1970களில் தொடக்கப்பள்ளி ஒன்றாம் வகுப்பு மாணவியான பூங்கொடி பொன்னுசாமி அப்போது தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட பல் அழகுப் போட்டியில் முதல் பரிசு வென்றார். அந்த அற்புதமான நிகழ்வை நினைவூட்டிய புகைப்படம் ஒன்று சில நாட்களுக்கு முன் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளில் வெளிவந்தது. பல காலம் கடந்த பின்னர் வெளியிடப்பட்ட இப்புகைப்படம் தம்மை வியப்பில் ஆழ்த்தியதாக தற்போது 52 வயதாகும் பூங்கொடி தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
அந்தப் படம் எடுக்கப்பட்டபோது அவருக்கு வயது ஆறு. தஞ்சோங் பகார் வட்டாரத்தில் நான்கு சகோதரர்களுடன் வளர்ந்த பூங்கொடி, பெக் சியா தொடக்கப்பள்ளியில் பயின்றபோது அதன் பல்மருத்துவ தாதியர்கள் தமது பற்களின் சீரான வரிசை கண்டு பாராட்டியதை நினைவுகூர்ந்தார்.
“ஒரு நாள் என் பெற்றோர் அரங்கம் ஒன்றுக்கு என்னை அழைத்தனர். அங்கு அமர்ந்திருந்த பெருங்கூட்டத்தின் முன்னிலையில் எனக்கு அந்தப் பரிசு வழங்கப்பட்டது. அப்போது தொலைக்காட்சியில் செய்தி வாசித்த வெள்ளைக்காரர் ஒருவர் எனக்கு அந்தப் பரிசை வழங்கியதாக எனக்கு நினைவு இருக்கிறது,” என நினைவுப்படுத்திச் சொன்னார் அவர்.
ஹைதராபாத் ரோட்டில் இருந்த பல் சுகாதார கல்விப் பிரிவில் நடந்த பல் சுகாதாரப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்ற 10 பேரில் திருவாட்டி பூங்கொடி முதல்
நிலையில் வெற்றியடைந்து 200 வெள்ளி பரிசைத் தட்டிச்சென்றார். கோல்கேட் - (ஈஸ்டர்ன்) பாம்ஆலிவ் லிமிட்டெட் ஆதரவளித்த இந்நிகழ்ச்சியில் 724 தொடக்கப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இரண்டாவது பரிசு டோர்செட் பள்ளியைச் சேர்ந்த லிம் சியாவ் ஹூனுக்கும் மூன்றாம் பரிசு கிம் செங் வெஸ்ட் பள்ளியைச் சேர்ந்த டி. ராஜசேகருக்கும் கிடைத்ததாக 1974ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளில் வெளிவந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போட்டியின் நீதிபதிகளாக நான்கு பல் மருத்துவ தாதியர்களான டியோ ஹுவா யின், வோங் கீ வான், பிலோமெனா, ஆர். ஸ்ரீனிவாசன் ஆகியோருடன் படம் எடுத்ததுதான் அவ்வளவு நினைவில் இல்லை என்று திருவாட்டி பூங்கொடி தெரிவித்தார். ஆனால் அவர்கள் அனைவரையும் காட்டிய படம் 1974ல் வெளிவந்த செய்தியில் இருந்ததைக்காட்டிலும் பெரிய அளவில் கடந்த மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸில் வெளியானதைக் கண்டு மேலும் வியந்ததாக பூங்கொடி கூறினார்.
தமிழ் முரசின் பேஸ்புக் பக்கத்தில் பூங்கொடியைத் தொடர்புகொள்ளக் கேட்டிருந்த பதிவு பற்றி ஜேக்சன் என்பவர் திருவாட்டி பூங்கொடிக்குத் தெரிவித்தார். அதன் மூலம் தமிழ் முரசு திருவாட்டி பூங்கொடியைத் தொடர்புகொண்டு அவரது பள்ளிப்பருவ நினைவுகளைப் பகிர்ந்துகொண்டது.
