இந்தியப் பாரம்பரிய இசையில் பெயர் பொறித்த சிங்கப்பூர் கலைஞர்களில் ஒருவர் 70 வயது திருமதி லலிதா வைத்தியநாதன். மக்கள் கழக இந்திய இசைக்குழுவின் இயக்குனராக கடந்த 34 ஆண்டுகளாக திறம்படச் செயலாற்றி வரும் இவர், ஏராளமான நிகழ்ச்சிகளை சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் நடத்தியுள்ளார்.
அவர் மாற்றியமைத்த கிட்டத்தட்ட 180 இசை அமைப்புகளையும் (music scores) 30 இசை வட்டுகள், 15 காணொளிகள் ஆகியவற்றையும் தேசிய நூலகத்திற்கும் தேசிய ஆவணக் காப்பகத்திற்கும் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
“சிங்கப்பூரில் இந்திய இசைத் துறையின் சாதனைகள் என்னைப் பெருமையடைய வைக்கிறது. “நான் மாற்றியமைத்த இசை அமைப்புகள் எனது பொக்கிஷம். வருங்காலத் தலை
முறைக்கு இந்த இசை அமைப்புகள் ஊக்கமளிக்கும்,” என்றார் திருமதி லலிதா. மேற்கத்திய, சீன இசையையும் தமது இந்திய இசை நிகழ்ச்சிகளில் இணைத்து படைத்துள்ளார் திருமதி லலிதா.
கடந்த 2015ஆம் ஆண்டில் இவர் தொடங்கிய ‘லலிதாஞ்சலி‘ என்ற வாத்திய இசைக்குழு, சிங்கப்பூர் சமூக நிகழ்ச்சிகளுடன் சென்னை, ஜப்பான், மலேசியா, போர்ச்சுகல் எனப் பல்வேறு நாடுகளிலும் நிகழ்ச்சிகளைப் படைத்துள்ளது. “சிங்கப்பூரைக் கலை மையமாக பரிணமிக்கச் செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. “அந்த வகையில் எனது இசை சேகரிப்பு கலைகளை வளர்க்க உதவும் என்று நம்புகிறேன்,” என்றார் அவர்.
திருமதி லலிதா போன்ற நன்கொடையாளர்களைச் சிறப்பிக்கும் வகையில் தேசிய நூலக வாரியமும் சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகமும் இணைந்து ஜூலை 1ஆம் தேதி நடத்திய நிகழ்ச்சியில், தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார்.
“சமூகக் குழுக்கள் ஒன்றாகச் செயல்பட்டு, வரலாறு, மரபுடைமைச் சிறப்புமிக்க பொருட்களைத் திரட்டி, அவற்றை ஆவணப்படுத்தி சமுதாயத்திற்கு வழங்கவேண்டும்,” என்று கூறினார் அமைச்சர்.
நூலகமும் ஆவணக் காப்பகமும் தொடர்ந்து தகவல்தளத்தை (repository) வளர்க்க முனைகின்றன என்று குறிப்பிட்டார் அமைச்சர்.
“சிங்கப்பூரின் கதையை ஒன்றுசேர்ந்து தொடர்ந்து எழுதி வரும் சிங்கப்பூரர்கள், சிங்கப்பூரின் வரலாற்றையும் மரபுடைமையையும் கூறும் ஆவணங்களைப் பதிவுசெய்ய தனிமனிதர்கள், சமூகங்களின் பன்முகத்தன்மை, விருப்பங்கள், நிபுணத்துவம் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார் திரு ஈஸ்வரன்.
“ஆவணத்திரட்டுக்குப் பங்களித்திருக்கும் கலை அமைப்புகளில் 1982ல் தொடங்கப்பட்ட, டெம்பிள் ஆஃப் பைன் ஆர்ட்சும் ஒன்று.
“சிங்கப்பூரில் இலக்கியமும் கலைகளும் ஒரு நீண்ட பாதையில் பயணம் செய்து இன்றைய வளர்ச்சியை அடைந்துள்ளன. எதிர்கால தலைமுறையினர் கடந்த காலத்தின் வரலாற்றையும் பங்களிப்பையும் படைப்புகளையும் அறிந்துகொள்ள இந்த ஆவணங்கள் சிறந்த தளமாக அமையும்,” என்றார் இந்த அமைப்பின் கலை நிர்வாகியான திரு லலித் குமார், 30.
“இப்போது இல்லாவிட்டாலும் 50 ஆண்டுகளுக்கு பின் இந்த ஆவணங்களின் மதிப்பை சமுதாயம் நிச்சயம் அறியும்,” என்றார் அவர்.
“பெரும்பாலான ஆவணங்கள் மின்னிலக்கமாக்கப்பட்டுள்ளதால், அவற்றை பயன்படுத்துவது எளிதாக இருக்கும் என்று குறிப்பிட்டார் தேசிய நூலகத்தில் மூத்த நூலகரான திருவாட்டி மகேஸ்வரி பெரியசாமி, 49.
“சிங்கப்பூரின் படைப்புகளையும் உருவாக்கங்களையும் கட்டிக்காப்பதன் முக்கிய பொறுப்பு, தேசிய நூலக வாரியத்திற்கும் சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகத்திற்கும் உள்ளது.
“வருங்காலத் தலைமுறைக்கு நம் வரலாற்றை முறையாக எடுத்துச் சொல்வது அவசியம்,” என்று சொன்னார் திருவாட்டி மகேஸ்வரி.