பாத்திரங்கங்களும் மாநிறத் தமிழ் முகங்களாக இருந்திருந்தால் படம் இன்னொருபடி உயர்ந்திருக்கும். பாண்டியர்களுக்கு கருப்பும் சோழர்களுக்கு வெள்ளையும் என்பது போன்ற குறியீடுகள் பொருந்தாதவை. படத்தில் சீனர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் வரலாற்றுக்கு மாறாக அதிகமாகவே உள்ளது.
அனைத்திந்தியப் படமாக உலகெங்கும் பல மொழிகளில் வெளியீடு கண்டுள்ள இப்படத்தில் அன்றைய தமிழர்களின் கோயில், குடியிருப்பு உணவு, பானங்களையும் காட்டி தமிழின் தனிச் சிறப்பைக் காட்டியிருக்கலாம். ஒரு பொதுத்தன்மையே அவற்றில் இருந்தது.
நாவலின் சுருக்கத்தையும் கதைக் களத்தையும் வரைபடம் வழியாக படத்தின் தொடக்கத்தில் கூடுதலாக விவரித்திருந்தால் நாவலைப் படிக்காதவர்களுக்கு கதையைப் புரிந்துகொள்ள உதவியாக இருந்திருக்கும். பார்வையாளர்கள் நாவலின் கதைச் சுருக்கத்தையாவது படித்துவிட்டுச் சென்றால் படத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு பார்க்க முடியும்.
கல்கியின் நாவல், பாகுபலி போன்ற படங்கள் ஆகியவற்றுடன் ஒப்பீடுகளைச் செய்யாமல் இருந்தால் உலகப் பெரும் மன்னர்களில் ஒருவனான ராஜராஜ சோழனின் சிறுவயதுக் கதையை உலகத்துக்கு எடுத்துச் சொல்லும் பொன்னியின் செல்வன் சிறந்ததொரு படம்.
70 ஆண்டுகளுக்குப் பிறகு கல்கியின் நாவலுக்கு புத்துயிர் ஊட்டி, உலகெங்கும் வாழும் தமிழர்களை மீண்டும் தமிழ் வாசிக்க வைத்திருப்பது இப்படத்தின் மற்றொரு வெற்றி. சோழரின் புலிக்கொடியை உலகமெங்கும் பெரும் வரவேற்புடன் பறக்கவிட்டிருப்பது தயாரிப்பாளர் சுபாஸ்கரன், இயக்குநர் மணிரத்னம் ஆகிய இருவரின் மாபெரும் முயற்சி.
எனினும், தமிழர் சிறப்பை தமிழரும் உலகமும் அறியச் செய்வது இலக்கென்றான் அதை இப்படம் அடையவில்லை என்றே சொல்ல வேண்டும்.
கிட்டத்தட்ட 430 ஆண்டுகள் தமிழகத்தின் நிலப்பரப்புகளுக்கும் அப்பால், கடல்கடந்தும் விரிந்திருந்த பிற்காலச் சோழ வல்லரசின் தொடக்ககால கதை. தமிழரின் ஆடல், பாடல், ஓவியம், கட்டடக் கலைகள் சிறந்திருந்த காலம்.
குடத்துக் ஓலையில் பெயர் எழுதிப் போட்டு தலைவரைத் தேர்ந்தெடுக்கும் குடவோலை முறைமூலம் உலகத்திற்கு வாக்குச்சீட்டு முறையை உலகத்திற்கு அறிமுகம் செய்தவர்கள். கல்லணையும் வீராணம் ஏரியும் கட்டி, மிகச் சிறந்தொரு நீர்பாசன முறையை
உருவாக்கியவர்கள். வீரமும், கலைகளையும், அறிவும் நிர்வாகமும் சிறந்து தழைத்திருந்த தமிழரின் சிறப்பைச் சொல்லாலோ, காட்சியாலோ காட்ட இந்தப் படம் முனையவில்லை.
கதையைச் சொல்லிவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திலிருந்த படக்குழுவினர் தங்கள் வேரையும் அடையாளத்தையும் காட்சியாகப் பார்த்துப் பூரிக்க வரும் மக்களை மறந்துவிட்டார்கள்.
