எஸ்.வெங்கடேஷ்வரன்
தொடக்கப்பள்ளித் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றும் திருமதி விக்னேஸ்வரி ரெத்தினம் தமது மாணவர்கள் உட்பட 20 பேர் உள்ளடக்கிய குழுவுடன் இவ்வாண்டு சன்லவ் தாதிமை இல்லத்தில் கிறிஸ்மஸ் அன்று கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
ஒன்றரை மணி நேர நிகழ்ச்சியில் ஏறத்தாழ 200 இல்லவாசிகள் பங்கேற்று மகிழ்ந்தனர். இல்லவாசிகளுடன் பேசிப் பழகியதுடன் கிறிஸ்மஸ் பாடல்களையும் பாடி மகிழ்வித்தனர் திருமதி விக்னேஸ்வரியும் அவரின் குழுவினரும்.
கிட்டத்தட்ட 600 இல்லவாசிகளுக்கு அன்று மதிய உணவும் ஏற்பாடு செய்திருந்தனர்.
“இங்கு தங்கும் முதியவர்கள் பெரும்பாலும் தனிமையில் வசிக்கிறார்கள். அவர்களுடன் வெளி மனிதர்கள் பேசிப் பழகுவது அரிது. சிறிது நேரத்திற்காவது அவர்களை மகிழ்விப்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். கிறிஸ்மஸ் வழமையான ஒரு நாளாக இல்லாமல் பலருடன் பேசிச் சிரிக்கும் ஒரு கொண்டாட்ட நாளாக அமைந்ததில் அவர்களுக்கு மகிழ்ச்சி,” என்றார் திருமதி விக்னேஸ்வரி.
திருமதி விக்னேஸ்வரியின் குடும்பத்தினரின் புதிய வரவான கண்ணனும் நிகழ்ச்சியில் பங்கேற்று முதியோரை உற்சாகப்படுத்தியது. ‘மக்காவ்’ இன கிளியான கண்ணன் வெளிப்புற விழா நிகழ்ச்சியில் பங்கேற்றது இதுதான் முதன்முறை.
“கிறிஸ்மஸ் பாடல்களைப் பாடும்போது கண்ணன் இறக்கைகளை அசைத்து ஆடிக்கொண்டிருந்தது. இல்லக் குடியிருப்பாளர்களும் கண்ணனுடன் பேசி மகிழ்ந் தனர்,” என்றார் திருமதி விக்னேஸ்வரி.
சன்லவ் தாதிமை இல்லத்தில் கடந்த 11 ஆண்டுகளாக தமது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்து வருகிறார் 39 வயது திருமதி விக்னேஸ்வரி ரெத்தினம்.
தாதிமை இல்லத்துடன் சன்லவ் அமைப்பின் 8 நிலையங்களிலும் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் இடம்பெற்றது.
கடந்த வாரம் 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெற்ற கிறிஸ்மஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் சன்லவ் நிலையங்களின் சிறார்களும் முதியவர்களும் என கிட்டத்தட்ட 1,200 பேர் கலந்துகொண்டனர்.
சன்லவ் குடியிருப்பாளர்கள் உட்பட பொதுமக்களும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர் என்றும் ‘கம்போங் ஸ்பிரிட்’ எனப்படும் சமூக உணர்வை இது பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டார் ‘சன்லவ்’ அமைப்பின் தலைமைத் திட்ட அதிகாரி திரு ஸ்ரீ ராஜமோகன், 59.
“உணவு வழங்குவது, ‘சான்டா கிளோஸ்’ வேடமணிந்து மக்களை மகிழ்விப்பது, கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது என பல அங்கங்களில் பொதுமக்கள், குடியிருப்பாளர்கள் பங்களித்தனர். கிறிஸ்மஸ் கொண்டாடும் சில குடியிருப்பாளர்கள் கிறிஸ்மஸ் கதைகளைக் கூறி, இப்பண்டிகையைப் பற்றி சன்லவ் இல்லக் குடியிருப்பாளர்களுக்கு விளக்கினர்,” என்று திரு ராஜமோகன் தெரிவித்தார்.