இந்தியாவையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக் குறித்து இதுவரை எந்தவொரு பதிவும் போடாமல் கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் இருப்பது ரசிகர்களை கோபப்பட வைத்திருக்கிறது. இவர்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்களா? ரயில் விபத்து நடந்தது இவர்களுக்குத் தெரியவே தெரியாதா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
புதிய நாடாளுமன்றம் குறித்து பதிவு போட்ட ரஜினிகாந்த், அரசியலுக்குள் அடியெடுத்து வைக்க காத்திருக்கும் விஜய், சமூக சிந்தனை கொண்ட சூர்யா என யாருமே ஒரு சத்தமுமின்றி வார இறுதியில் உல்லாசமாக இருக்கிறார்களா? என்று ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டு இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.
பல உயிர்களைக் காவு வாங்கிய ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தை அறிந்த பாடலாசிரியர் வைரமுத்து, நடிகை பிரியா ஆனந்த், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பல பிரபலங்கள் மனவேதனையுடன் பதிவுகளைப் பதிவிட்டுள்ளனர்.
நடிகர் அக்ஷய் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், பலத்த காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று பதிவிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
ஆனால், தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் இன்னமும் இப்படியொரு ரயில் விபத்து நடந்தது பற்றி தெரியாமலே இருக்கிறார்களா? ஏன் இவ்வளவு அமைதி? விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு உதவி செய்யவில்லை என்றாலும் ஆறுதலான வார்த்தைகளை பதிவிட்டு, இரங்கல் தெரிவிக்கக்கூட முடியவில்லையா என்று இவர்களின் ரசிகர்களும் வலைத்தளவாசிகளும் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.