மூன்றாவது முறையாக இந்த ஆண்டு தேசிய தின அணி வகுப்பில் வான்வெளி சாகசத்தைப் புரியவுள்ளார் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் போர் விமானியான மேஜர் ஆறுமுகம் சிவராஜ், 32. F-15SG ரக போர் விமானத்தை கடந்த ஒன்பது ஆண்டுகளாக செலுத்தி வருகிறார் இவர்.
2005ஆம் ஆண்டில் தம்முடைய 18 வயதில் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையில் மேஜர் ஆறுமுகம் சேர்ந்தார்.
கடந்த சில தேசிய தின அணிவகுப்புகளில் ஒவ்வொரு முறையும் ஒரு வான் சாகசக் காட்சியில் கலந்துகொண்ட இவர், இந்த ஆண்டு இரண்டு வான் சாகசக் காட்சிகளில் பங்கேற்க இருப்பது சிறப்பம்சம்.
‘ஃபைவ் ஏர்கிராஃப்ட் பாம்பர்’ (Five aircraft bomber) உட்பட முதல் முறையாக ‘ஹை-ஜீ டர்ன்’ சாகசத்துடன் சேர்ந்த ‘வர்ட்டிகல் கிளைம்ப்’ (High-G turn and vertical climb) என்று மொத்தம் இரண்டு வான்வெளி சாகசங்களில் இவர் ஈடுபடவுள்ளார்.
அதுபோக தேசிய தின அணி வகுப்பில் பயன்படுத்தப்படும் ஐந்து F-15SG ரக போர் விமானங் களுக்கு அவர் துணை விமானத் தலைவராகவும் (Deputy Flight Lead) பொறுப்பேற்கிறார்.
“பிரதான தலைவரால் F-15SG ரக போர் விமானங்களைத் தலைமைத் தாங்க முடியாத நிலையில் நான் பொறுப்பேற்பேன். வான் சாகசங்களின் சவால்கள் ஒரு புறம் இருக்க, விமானங்களை நிர்வகிக்கும் திறனும் எங்களுக்குத் தேவை,” என்று மேஜர் ஆறுமுகம் கூறினார்.
‘எஸ்ஜி50’ பொன்விழாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு 2015ஆம் ஆண்டுக்குப் பின் இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பு மீண்டும் பாடாங்கில் நடைபெறும்.
சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற பிறகு 1966ஆம் ஆண்டில் நடை பெற்ற முதல் தேசிய தின அணி வகுப்பு பாடாங்கில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்கள் திட்ட மிட்டபின் முதல் விமானப் பயிற்சி இம்மாதத் தொடக்கத்தில் நடந்தது என்றும் பாடாங்கில் முதல் முறையாக வான்வெளி சாகசங் களைப் புரிந்ததாகவும் மேஜர் ஆறுமுகம் குறிப்பிட்டார்.
“பாடாங் பகுதியைச் சுற்றி பல உயரமான கட்டடங்கள் உள்ளன. பார்வையாளர்களுக்கு சிறந்த முறையில் காட்சியளிப்பது எங்க ளுக்குச் சவாலாக இருக்கும். தொடர்ச்சியாக சிங்கப்பூரில் நிலவி வரும் பருவநிலை மாற்றங் களும் மற்றொரு சவாலாக அமையும். வான் சாகசத்தைப் புரி வதற்கு நல்ல பயிற்சி அவசியம்,” என்றார் மேஜர் ஆறுமுகம்.
தேசிய தின அணிவகுப்பில் தலைமைத்துவப் பொறுப்பை கையாளும் மேஜர் ஆறுமுகம், எதிர்காலத்தில் தலைமை அதிகார நிலைகளை அடைய விரும்புகிறார்.
“தேசிய தின அணிவகுப்பில் கிடைக்கும் இந்த அனுபவம் எனக்கு திட்டமிடுதல், நிர்வாகம், தலைமைத்துவம் ஆகிய திறன் களை வளர்க்க வழிவகுக்கிறது.
“வார இறுதி நாட்களில்கூட அணிவகுப்பு பயிற்சிக்குச் செல் வதால் எனது குடும்பத்தினருடன் செலவழிக்க நேரம் வகுக்க வேண்டும். எதிர்காலத்தில் மேல் நிலைப் பொறுப்புகளை வகிக்கும் போது இந்த அனுபவம் கைகொடுக்கும்,” என்றார் இரு பிள்ளைகளுக்குத் தந்தையான மேஜர் ஆறுமுகம்.