போலி ஆவணங்களை உருவாக்கிப் பயன்படுத்தியதற்காகவும் தனது 60வது மனைவியின் தந்தையிடமிருந்து பணத்தைத் திருடியதற்காகவும் பங்ளாதேஷ் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாம் திருமணமாகாதவர் அல்லது மனைவியை இழந்தவர் என்பதற்கு ஆதாரமாக ஷஹீம் ஆலம் என்ற போலிப் பெயரில் ஆவணங்களை உருவாக்கியதாக 45 வயது அபு பக்கர் மீது டாக்கா நீதிமன்றத்தில் இம்மாதம் மூன்றாம் தேதி தெரிவிக்கப்பட்டது.
அபு பக்கரின் 60வது மனைவி ரோசி கான் போலிசில் அளித்த புகாரில், பணத்துக்காக பல பெண்களை மணந்து, பின்னர் அவர்களை அபு பக்கர் விவாகரத்து செய்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ரோசி கானை திருமணம் செய்த பிறகு, அபு பக்கர் வரதட்சணை கேட்டதாகவும் அதற்கு ரோசி கானின் தந்தை மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
அதனையடுத்து சுமார் S$1,300 மதிப்பிலான பங்ளாதேஷ் பணத்தை கானின் தந்தையிடமிருந்து அபு பக்கர் திருடியதாகச் சொல்லப்படுகிறது.
எந்தவோர் ஆவணத்திலும் அபு பக்கர் தனது நிஜப் பெயரைப் பயன்படுத்தவில்லை என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் மனைவியான சஸிடா பேகம், வேறு இரண்டு மனைவிகள் மற்றும் ஏழு குழந்தைகளுடன் தனது உண்மையான வீட்டில் வசித்து வரும் அபு பக்கரை அந்தப் பகுதி மக்கள் ‘பக்கர் டீச்சர்’ என்று அழைக்கின்றனர். சஸிடாவுக்கு 20 வயதாகும்போது அவர் அபு பக்கரை மணந்தார்.
கடந்த 25 ஆண்டுகளில் தாம் 60 முறை திருமணம் செய்துகொண்டதை அபு பக்கர் ஒப்புக்கொண்டதாக இஸ்லாம்பூர் காவல் நிலைய அதிகாரி அன்சார் அலி குறிப்பிட்டுள்ளார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity