சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம் பார்த்த முதல் யானையான அனுஷா, இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு 1973ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வந்தது.
அதற்குப் பின் 1974ஆம் ஆண்டில் நான்கு வயதில் ‘குமாளி’ என்ற இலங்கை யானையும் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் குடிபுகுந்தது. தற்போது ஏறக்குறைய 50 வயதாகும் குமாளியை இன்னும் விலங்கியல் தோட்டத்தில் காணலாம். சிங்கப்பூரர்களின் மனதில் பதிந்த இந்த யானைகளைத் தொடக்கத்தில் கண்காணித்த விலங்கியல் தோட்டக்காரர்களில் ஒருவர் திரு குமார் பிள்ளை, 68.
அதிக சம்பளமுள்ள சிங்கப்பூர் ஏர்லைன்சில் கிடைத்த வேலை வாய்ப்பை நிராகரித்து 48 ஆண்டுகளாக சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் பணியாற்றி வரும் திரு குமார் தற்போது சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகத்தில் சிறப்புத் திட்ட இயக்குநராக இருக்கிறார்.
“விலங்குகளுடன் பழகும் இந்த வேலையில் கிடைக்கும் மனநிறைவு, வேறு எந்த வேலையிலும் எனக்கு கிடைத்திருக்காது, அப்போது சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தின் நிர்வாகத் தலைவராக இருந்த டாக்டர் ஆங் சுவி லா, விலங்குகளுடன் பழகும் என் திறனைப் பார்த்து இந்த வேலைக்கு நான் மிகப் பொருத்தமானவன் என்று என்னிடம் சொன்னார்.
“அதிலிருந்து இங்கு என் பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறேன்,” என்றார் திரு குமார்.
தேசிய சேவை முடித்தபின், தமது நண்பர் மூலம் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் புதிதாக குதிரைகள் கொண்டு வரப்பட்டதை அறிந்துகொண்டார் திரு குமார்.
குதிரை ஓட்டுவதைக் கற்றுகொள்ள விருப்பம் கொண்ட திரு குமார் அதற்காகவே விலங்கியல் தோட்டத்தில் தொண்டூழியராகச் சேர்ந்தார்.
தொடக்கத்தில் காண்டாமிருகங்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பில் இருந்தபோது, திரு குமார் விலங்குகளுடன் கொண்டிருந்த இயற்கையான தொடர்பு ஆற்றலைப் பார்த்து டாக்டர் ஆங், சிங்கப்பூரின் முதல் யானைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார்.
“ஒரு முறை புதிய கண்காட்சிக்காக கூண்டிலிருந்து காண்டாமிருகங்களை விடுவித்தோம். சிறிது நேரம் கழித்து, அந்த காண்டாமிருகங்களை எப்படி மீண்டும் கூண்டுக்குள் அழைத்துச் செல்லப் போகிறேன் என்று டாக்டர் ஆங் என்னிடம் கேட்டார்.
“அதை நான் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் என் திட்டத்தை அவரிடம் சொன்னேன். அவர் எனக்கு அனுமதி தந்து அதைப் பார்க்கவேண்டும் என்று சொல்லி அங்கு நின்றார்.
“கூண்டில் நான் கதவைத் திறந்து பிடித்தேன். என்னோடு இருந்த மற்ற இரண்டு சக விலங்கியல் தோட்டக்காரர்கள் அந்த காண்டாமிருகங்களைப் கூண்டுக்குள் வழிகாட்டிக்கொண்டிருந்தார்கள்.
“பாதி வழியில் திடீரென்று அந்த காண்டாமிருகங்கள் திரும்பி, அந்த இரு தோட்டக்காரர்களையும் துரத்த தொடங்கின.
“அப்போது எனக்குள் ஏதோ ஒரு சக்தி வந்தது போல, ஒடிச் சென்று அந்த காண்டாமிருங்களைப் பார்த்து ‘நிறுத்து! உள்ளே செல்’ என்று கத்தினேன்.
“ஏதோ அதிர்ஷ்டமோ என்னமோ தெரியவில்லை, அந்த காண்டா
மிருகங்கள் கூண்டுக்குள் திரும்பிச் சென்றன, நான் கதவை மூடினேன்.
