கொரோனா கிருமித்தொற்றுக்கு மத்தியில் தைப்பூசத்திற்கு அடுத்ததாக கூட்டம் நிறைந்த வழிபாட்டுப் பெருவிழாவான மகா சிவராத்திரி சிங்கப்பூரிலுள்ள பல்வேறு ஆலயங்களில் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெற்றது.
ஆலயத்தினரின் வற்புறுத்தலின்றி பக்தர்கள், நிலவரத்தை உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைளுக்கு ஒத்துழைப்பு தந்த துடன் முகக்கவசம் அணிதல் போன்றவற்றைச் சுயமாக செய்ததைக் கண்டதாக ஆலய நிர்வாகிகள் பலர் தமிழ் முரசிடம் மனநிறைவுடன் தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் சிவராத்திரி வழிபாடுகளுக்கு ஆக அதிகமானோர் கேலாங் ஈஸ்ட் வட்டாரத்திலுள்ள ஸ்ரீ சிவன் கோயிலில் கூடுவது வழக்கம்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டின் கூட்டம் சுமார் 10 விழுக்காடு குறைந்திருந்தாலும் கிட்டத்தட்ட 10,000 பேர் வந்திருந்ததாக ஆலயத்தின் தலைவர் என். வெங்கடேஷ் தெரிவித்தார்.
ஆலயத்திற்குள் ஒரே ஒரு நுழைவாயின் வழியாக மட்டும் நுழைய அனுமதிக்கப்பட்ட பக்தர்களின் வெப்பநிலை, வெப்பமானிகளாலும் வெப்பநிலையைக் கண்டறியும் திரைகளாலும் சோதிக்கப்பட்டது. கைகளைச் சுத்தம் செய்வதற்கான கிருமிநாசினிகளும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.
ஸ்ரீ சிவன் கோயில் சிவராத்திரி வழிபாட்டில் நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பாதுகாப்பு விதிமுறைகள் இருந்தும் ஆலயச் சூழலில் எந்த மாற்றத்தையும் தாம் உணரவில்லை என்று பக்தர்களில் ஒருவரான எஸ். நாகராஜன், 55 தெரிவித்தார்.
வர்த்தக மேம்பாட்டு நிர்வாகியாகப் பணிபுரியும் 24 வயது மகாலட்சுமி போன்ற சிலர் முகக்கவசங்களை அணிந்து வந்தனர்.
“எனக்குச் சிறிதளவு சளி இருப்பதைப் போல உணர்ந்தேன். இந்து சமயத்தைச் சேர்ந்தவள் என்ற முறையில் இங்கு வர கடமைப்பட்டுள்ளதாக நான் எண்ணியபோதும் சமுதாயப் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என விரும்பினேன்,” என்றார் அவர்.
வெப்பநிலையை ஸ்கேன் செய்யும் இரண்டு திரைகள் கேலாங் ஈஸ்ட் சிவன் கோயிலிலும் ஒரு திரை காலாங் ரோட்டிலுள்ள மன்மத காருணீஸ்வரர் கோயிலிலும் பொருத்தப்பட்டிருந்தன.
சிறிய வளாகமான ஸ்ரீ மன்மத காருணீஸ்வரர் கோயிலுக்கு இந்து அறக்கட்டளை வாரியம் வழங்கிய அந்தத் திரை பேருதவியாக இருந்ததாக அதன் அறங்காவலர் திரு அஷோக் குமார் தெரிவித்தார்.
வந்திருந்த பக்தர்கள் நிலைமையைப் புரிந்துகொண்டு ஒத்துழைத்ததாக இக்கோயிலின் மற்றோர் அறங்காவலரான பாலகிருஷ்ணன் சுந்தரராஜ் தெரிவித்தார்.
“புதுப்பிப்புப் பணிகள் செய்யப்பட்டு வரும் எங்கள் ஆலயத்திலும் குறைந்தது மூன்று இடங்களில் நாங்கள், உள்ளே வந்த சுமார் 1,000 பக்தர்களின் உடல்வெப்பத்தைச் சோதித்தோம்,” என்று கூறினார் ஸ்ரீ சிவகிருஷ்ணா ஆலயத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் வி. சிவகுமார்.
இந்து அறக்கட்டளை வாரியம் கொடுத்திருந்த வெப்பமானிகளுடன் ஆலயம் கூடுதலாக சில வெப்பமானிகளை வாங்கியதாகவும் அவர் கூறினார்.
வெவ்வேறு ஆலயங்களின் அணுகுமுறைகள் சற்று வேறுபட்டிருந்தாலும் முடிவில் பக்தர்களுக்கும் ஆலயத் தொண்டூழியர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பைக்காண முடிந்தது.
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் வழி தைப்பூசம் போல சிவாரத்திரி விழா வெற்றிகரமாக நடந்தேறியதாகத் தெரிவித்த இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு த. ராஜசேகர், கிருமித்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தைப் பெரும்பாலானோர் நன்கு அறிந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.