'தீயவர் குலைகள் நடுங்க' என்ற தலைப்பே அனைவரையும் யோசிக்க வைத்திருக்கிறது. இது அறிமுக இயக்குநர் தினேஷ் லெட்சுமணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதை நாயகியாக நடிக்கும் படம். இதில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.
காவல்துறையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் என்றாலும், அத்தகைய படங்கள் பின்பற்றும் வழக்கமான கட்டுப்பாடுகள், விதிமுறைகளைத் தாம் கண்டுகொள்ளவில்லை என்கிறார் இயக்குநர்.
"காவல்துறை என்றாலே நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு, விறைப்பாகச் செயல்படுபவர்கள் எனும் முடிவுக்கு வந்துவிடக்கூடாது. அதையும் கடந்து பல விஷயங்கள் உள்ளன. அதை திரையில் காண்பிக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்திருக்கிறேன்.
"மேலும் எனது முதல் படம் என்பதால் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டிருக்கிறேன். படத்தின் தலைப்பே சில விஷயங்களைச் சொல்லும் என நம்புகிறேன்," என்கிறார் தினேஷ்.
கதையைக் கேட்ட உடனேயே நடிக்கச் சம்மதித்துவிட்டாராம் ஐஸ்வர்யா. ஆட்டிசம் பாதித்த குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு, படிப்பும் சொல்லித்தரும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளாராம்.
"காவல்துறையினரும் மனிதர்கள்தான். அவர்கள் பணிபுரியும் இடம், ஒரு குற்றம் நடந்ததைப் பார்க்கும்போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும், அப்போது என்ன செய்வார்கள் என்று நமக்குள் எழும் பல கேள்விகளுக்கான பதில்களை, யதார்த்த நிலையை இப்படத்தில் இயல்பாகக் காண்பித்துள்ளோம்.
"பரத் ஆசிவகன் இசையமைத்துள்ளார். ஒரு திகில் படத்துக்கான இசையை கச்சிதமாக வழங்கி இருப்பது படத்தின் பலங்களில் ஒன்றாக மாறிஉள்ளது.
"ஆசிரியை கதாபாத்திரத்தில் நடிப்பது எளிதல்ல. கொஞ்சம் கவனம் சிதறினாலும் இதற்கு முன்பு இதே வேடத்தில் நடித்தவர்களின் சாயல் வந்துவிடும். அல்லது ஒரே மாதிரியாக நடிப்பதாக ரசிகர்கள் குறைகூறத் தொடங்கிவிடுவர்.
"இந்தச் சமூகத்தில் ஏராளமான பெண்களுக்கு தீர்க்க முடியாத பிரச்சினைகள் உள்ளன. இந்நிலையில் ஆட்டிசம் பாதித்த பெண் குழந்தைகளை எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும், அவர்களின் பிரச்சினைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் எனப் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
"இவற்றையெல்லாம் மனதில் சுமந்துகொண்டு நடைபோடும் ஒரு பெண்ணின் செயல்பாடுகள் எப்படி இருக்குமோ, அதை மனதில் உள்வாங்கிக் கொண்டு மிக இயல்பாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
"அவர் கதையை நகர்த்திச் செல்லும் பாங்கு அழகானது. எத்தகைய உணர்வாக இருந்தாலும் அதை அப்படியே அள்ளித்தெளிக்கும் முகம் உள்ளது. அதனால் பாந்தமாக நடித்துள்ளார்.
"ஆட்டிசம் பாதித்த பெண்ணாக மும்பையைச் சேர்ந்த அனிகா நடிக்க, சிவாஜி சாரின் மகன் ராம்குமார், நடிகர் விஷாலின் அப்பா ஜி.கே.ரெட்டி, நடிகர் கதிரின் அப்பா லோகு என்று பலர் அருமையான வேடங்களை ஏற்றுள்ளனர்.
"வீரம், வன்மம், காதல், பழிவாங்கல் என்று எல்லாமே காரண காரியங்களுடன் கதையில் இடம்பெற்றுள்ளன. இருட்டான மனிதர்கள் மீது வெளிச்சம் படவேண்டும் என்று நினைத்தேன், அது நடக்கும்.
"அர்ஜுனைப் போன்ற எளிய மனிதரைக் காண்பது அரிது. மூத்த நடிகர் என்றாலும் எந்தவித பந்தாவும் பகட்டும் இன்றி நெருங்கிப் பழகுவார். முதல் சந்திப்பிலேயே தோளில் கைபோட்டு பேசி, நட்பு பாராட்டினார்.
"அவரைப் போன்ற அனுபவ நடிகர்களுக்கு நம் கதை மீது நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் போதும், அதன் பிறகு கதாபாத்திரங்கள் உயிரோட்டமாக மாறிவிடும்," என்கிறார் இயக்குநர் தினேஷ் லெட்சுமணன்.
, :
ஐஸ்வர்யா
ராஜேஷ்