முதல் முறையாக தேசிய விருதைப் பெற்றுள்ள சூர்யா, அதற்கான பதக்கத்தை தனது தந்தை சிவகுமாருக்கும் தாய் லட்சுமிக்கும் அணிவித்து மகிழ்ந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படம் இம்முறை ஐந்து விருதுகளைக் குவித்துள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் இப்படத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அதிபர் கையால் தேசிய விருதை பெற்றுக்கொண்டார் சூர்யா.
அவர் பட்டு வேட்டி சட்டை அணிந்து வந்து விருதை பெற்றுக்கொண்டார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
சிறந்த படத்திற்கான விருதை இப்படத்தை தயாரித்த 2டி நிறுவனம் சார்பில் நடிகை ஜோதிகா பெற்றுக்கொண்டார்.
இதற்கிடையே, தமது சமூக ஊடகப் பதிவில், "இயக்குநர் சுதாவுக்கு எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த விருது என் அன்பான ரசிகர்களுக்கு உரித்தானது," எனக் குறிப்பிட்டுள்ளார் சூர்யா.