படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கி காயம் அடைந்த விஜய் ஆண்டனி தாம் 90 விழுக்காடு குணமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். “விபத்தில் சிக்கியதில் எனது தாடை, மூக்கு எலும்புகளில் அடி பட்டது. ஏனோ தெரியவில்லை. முன்பைவிட மகிழ்ச்சியாக உணர்கிறேன். எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் ‘பிச்சைக்காரன் 2’ படத்துக்கான வேலைகளை தொடங்குகிறேன்,” என்று தமது சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.
சமந்தா நடிப்பில் எதிர்வரும் 17ஆம் தேதி வெளியீடு காண உள்ளது ‘சாகுந்தலம்’ தெலுங்கு திரைப்படம். இந்தப் படத்துக் காக முப்பது கிலோ எடை கொண்ட புடவையை அணிந்து நடித்தாராம் சமந்தா. மேலும், இப்படத்தில் இடம்பெறும் சில காட்சிகளுக்காக அவர் அணிந்து நடித்த நகைகளின் மதிப்பு மட்டும் மூன்று கோடி ரூபாயாம். இப்படத்துக்காக சமந்தா மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்துள்ள தாகப் படக்குழுவினர் பாராட்டுகின்றனர்.
‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் நடித்த நெல்லை தங்கராஜ் உடல்நலக் குறைவால் காலமானார். அப்படத்தில் தெருக்கூத்து கலைஞராக அவர் நடித்திருந்தார். இந்நிலையில், உடல்நலக் குறைவால் அவர் காலமானதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறையும் தேர்தலில் பலத்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யூடியூப் மூலம் பிரபலமடைந்துள்ள கோபி, சுதாகர் இருவரும் நகைச்சுவைப் படம் ஒன்றில் நடிக்கின்றனர். பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட நிதியைக் கொண்டு இப்படம் உருவாகிறது. ‘’நாம் அனைவரும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு அனுபவங்களின் தொகுப்பாக இப்படம் உருவாகிறது. ஒவ்வொரு காட்சியும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்,” என இருவரும் கூறி உள்ளனர்.