அடுத்த மாதம் வரவுள்ள பொங்கலை மேலும் உற்சாகத்துடன் கொண்டாடப் புதிய பாடல் ஒன்றை வழங்குகின்றனர் ‘சூப்பர் சிங்கர்’ புகழ் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதி.
‘பொங்கலோ பொங்கல்’ என்ற இந்தப் பாடல் வெளியீடு, ‘குட்டே இம்பெக்ஸ்’ நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடந்த வியாழக்கிழமை அன்று சிராங்கூன் சாலையிலுள்ள ‘குட்டே ப்யூட்டி பார்லர் & ஹேர் சலூன்’ கடையில் நடந்தது.
“தமிழர் பெருமைகளை எடுத்துக்கூறும் வகையில் அமைந்துள்ள இப்பாடல், நிச்சயமாகப் பொங்கல் விழாக்காலத்துடன் மற்ற நாட்களிலும் கேட்கக்கூடிய ஒரு பாடலாக இருக்கும்,” என்றார் திரு செந்தில்.
“சிங்கப்பூரில் வெளியிடப்பட்டுள்ள இப்பாடல், உலகத்திலுள்ள அனைத்து தமிழர்களும் ரசித்து பாடக்கூடிய ஒரு பாடல்,” என்றார் திருமதி ராஜலட்சுமி.
நாட்டுப்புற பாடல் கலைஞர்களான இருவரும், விஜய் டிவியின் ‘சூப்பர் சிங்கர்’ பாட்டுப் போட்டியின் ஆறாவது பருவத்தில் பங்கேற்று பல்லாயிரக்கணக்கானோரைக் கவர்ந்தனர்.
‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் இடம்பெற்ற ‘சின்ன மச்சான்’ பாடல் மூலம் இத்தம்பதியர் மேலும் புகழ் அடைந்தனர்.

சிங்கப்பூர் நிறுவனமான ‘லோகன் எண்டர்பிரைசஸ்’, இந்திய நிறுவனமான ‘நம்பிராஜன் இண்டர்நேஷனல் சினிமாஸ்’ இணைந்து வழங்கியுள்ள இப்பாடலுக்கு திரு ஷர்வன் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் திரு வடிவரசு.
இந்தப் பாடல் தற்போது காணொளியாகத் தயாரிக்கப்படுகிறது. இசைக் காணொளியின் இயக்குநரும் துணைத் தயாரிப்பாளரும் ஆவார் நடிகர் திரு சந்தோஷ் நம்பிராஜன்.
காணொளிக்கான நடனத்தை ‘மணிமாறன் கிரியேஷன்ஸ்’ அமைத்துள்ளது.
மரீனா பே, செந்தோசா போன்ற சிங்கப்பூரின் பிரபலமான இடங்களுடன் மலேசியாவின் பத்து மலையும் இந்த இசைக் காணொளியில் இடம்பெறும் என்று தெரிவித்தார் ‘லோகன் எண்டர்பிரைசஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பாளர் திரு லோகநாதன் கணேசன், 50.
“பொங்கலை மையமாகக் கொண்டு பாடல்கள் அதிகம் இயற்றப்படுவதில்லை. சிங்கப்பூரில் முதல் முறையாக இது போன்ற ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது உலகளவில் பிரபலமடையும் என்று நம்புகிறோம்.
“பாடல் வெளியிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதுமே செயலில் இறங்கிவிட்டோம். இரண்டே வாரங்களில் பாடலை இசையமைத்து வெளியிட்டுள்ளோம். இசைக் காணொளி பொங்கலுக்கு முன் வெளிடயிடப்படும்,” என்றார் திரு லோகநாதன்.