தமிழ்மொழியில் இயற்றப்பட்டுள்ள நூல்களிலேயே சாலச் சிறந்ததாகப் போற்றப்படும் திருக்குறள் குறித்து சிந்தனையைத் தூண்டும் கலந்துரையாடல், இம்மாதம் ஐந்தாம் தேதியன்று தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் நடைபெற்றது.
‘திருக்குறள் சமயம் சார்ந்த நூலா அல்லது சமயம் சார்பற்றதா?’ என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும் வண்ணம் அமைந்த கலந்துரையாடலில் மூவர் தங்கள் சிந் தனைகளைப் பகிர்ந்துகொண்டனர்.
சிங்கப்பூரின் முன்னணித் தமிழ் அறிஞர் முனைவர் சுப. திண்ணப்பன், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள திரு சபாரத்னம் இரத்னகுமார், கல்வி அமைச்சின் முதன்மைத் தமிழ் ஆசிரியர் திரு சுப்பிரமணியம் நடேசன் ஆகியோர் தங்களின் கருத்துகளைக் கூறினர்.
வெவ்வேறு கண்ணோட்டத்தில் கருத்துகளைப் பகிர்ந்தாலும் மூவரும் திருக்குறள் சமய சார்பற்றதுதான் என்ற முடிவில் உறுதியாக இருந்தனர்.
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சுமார் 170 பேர் பங்கேற்றனர். அமைப்பின் இயக்குநர் திரு அருண் மகிழ்நன் ஆற்றிய வரவேற்புரையில் மகாத்மா காந்தி, லியோ டோல்ஸ்டாய், ஆல்பர்ட் சுவைட்சர் போன்ற பல முக்கிய உலகச் சிந்தனையாளர்களின் மீது திருக்குறள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியதைச் சுட்டினார்.
உடல்நலக் குறைவு காரணமாக கலந்துரையாடலில் நேரில் பங்கேற்க முடியாமல் போனாலும் இணையம் மூலம் நிகழ்ச்சியில் உரையாற்றி கேள்வி-பதில் அங்கத்திலும் பங்கேற்றார் முனைவர் திண்ணப்பன்.
திருவள்ளுவரை தெய்வப் புலவர் என்று அடையாளப்படுத்துவது, திருக்குறளைப் புனித நூலாக அடையாளப்படுத்துவது என பல்வேறு சந்தர்ப்பங்களில் திருக்குறளையும் திருவள்ளுவரையும் சமயம் சார்ந்த கண்ணோட்டத்தில் சிலர் வகைசெய்ய முயற்சி எடுத்துள்ளனர் என்று முனைவர் சுப திண்ணப்பன் குறிப்பிட்டார்.
இருப்பினும், பொதுவாக கடவுள் என்று பல இடங்களில் திருவள்ளுவர் குறிப்பிட்டிருந்தாலும் எந்த ஒரு சமயத்திற்கோ சமய வழிபாட்டுக்கோ திருவள்ளுவர் பெயரிட்டு குறிப்பிடவில்லை என்றார் திரு திண்ணப்பன். விதி அல்லது ஊழ் என்று காரணம் காட்டாமல் மனிதர்களின் முயற்சி மூலமே வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று கூறியிருக்கும் திருவள்ளுவர், சமயம் சார்ந்தவராக இருக்கமுடியாது என்று முனைவர் திண்ணப்பன் குறிப்பிட்டார்.
திருக்குறள் சமயம் சார்புடையதா இல்லையா என்று ஆராய்வதற்கு முன்னர் சமயத்திற்கும் ஆன்மீகத்திற்கும் இடையிலான வேறுபாட்டை அறியவேண்டும் என்று கேட்டுக்கொண்டு அதற்கான விளக்கத்தையும் பகிர்ந்தார் மற்றொரு பேச்சாளர் திரு சுப்ரமணியம் நடேசன்.
வாழ்வியல் நெறிகளை விளக்கும் திருக்குறள் எந்த ஒரு குறிப்பிட சமயத்தையும் சார்ந்ததாக இல்லை. கடவுளைக் குறிப்பிட்டு தொடங்கும் திருக்குறள்கள் பல இருப்பதையும் மனிதநேயத்தை முன்வைத்து வேற்றுமைகளைக் களையும் நூல் என்பதையும் சுட்டிக்காட்டிய திரு சுப்பிரமணியம், அதனால் அது ஆன்மிக அடிப்படையைக் கொண்ட சமய சார்பற்ற நூல் என்ற கருத்தை முன்வைத்தார்.
அறம், பொருள், இன்பம் என மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள திருக்குறளை ஒவ்வொரு பாகமாக விளக்கினார் திரு ச.இரத்னகுமார். அறிவியல் அடிப்படையிலான விளக்கத்தைத் தந்த அவர், நல்ல வாழ்வியலுக்கு சிறந்த சிந்தனையை வழங்கும் நூலான திருக்குறள், சமய சார்பற்றதே என்று கூறினார்.
பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ள திருக்குறள் குறித்த கருத்துகள் தமிழர் அல்லாதோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி ஆங்கிலத்தில் நடத்தப்பட்டது.