பிற மொழிகளில் வெற்றிபெற்ற படங்களை மறுபதிப்பு செய்வதில் தவறேதும் இல்லை என்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன்.
‘ஜெயம்கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘வந்தான் வென்றான்’, ‘சேட்டை’, ‘இவன் தந்திரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ள இவர், மணிரத்னத் தின் சீடர் ஆவார்.
இவருடைய அடுத்த படைப்பு ‘த கிரேட் இந்தியன் கிச்சன்’.
“நேர்மையாகச் சொல்வதாக இருந்தால் இப்போது வரும் தொண்ணூறு விழுக்காட்டுப் படங்கள் அதிகாரபூர்வமற்ற மறுபதிப்புப் படங்கள்தான். ஏதோ ஒரு ஹாலிவுட் படத்தையோ, கொரிய மொழிப் படத்தையோ, கண்ணுக்குத் தெரியாத ஜப்பானிய மொழிப் படத்தையோ சட்டத்துக்குப் புறம்பாக உரிமை வாங்காமல் தமிழில் படமாக்கிவிடுகிறார்கள்.
“அந்த வகையில் நான் நேர்மையுடன், கதை எழுதிய கதாசிரியர், படத்தின் தயாரிப்பாளருக்கு உரிய பணத்தைக் கொடுத்து உரிமம் பெற்று என் படங்களை உருவாக்குகிறேன். இது எந்த விதத்தில் தவறாக இருக்கும் என்று தெரியவில்லை.
“அதேசமயம் தரமான படங்களை மட்டுமே மறுபதிப்பு செய்கிறேன். உள்ளடக்கம் சிறப்பாக இல்லை எனில் கண்டுகொள்வதில்லை. மறுபதிப்பு என்பது தமிழ் சினிமாவுக்குப் புது விஷயம் அல்ல,” என்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன்.