தேசிய நூலக வாரியம் நடத்தும் ‘வாசிப்பு விழா 2019ன் ஓர் அங்கமாக நாளை சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, விக்டோரியா சாலையிலுள்ள தேசிய நூலகத்தின் 16 ஆவது தளத்தில், கவிமாலையின் 230ஆவது மாதாந்திரச் சந்திப்பு நிகழ்ச்சியில் சிங்கப்பூரின் ஆங்கில, சீன மற்றும் மலாய்க் கவிஞர்கள் கலந்துகொள்ளும் ‘திறமான புலமையெனில்’ என்ற சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
ஜூலை மாதத்தில் கவிமாலை வெளியிட்ட ‘முத்திரை வரிகள்’ மற்றும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘வைப்ரண்ட் வெர்சஸ்’ ஆகியவற்றை சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளியின் தமிழ், சீன மற்றும் மலாய் மாணவர்கள் வாசிக்க இருக்கிறார்கள்.
‘திறமான புலமையெனில்…’ என்ற சிறப்புக் கலந்துரையாடல் அங்கத்தில் சீனக் கவிஞர் திரு. சௌவ் டிச்செங் (Zhou Decheng), மலாய்க் கவிஞர் திரு கைரூல் ஹாஃக்(Khariool Haque), ஆங்கிலக் கவிஞர் இங்க் யீ-ஷெங் (Ng Yi-Sheng) ஆகியோர் பங்குபெற்று கவிமாலை ‘முத்திரை வரிகள்’ பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதோடு, தங்கள் மொழிக் கவிதை மற்றும் இலக்கியச் சிந்தனைகளை முத்திரை வரிகளோடு ஒப்பீடு செய்தும் தங்களது மொழிக் கவிதைகளைப் பற்றியும் கலந்துரையாட இருக்கிறார்கள்.
இந்தச் சிறப்புக் கலந்துரையாடலை தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி வரும் திரு முகம்மது அலி வழி நடத்தவிருக்கிறார்.
இம்மாதம் ‘பேராசான்’ எனும் தலைப்பிலான கவிதைப் போட்டிக்கு வந்துள்ள கவிதை விவாதம் மற்றும் வெற்றி பெற்ற கவிதைகளுக்குப் பரிசளிப்பு போன்ற வழக்கமான அங்கங்களும் உண்டு.
நிகழ்ச்சியை திருமதி சுபாஷினி கலைக்கண்ணன் நெறிப்படுத்தி நடத்துவார்.
தகவலுக்கு 9853 6465.