கிறிஸ்மஸ் நெருங்கும்போது அக்கம்பக்க சமூக மன்ற வளாகங்களில் அல்லது அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்த் தளங்களில் கொண்டாட்டங்கள் இடம்பெறுவது வழக்கம்.
கடந்த ஞாயிறு அன்று (டிசம்பர் 22ஆம் தேதி) உட்கிரோவ் சமூக மன்ற இந்தியர் நற்பணி செயற்குழுவும் உட்கிரோவ் குடிமக்கள் ஆலோசனைக் குழுவும் இணைந்து ஒரு நூதன முயற்சியில் இறங்கின.
பரபரப்பான உட்லண்ட்ஸ் பெருவிரைவு ரயில் நிலையத்தில் கிறிஸ்மஸ் விழாக்கால உணர்வை வெளிக்கொணரும் வகையில் கிறிஸ்மஸ் ‘கேரல்’ கீதங்களை பாடும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஜீவன் அபோஸ்தலிக் தேவாலயம், விக்ட்ரி ஹார்வெர்ஸ்ட் தேவாலயம் ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் கிறிஸ்மஸ் ‘கேரல்’ கீதங்களைப் பாடி பயணிகளை மகிழ்வித்தனர்.
இசையுடன் கூடிய பாடல்களை கேட்க பெரியவர்களும் சிறார்களும் பாடகர்கள் முன்னிலையில் கூடி ஆதரவு நல்கினர்.
பிற்பகல் 2 மணியிலிருந்து நடந்த இசை நிகழ்ச்சிக்கு ஆதரவு தர, மார்சிலிங்- இயூ டீ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஒங் டெங் கூன் அங்கு வருகை புரிந்திருந்தார்.
இதில் உட்கிரோவ் சமூக மன்ற உறுப்பினர்கள் கிறிஸ்மஸ் தாத்தாவான சான்டா கிளோஸைப் போன்று உடை அணிந்து, பரிசுப் பொட்டலப்பையிலிருந்து சாக்லெட்டுகளையும் குக்கிஸ்களையும் அன்பளிப்பாக வழங்கினர்.
‘‘கிறிஸ்மஸ் தாத்தாவாக உடையணிந்து அன்பளிப்புக் கொடுப்பது என் முதல் அனுபவம். கிறிஸ்மஸ் அன்பளிப்புகளைப் பெற்றவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அது எனக்கு இன்பமான தருணமாக விளங்கியது. எங்களுடன் அவர்கள் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்,’’ என்று தமது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் உட்கிரோவ் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் உறுப்பினரான திரு தேவதாஸ் தமிழ்ச்செல்வன், 38.