அன்று சனிக்கிழமை காலையிலிருந்து தீவின் வெவ்வேறு பகுதிகளில் வேலை செய்து கொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிர்பாராத அன்பளிப்புத் தேடி வந்தது.
25 வாகனங்களில் சைவ ‘பிசா’, சமோசா, ‘ஸ்டார்பக்ஸ்’ மஃப்பின், முன் பணம் செலுத்திய சிம்-டேட்டா அட்டைகள், மழைப் பாதுகாப்புச் சட்டைகள், டீ-சட்டைகள், சேலைகள் போன்ற அன்பளிப்புப் பொருட்களுடன் வெளிநாட்டு ஊழியர்கள் வேலை செய்யும் தளங்களுக்கு வந்தனர் தொண்டூழியர்கள்.
தீபாவளிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ‘இட்ஸ்ரெயினிங்ரெயின்கோட்ஸ்’ (ItsRainingRaincoats) எனும் தொண்டூழியத் திட்டத்தை சேர்ந்த குழுவினர் இந்த சிறப்பு தீபாவளி விநியோகத் திட்டத்திற்கு கடந்த 19ஆம் தேதி அன்று ஏற்பாடு செய்திருந்தனர்.
250 பிசா பாக்ஸ், 2,500 சமோசாக்கள் என பல்வேறு அன்பளிப்புப் பொருட்களை வெளிநாட்டு ஊழியர்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் துடிப்புடன் செயல்பட்டனர் பல இனத் தொண்டூழியர்கள்.
சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் நோக்கத் துடன் ‘இட்ஸ்ரெயினிங்ரெயின்கோட்’சை 2015ஆம் ஆண்டில் தொடங்கினார் வழக்கறிஞர் திருமதி சு.தீபா.
இந்த அமைப்பின் தொண்டூழிய முயற்சிகளில் ஒன்றாக, ‘ஸ்டார்பக்ஸ்’ கடைகளில் விற்பனையாகாத உணவுப் பொருட்களை வெளிநாட்டு ஊழியர்களுக்கு விநியோகம் செய்கின்றனர்.
‘ஸ்டார்பக்ஸ்’ கடையின் இந்த முயற்சி குறித்து ஊடகம் வாயிலாகக் கேள்விப்பட்டு உணவு விநியோகம் செய்ய பல பின்னணிகளிலிருந்தும் தொண்டூழியர்கள் முன்வந்தனர்.
கடந்த தீபாவளி விநியோக முயற்சியில் உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் அன்பளிப்புப் பொருட்களுடன் 56 வயது திரு ஜேம்ஸ் அந்தோணியும் 48 வயது திருமதி உஷா சுப்ரமணியமும் வலம்வந்தனர்.
‘‘ஃபேஸ்புக் வாயிலாக இந்த முயற்சியைப் பற்றி கேள்விப்பட்டதும் நான் அதில் பங்கெடுக்க முடி வெடுத்தேன். தினமும் வாகனம் ஓட்டும்போது, வெளிநாட்டு ஊழியர்களை பார்க்கிறேன். நிறுவன வாகனத்தில் அவர்கள் பயணித்துக்கொண்டிருக்கும்போது, அவர்களது எண்ணங்கள் எப்படியெல்லாம் அலைமோதும் என்பதை யோசித்ததுண்டு,’’ என்று தெரிவித்தார் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் திருமதி உஷா.
மூன்று ஆண்டுகளாக இக்குழு வில் தொண்டாற்றிவரும் தொழில்நுட்பர் திரு ஜேம்ஸ், தீபாவின் முயற்சிகளை அறிந்து தாமும் அவரது முயற்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற உத்வேகம் தமக்குள் தானாக எழுந்தது என்றார்.
திரு ஜேம்ஸும் திருமதி உஷாவும் உட்லண்ட்ஸ் பகுதிகளிலுள்ள சாலைச் சீரமைப்புப் பணிகள், கட்டுமானத் தளங்களுக்குச் சென்று சமோசாக்களையும் முன்பணம் செலுத்திய சிம்-டேட்டா அட்டைகளையும் ஊழியர்களுக்கு வழங்கி, தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
‘‘வேலை செய்துகொண்டிருந்தபோது தற்செயலாக எங்களுக்கு அன்பளிப்புகள் தந்தது நல்ல விஷயம்தான், இதை நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை,’’ என்று கூறினார் உட்லண்ட்ஸ் சாலை சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டு ஊழியர் திரு ர.சந்தோஷ் குமார், 28.