புலவர்களையும் சமயக்குரவர்களையும் கலைஞர்களையும் அறிஞர்களையும் போற்றி வளர்த்தவர்கள் தமிழ் மன்னர்கள். பழைய கருப்பு வெள்ளைத் தமிழ்ப் படங்களில் வருவதுபோல் இப்பெருமக்களை ஒரு காட்சியிலாவது அரசவையில் அமரவைத்து அழகுபார்த்திருக்கலாம். ஆதித்த கரிகாலனின் போர் வெறியையும் குடியாட்டத்தையும் காட்டியவர்கள், பொன்வேய்ந்த அவனது காஞ்சி மாளிகையையும் காட்டியிருக்கலாம்.
புத்தரின் பிரம்மாண்டத்தைக் காட்டியதுபோல், சோழர்களின் மாடக்கோயில்களையும் கற்கோயில் சிறப்புகளையும் காட்டியிருக்கலாம். பல கோயில்களை எழுப்பிய செம்பியன் மாதேவியின் சிவ வழிபாட்டைக் காட்டியிருக்கலாம். திருமுறையில் இடம்பெற்றிருக்கும் கண்டராதித்தின் ஒரு பாட்டைச் சொல்லியிருக்கலாம். கட்டியவீட்டுக்குக் குறைசொல்வது நோக்கமல்ல.
சினிமா எனும் பெரும் சக்தி வாய்ந்த ஊடகத்தில் வாரதுவந்த மாமணிபோல பல ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழரின் வரலாற்று பேசப்படும்போது, அது தமிழ் மக்களையும் மற்றவர்களையும் அசைத்துப் பார்க்கத் தவறிவிட்டதோ என்ற ஆதங்கம்தான். வழக்கம்போல இது மணிரத்னம் படம் என மௌனமாகப் போய்விட முடியவில்லை.
துணைப் பாத்திரங்களைப் போலவே, முக்கிய பெண் பாத்திரங்கங்களும் மாநிறத் தமிழ் முகங்களாக இருந்திருந்தால் படம் இன்னொருபடி உயர்ந்திருக்கும். பாண்டியர்களுக்கு கருப்பும் சோழர்களுக்கு வெள்ளையும் என்பது போன்ற குறியீடுகள் பொருந்தாதவை. படத்தில் சீனர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் வரலாற்றுக்கு மாறாக சற்று அதிகமாகவே உள்ளது. இதை ஒரு கற்பனைகள் நிறைந்த கதையின் திரைப்படமாக ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். உண்மை வரலாறாக உணர்ச்சி பொங்கத் தேவையில்லை.
இப்படத்தின் வர்த்தக வெற்றி, மேலும் பல தமிழ்க் கதைகள் பெரும் திரைப்படங்களாக வழிவகுக்கும். இதன்மூலம் தமிழ் சினிமாவும் தமிழ்ச் சிந்தனையும் வளர்ச்சியைக் காணும்.
ரூ.450 கோடி, 120 நாள்கள்தமிழ்ச் சினிமாவின் அண்மைய பிரம்மாண்டப் படைப்புகளைத் தயாரித்துள்ள லைக்கா நிறுவனம்தான் ‘பொன்னியின் செல்வன்’ படத்தையும் தயாரித்துள்ளது.
இப்படத்தின் மொத்த செலவு 450 கோடி ரூபாயில் அடங்கிவிட்டது என்று கூறப்படுவது ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் அசர வைத்துள்ளது.
120 நாள்களில் மொத்த படத்தையும் இரு பாகங்களாக எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். ‘பாகுபலி’ படத்துக்கு இதைவிட அதிக செலவும் காலமும் ஆனதாக சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் நேற்று ‘பொன்னியின் செல்வன்’ படம் வெளியீடு கண்டது. முதல் நாள் வசூல் ஐம்பது கோடி ரூபாய் என்கிறார்கள்.
முதல் பாகத்தின் மொத்த வசூல் 700 கோடி ரூபாயாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகமும் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.