“அரிதான அந்தப் புகைப்படத்தை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளில் பார்த்த நான், அதன் பிறகு தமிழ் முரசின் பேஸ்புக் பதிவு குறித்து பூங்கொடியிடம் தெரிவித்தேன்,” என்று கூறினார் விமான நிலைய பயணச் சேவை அதிகாரியாகப் பணியாற்றும் ஜேக்சன் சந்திரசேகரன், 53.
பல் அழகுப் போட்டியில் வென்றதை அடுத்து, தம் பள்ளியின் தமிழ் ஆசிரியர்களும் சக மாணவர்களும் தம்மை ‘பல்லழகி’ என அழைக்கத் தொடங்கியதாக புன்னகையுடன் நினைவுகூர்ந்தார் பூங்கொடி.
“குறிப்பாக திரு முத்தையா என்ற ஆசிரியர் என்னை அப்படி அழைத்ததாக எனக்கு நினைவு இருக்கிறது,” என்ற அவர், போட்டிக்குப் பிறகு சிறிது காலம் பள்ளியின் குட்டிப் பிரபலமாக வலம் வந்ததாகச் சொன்னார். வயதான சிலர் இன்றுகூட தம்மை அப்படியே அழைப்பதாக அவர் குறிப்பிட்டார். பூங்கொடியின் பற்கள் இப்போதும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதைக் காண முடிந்தது.
சிங்கப்பூர் மக்கள் கம்பத்து வாழ்க்கை முறையிலிருந்து நகரச்சூழலுக்கு மாறிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் திருவாட்டி பூங்கொடியின் பிள்ளைப்பருவம் கழிந்தது. 2004ஆம் ஆண்டில் 74 வயதாக இருந்த தமது தந்தை சங்கரன் பொன்னுசாமி காலமாகிவிட, தற்போது தமது தாயார் திலகத்துக்கு 77 வயது ஆவதாகக் கூறினார். நான்கு சகோதரர்களுடன் ஒரே வீட்டில் வளர்ந்த நாட்கள் தம் வாழ்நாளில் மறக்கமுடியாத பசுமையான காலக்கட்டம் எனத் தெரிவித்தார்.
“வெயில், மழை பாராமல் வெளியில் விளையாடினோம். சேறு சகதியை பொருட்டாகக் கருதமாட்டோம். தெருத்தெருவாகச் சுற்றும் ‘பாய்’யிடம் ‘காயா’ ரொட்டி வாங்கினோம். மரங்களில் ஏறிப் பழங்களைப் பறித்தோம். காயம்பட்டாலும் அதனை மிகைப்படுத்தமாட்டோம். இக்காலத்தில் எந்நேரமும் தொழில்நுட்பத்தில் மூழ்கியுள்ள பிள்ளைகள் பலருக்குக் கிடைத்திராத அந்த அரிய அனுபவங்கள் இன்றும் நினைக்க நினைக்க இனிமையானவை.
“அனைவரின் கதவுகள் திறந்தே இருக்கும். இன, சமய வேற்றுமையின்றி எல்லோரும் பழகுவோம். அக்காலத்தில் பலருக்குப் படிப்பறிவு இல்லாதபோதும் பண்புகள் இருந்தன,” என்றார் பூங்கொடி.
பிள்ளைப்பருவத்தின்போது மக்களுக்கு இடையே இருந்த நெருக்கம் இப்போது குறைந்துவிட்டதாக உணர்கிறார் இந்த மாது.
தற்போது கே கே மகளிர் குழந்தைகள் மருத்துவமனையில் மூத்த இணை நிர்வாகியாகப் பணிபுரியும் பூங்கொடி, ஜூரோங் வட்டாரத்தில் தமது 22 வயது மகன் அரவிந்துடனும் 17 வயது மகள் அஷ்மிதாவுடனும் வசிக்கிறார்.