‘ஆதிபுருஷ்’ படத்தில் சீதையாக நடித்திருக்கும் கிரித்தி சனோன் கவர்ச்சியாக உடையணிந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர். இவர் சீதையாக நடிக்க தகுதியில்லாதவர். அதனால் இந்தப் படத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
‘பாகுபலி’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பின் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சாஹோ’, ‘ராதே ஷியாம்’ படங்கள் படுதோல்வியைச் சந்தித்தன.
தொடர் தோல்விகளில் இருந்து மீண்டுவர நடிகர் பிரபாஸ் தேர்ந்தெடுத்த திரைப்படம்தான் ‘ஆதிபுருஷ்’.
ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள இத்திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் ராமனாக நடித்துள்ளார். ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கிரித்தி சனோன் நடித்துள்ளனர்.
‘ஆதிபுருஷ்’ தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முப்பரிமாணத் தொழில்நுட்பத்தில் ஜுன் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அதில் நாயகியாக நடித்திருக்கும் கிரித்தி சனோன் பல நிகழ்ச்சிகளில் கவர்ச்சியாக உடை அணிந்த படங்களைப் பதிவிட்டு இவர் சீதையாக நடிக்க தகுதியில்லாதவர் என்று வலுக்கும் எதிர்ப்பால் படக்குழுவினர் கலக்கத்தில் இருக்கின்றனர்.
‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி சரயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது.
ஆனால், முன்னோட்டக் காட்சியைப் பார்த்த வலைத்தளவாசிகள் படத்தின் ‘கிராபிக்ஸ்’ வேலையைப் பார்த்து கொதித்து போய், ‘இந்தப் படத்தை கார்ட்டூன் இணையத்தளத்தில் வெளியிடுங்கள்,’ என்று கேலி செய்திருந்தனர்.
அதனால் கோபமான பிரபாஸ் படத்தின் காட்சிகளை மீண்டும் எடுக்குமாறு கூற, இயக்குநர் ஓம் ராவத்தும் பல காட்சிகளை மீண்டும் எடுத்தார்.
இந்நிலையில் படம் வெளியாகப்போகிறது என்ற செய்தி வந்தவேளையில், படத்தில் சீதையாக நடித்த கிரித்தி சனோனுக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
பல நிகழ்ச்சிகளில் அவர் யதார்த்தமாக உடையணிந்து கலந்துகொண்டார். அதற்கு இப்படி ஓர் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் கிரித்தியைவிட படக்குழு இன்னும் அதிர்ச்சியடைந்திருக்கிறது.
இதற்கு முன் வந்த எதிர்ப்புகளை சமாளித்து ரூ.100 கோடி கூடுதலாக செலவு செய்து பல காட்சிகளை மீண்டும் எடுத்து, படத்தை வெளியீடு செய்யும் நேரத்தில் இப்படி ஒரு சிக்கல் வரும் என்று படக்குழு எதிர்பார்த்திருக்காது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் படத்தில் சீதையாக நடித்த கிரித்தி சனோன் தனக்கு எதிராக ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பைப் பார்த்து கண்கலங்கி ஊடகத்திற்கு பேட்டி அளித்தார்.
அதில், “ஆலியா பட், தீபிகா படுகோனிற்கு பிறகுதான் இந்தப் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு நடிகையின் கனவும் இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகத்தான் இருக்கும். அந்தக் கனவு என் வாழ்க்கையில் தற்போது நிறைவேறி உள்ளது.
“சீதை கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பு நடைபெற்ற அனைத்து நாள்களிலும் அசைவைத்தை தவிர்த்தேன்.
“சீதையாக வாழவேண்டும் என்பதற்காக பல புத்தகங்களையும் படங்களையும் பார்த்தேன். சீதையாகவே வாழ்ந்தேன்,” என்று உருக்கமாக, கண்ணீர் மல்கப் பேசியுள்ளார்.
இதற்குமுன் தெலுங்கில் எடுக்கப்பட்ட ‘ராம ராஜ்ஜியம்’ படத்தில் நயன்தாரா சீதையாக நடித்தபோது அவருக்கும் இதுபோன்ற எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அவரும் இந்தப் படத்தில் நடித்து முடிக்கும் வரையிலும் அசைவம் சாப்பிடாமல் விரதமாக இருந்து படத்தில் நடித்தேன் என்று கூறியிருந்தார்.
படம் வெளிவந்தபோது ரசிகர்கள் அவரின் நடிப்பைப் பார்த்து, அவரை சீதையாகவே நினைத்து, அவருக்கு பூத்தூவி, அவரை வணங்கி, சிலர் அவர் கால்களில் விழுந்துகூட வணங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்திலும் சீதையாகவே வாழ்ந்திருக்கும் கிரித்தி சனோனுக்கும் நயன்தாராவைப்போல வரவேற்பு கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர்.
பிரபாஸ் படம் என்பதாலேயே படம் வெளியாவதற்கு முன்பே பல கோடி ரூபாய்க்கு வணிகம் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.