ஸ்ரீ நாராயண மிஷன் முதியோர் இல்லவாசி திரு ராமச்சந்திரன் கண்ணப்பன், 90 தம் வாழ்நாளில் பலவற்றைக் கண்டிருந்தபோதும் தற்போது நிலவும் கொரோனா கிருமித்தொற்று மாறுபட்ட கவலையை அளித்துள்ளதாகத் தெரிவித்தார். இருந்தபோதும் இந்த நோய்ப்பரவலைச் சமாளிக்கும்போது மருத்துவ ரீதியிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவரும் அதே வேளையில் மனம் தளரவிடாமல் பாதுகாத்துக்கொள்வது முக்கியம் என்றார் அந்த முதியவர்.
“இப்போதெல்லாம் செய்தித்தாளைப் படிக்கும்போது நான் அதிகம் கவலைப்படுவேன். வாழ்ந்து முடித்த எனக்காக அல்ல. தங்கள் வாழ்நாளில் எவ்வளவோ சாதிக்க வேண்டிய என் பேரப்பிள்ளைகளைப் போன்ற இளையர்களுக்காக,” என்றார் திரு ராமச்சந்திரன்.
இல்லவாசிகளின் செயற்குழுத் தலைவராகவும் இருக்கும் திரு ராமச்சந்திரன், தம்மைப் போன்ற பிற முதியோரையும் பராமரிப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். கொரோனா கிருமிப்பரவல் குறித்த அச்சத்துக்கு இடையே சக இல்லவாசிகள் சரியாக சாப்பிட்டு தங்களைப் பார்த்துக்கொள்கிறார்களா என கவனித்து வருகிறார்.
“இங்குள்ள ஒவ்வொரு முதியோரும் வெவ்வேறு மனநிலையில் இருப்பர். சிலர் மனமுவந்து ஈடுபடுகிறார்கள். வேறு சிலருக்கோ பிடிவாதம் சற்று அதிகமாக இருக்கும். பலருக்கு ஞாபகமறதி என்பதால் அதனையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும். இவர்கள் அனைவரையும் இல்லப் பணியாளர்களும் நாமும் அரவணைத்து அவர்களுக்கு தைரியமூட்டி வருகிறோம்,” என்று அவர் சொன்னார்.
இவரைப் போன்ற முதியோர் இல்லவாசிகளுக்கும் இல்லப் பணியாளர் மற்றும் நிர்வாகிகளுக்கும் பக்கபலமாக நிற்கும் தெமாசெக் அறநிறுவனம், கைகளுக்குப் பயன்படுத்தப்படும் கிருமிநாசினி திரவங்களை வழங்குகிறது.
அந்த அறநிறுவனம் தனது முதற்கட்ட நடவடிக்கையாக நேற்று முன்தினம் மார்ச் 13ல் ஸ்ரீ நாராயண மிஷன் பராமரிப்பு இல்லத்திற்கும் ஜாமியா இல்லத்திற்கும் இந்தக் கிருமிநாசினிகளை வழங்கியது. 300 பராமரிப்பு நிலையங்களுக்கு இதுபோன்ற உதவிப் பொருட்கள் வழங்கப்படும் என்றார் தெமாசெக் அறநிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் மேக்னஸ்.
“முதியவர்கள் சமுதாயத்தினரால் பொதுவாக மறக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். உரிய பராமரிப்பு இல்லாவிட்டால் அவர்கள் பல்வேறு அபாயங்களை எதிர்நோக்கக்கூடும். எனவே அவர்களைக் கண்காணித்து உரிய உதவிகளைக் கொடுப்பது முக்கியம்,” என்றார் திரு மேக்னஸ்.
நோய்ப்பரவலால் அனைவருக்கும் பீதி ஏற்படுவது இயற்கை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதில்தான் இல்லப்பணியாளர்கள் கவனம் செலுத்துவதாக ஆறு ஆண்டுகளாகப் பணியாற்றும் பராமரிப்பாளரான ச. மகாலட்சுமி, 42 கூறினார்.
“நமது சுகாதார பராமரிப்பின் தரம் உயர்வாக இருப்பதால் ஏற்கெனவே செய்யப்பட்டு வரும் சுகாதார நடவடிக்கைகளே இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக உள்ளன,” என்றார் மகாலட்சுமி.
இத்தகைய நேரங்களில் பொது இடங்களைவிட இந்த முதியோர் இல்லத்தில் பாதுகாப்பு அதிகம் என உணர்வதாக மற்றொரு இல்லவாசியான திரு லட்சுமணன் பிரகாசம், 84, தெரிவித்தார்.
“நோய்ப்பரவல் குறித்து எனக்கு சற்று பயமாகவே இருந்தது. இல்லப் பணியாளர்கள் இதனை திறமையாகக் கையாள்வதைக் கண்டு நான் வியப்படைகிறேன்,” என்றார் இளம்பருவத்தில் தபால் அதிகாரியாகப் பணியாற்றிய திரு லட்சுமணன்.
மகாலட்சுமி போன்ற பராமரிப்பாளர்களின் சேவை பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்குக் கொடுக்கும் பராமரிப்புக்கு ஒப்பானது என்றார் திரு லட்சுமணன்.
கொரோனா கிருமித்தொற்று தொடங்கியது முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மாற்று வேலை ஏற்பாடு என பல்வேறு திட்டங்கள் நடப்பில் இருப்பதாகக் கூறினார் ஸ்ரீ நாராயண மிஷன் பராமரிப்பு இல்லத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ். தேவேந்திரன்.