எந்தவொரு சூழ்நிலையில் இருந்தும் நம்மை தற்காத்துக்கொள்ள கல்வியறிவு மிக முக்கியம் என்கிறார் தனுஷ்.
அவர் நடித்துள்ள ‘வாத்தி’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் சிறப்பாக நடந்தேறியது. இயக்குநர்கள் பாரதிராஜா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் அதில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், சினிமா துறையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது இயல்பு என்றார். கொரோனா நெருக்கடி வேளையில் உரிய வாய்ப்புகள் இல்லாமல், திரையுலகம் சார்ந்த பணிகள் இன்றி மன உளைச்சலுக்கு ஆட்பட்டதாகக் குறிப்பிட்டார்.
“படிப்பு என்பது பிரசாதம் மாதிரி. அதை ஐந்து நட்சத்திர விடுதியில் வைத்து விற்காதீர்கள் என்பதுதான் இந்தப் படத்தின் ஒருவரிக் கதை. நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, என் பெற்றோர் நிச்சயம் கல்விக்கட்டணத்தைச் செலுத்தி இருப்பார்கள் என்பது தெரியும். ஆனால் படிப்பில் கவனம் இன்றி சுற்றித் திரிந்திருக்கிறேன்.
“இப்போது என் பிள்ளைகளைப் படிக்க வைக்கும்போதுதான் எல்லாம் புரிகிறது. எந்தச் சூழ்நிலை வந்தாலும் படிப்பு மிகவும் அவசியம். எண்ணம் போல் வாழ்க்கை என்பார்கள். உங்களுடைய எண்ணத்தை படிப்பில் வையுங்கள். அதுதான் உங்களைக் காப்பாற்றும்,” என்றார் தனுஷ்.
பின்னர் தனது ரசிகர்களுக்கு ஓர் அறிவுரையையும் கூறினார். தனது வாகனத்துக்குப் பின்னால் ரசிகர்கள் பின்தொடர்வதை விரும்பவில்லை என்றும் அது தமக்கு கவலை அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
“எனது வாகனத்தை பலரும் பின்தொடர்ந்து வருகிறீர்கள். உங்கள் பெற்றோர் உங்கள் மீது நம்பிக்கை வைத்து வெளியே அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் நீங்கள் ஈடுபடும் சில நடவடிக்கைகள் எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. அவ்வாறு செய்யாதீர்கள்,” என்றார் தனுஷ்.
ஆசிரியர்கள் உன்னதமான பணியைச் செய்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அந்தப் பணியை எல்லாரும் செய்துவிட முடியாது என்றார்.
“நான் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதனால்தான் என் பெற்றோர்களின் வேண்டுதல்கள் உங்களுடைய கைத்தட்டலாக என்னை வந்து சேர்கிறது.
“கடந்த 1990களில் நடக்கும் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் நடிக்கும் போதுதான் ஆசிரியர்களின் வேலை எவ்வளவு கஷ்டம் என்பது புரிந்தது. ஆசிரியர்கள் தான் நம் தலையெழுத்தை மாற்றக்கூடியவர்கள்.
“கொரோனா ஊரடங்கின் போதுதான் இயக்குநர் வெங்கி இந்தக் கதையைச் சொன்னார். நானே அப்போது வேலை இல்லாமல் மன உளைச்சலுடன் இருந்தேன். எனவே தேடிவரும் கதைகளை எப்படியாவது மறுத்துவிடலாம் என்பதே எனது எண்ணமாக இருந்தது. ஆனால் இயக்குநர் வெங்கி சொன்ன கதையைக் கேட்டதும் மனம் மாறியது. உண்மையாகவே அது பிடித்துப்போனது. அதனால் தயக்கமின்றி நடித்தேன். ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும் என உறுதியாக நம்புகிறேன்,” என்றார் தனுஷ். இதையடுத்து பேசிய இயக்குநர் சமுத்திரக்கனி தனுஷ் ஒழுக்கத்தில் ஒரு வாத்தியைப் போன்றவர் என்றும் நடிப்பில் அசுரன் என்றும் பாராட்டினார்.
“ஒரு நாள் அதிகாலை நான்கு மணிக்கு என்னைத் தொடர்புகொண்டு இந்தப் படத்தில் இணையுமாறு கூறினார் தனுஷ். இந்த நல்ல படைப்பில் நானும் இருப்பது மகிழ்ச்சி. எப்போதுமே ஒரு படைப்பாளி சமூகத்தின் மீது அக்கறை கொண்டிருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
“இயக்குநர் வெங்கி அத்லூரியும் என் தம்பி தனுஷும் அப்படிப்பட்ட படைப்பாளர்கள். ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷுடன் தொடங்கிய பயணம் இன்றுவரை தொடர்கிறது. நான் இருக்கும்வரை இந்தப் பயணம் தொடர வேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். தம்பி தனுஷுடன் படப்பிடிப்பில் பங்கேற்றால் எனக்குள் இருக்கும் இயக்குநர் வீட்டிலேயே தங்கிவிடுவார். தனுஷ் மிகச்சிறந்த படைப்பாளி.
“இப்படத்தின் நாயகி சம்யுக்தா அதிர்ஷ்டசாலி. காரணம் தகுதியான படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறார்,” என்றார் சமுத்திரக்கனி.