“அதைப் பார்த்த டாக்டர் ஆங், நான் யானைகளைப் பார்த்துக்கொள்ள பொருத்தமானவனாக இருப்பேன் என்று முடிவெடுத்தார்,” என்றார் திரு குமார்.
விலங்கியல் தோட்டத்தின் ஆரம்பக் காலத்தில் பல அம்சங்கள் ஆராயப்பட்டு வந்தன என்றும் பல தகவல்களைச் சொந்த முயற்சியில் படித்து, கண்டறிந்தார் என்றும் குறிப்பிட்டார் திரு குமார்.
உதாரணத்திற்கு ராஜநாகம் விலங்கியல் தோட்டத்திற்கு வந்தபோது அந்த நாகத்திற்கு பலவித மாமிச வகைகளை ஊட்டினோம். ஆனால் அது எதையும் சாப்பிடவில்லை.
தேசிய நூலகத்தில் இருந்த பாம்புகள் பற்றிய புத்தகங்களை திரு குமார் படித்தபோது, ராஜநாகம் மற்ற சிறு பாம்புகளை பிரதானமாக சாப்பிடும் என்று கண்டறிந்தார். குட்டி பாம்புகளை ராஜநாகத்திற்கு உணவாக வழங்கியபோது அதுவும் உண்டது.
“தொடக்க காலத்தில் இணைய வசதி, அதிக கல்வி அறிவு போன்றவை இருக்கவில்லை. ஒரு விலங்கு என்ன சாப்பிடும் என்று ஒரு கணிப்பில் அதற்கு உணவு வழங்குவோம்.
“இப்போது ஊட்டச்சத்து நிபுணர், ஒவ்வொரு விலங்குக்கும் ஏற்ற முறையான ஊட்டச்சத்தை அறிந்து அதற்கு தகுந்த உணவைத் தயாரிப்பார். அனைத்தும் அறிவியல் அடிப்படையில் நடத்தப்படுகிறது,” என்றார் திரு குமார்.
உலக அளவில், ‘நைட் சஃபாரி’ எனப்படும் விலங்கியல் தோட்டத்தில் இரவு சுற்றுலாப் பயணத்தை வழங்கிய முதல் நாடு சிங்கப்பூர்.
இந்தச் சிறப்புப் பயணத்தை உருவாக்கிய குழு உறுப்பினர்களில் ஒருவர் திரு குமார்.
‘நைட் சஃப்பாரி’யின் பொது நிர்வாகியாகவும் சில ஆண்டுகள் பொறுப்பேற்றார் திரு குமார்.
“தொடக்கத்தில் நடத்திய ஆய்வுகளின் மூலம் ஒரு வாரநாட்களில் 600 வருகையாளர்களும் வாரயிறுதியில் 1,000 வருகையாளர்களும் ‘நைட் சஃபாரி’க்கு வந்தால் நாம் நல்ல நிலையில் இருப்போம் என்று கருதினோம்.
“ஆனால் அது மிகவும் தப்புக் கணக்காகிவிட்டது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் ‘நைட் சஃபாரி’க்கு வந்தனர்.
“ஒன்பது பேருந்துகளுடன் தொடங்கி, இப்போது 22 பேருந்துகளை சேவையாற்றுகிறோம்,” என்றார் திரு குமார்.
ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தின் வருகையாளர்களின் எண்ணிக்கை இப்போது ஓர் ஆண்டுக்கு கிட்டத்தட்ட இரண்டு மில்லியனாக இருக்கிறது.
உலகத்தரமான விலங்கு சுகாதாரப் பராமரிப்பு வசதிகள் உட்பட திறன்மிக்க கால்நடை மருத்துவர்களைக் கொண்ட கால்நடை மருத்துவமனையும் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் உண்டு என்று பெருமையுடன் கூறினார் திரு குமார்.
“அனைத்து விலங்கியல் தோட்டங்களும் விலங்குகளின் பராமரிப்புக்கு முன்னுரிமை வழங்கவேண்டும்.
“இதைத்தான் சிங்கப்பூரின் வனவிலங்கு காப்பகமும் செய்து வருகிறது.
“அதற்குப் பின் வனத்தில் இருக்கும் வனவிலங்குகள், அவற்றின் இயற்கை வாழ்விடங்கள் ஆகியவற்றைப் பேணிக்காப்பதற்கும் முயற்சி எடுக்கலாம்,” என்றார் திரு குமார்.