பல ஆண்டுகளுக்குப் பின்னர் இசையும் அதனால் ஏற்படும் உற்சாகமும் இணைந்து இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா களைகட்டியது. வார நாளாக இருந்தபோதும் பெருந்திரளாக மக்கள் தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்று மகிழ்ந்தனர். கூடுதல் இடங்களில் நேரடி இசை, இசை ஒலிபரப்பு என்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது உற்சாகத்தை அதிகரித்தது. சிங்கப்பூரில் பல்லாண்டு காலமாகக் கொண்டாடப்பட்டு வரும் தைப்பூசத் திருவிழா காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றங்களைப் பெற்றுவந்துள்ளது.
ஆரம்ப காலத்தில், காளை மாடுகள் தேர் இழுக்கும். காவடிகள் அணிவகுக்கும். ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகளுடன் மூன்று நாள் திருவிழா களைகட்டும். 1968வரையில் தைப்பூசம் பொது விடுமுறையாக இருந்தது. பின்னாட்களில் கொண்டாட்டத்துடன் அடிதடிகளும் கைது நடவடிக்கைகளும் இடம்பெற்றதுண்டு. சிலரது விரும்பத்தகாக நடவடிக்கைகளின் விளைவால், காலப்போக்கில் தைப்பூச ஊர்வலத்திற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. திருவிழா உற்சாகம் குறைந்து, தைப்பூசத்தின் சிறப்புக் குறைந்தது. பக்தி, நேர்த்திக்கடன், வழிபாடு போன்ற சமயம் சார்ந்த அங்கங்களுடன் தாள இசைக்கு சுழன்று ஆடியபடி நகரும் அழகான காவடிகளின் ஊர்வலம், வழியெங்கும் வரிசைகட்டி உணவும் பானமும் வழங்கும் தண்ணீர்ப் பந்தல்கள், வண்ண வண்ண உடை அலங்காரங்களுடன் காவடி பார்க்க வரும் கூட்டம் என எல்லாமே சேர்ந்துதான் கொண்டாட்டக் களிப்பைக் கொண்டு வருகின்றன. மன உளைச்சல் நிறைந்த நகர வாழ்க்கையைக் கொஞ்சம் இலகுவாக்கி, இறுகிய உணர்வுகளைத் தளர்த்துபவை இத்தகைய கொண்டாட்டங்கள் என்ற பலரும் தைப்பூசம் மீண்டும் களைகட்டத்தொடங்கியிருப்பதை வரவேற்றனர்.