சிங்கப்பூரில் கொவிட்-19 நோய் பரவுவதற்கு முன், வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வது, உணவங்காடி நிலையங்களில் நண்பர்களோடு சேர்ந்து உணவருந்துவது, லிட்டில் இந்தியாவிற்குச் சென்று காய்கறிகள் வாங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் முதியவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால், கொவிட்-19 நோயை ஏற்படுத்தும் கொரோனா கிருமித்தொற்று தீவிரமடைய, கிருமி பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டத்தை அரசாங்கம் அமல்படுத்தியது.
அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக தாங்கள் கடைப்பிடித்து வந்த வாழ்க்கைமுறையில் மாற்றங்கள் தேவைப்படும்போது முதியவர்கள் மனதளவில் பாதிக்கப்படக்கூடும்.
இதனைப் பற்றி மேலும் அறிய, மனநல நிபுணர்களின் கருத்துகளை தமிழ் முரசு சேகரித்தது.
முதியவர்களுக்கு எத்தகைய மனநல பாதிப்பு ஏற்படக்கூடும்?
கிருமித்தொற்றைப் பற்றி புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் செய்திகளில் கொவிட்-19 நோய்ப் பரவலைப் பற்றி படிக்கும்போது முதியவர்களுக்கு மனவுளைச்சல் ஏற்படக்கூடும் என்று மனநலக் கழக மருத்துவர் டாக்டர் நிகிலா ரவிச்சந்திரன் குறிப்பிட்டார்.
எந்தச் செய்தியை நம்புவது எனத் தெரியாமல் குழப்பமடைவது, வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதது முதியவர்களை மனவுளைச்சலுக்கு இட்டுச்செல்லலாம் என்றார் அவர்.
ஊடகங்களில் படிக்கும் செய்தி ஒரு சிலரைப் பதற்றமடையச் செய்யும் என்றார் பிரொமிசஸ் (வின்ஸ்லொ) மருந்தகத்தின் மூத்த மனநல மருத்துவர் டாக்டர் ஜேக்கப் ராஜேஷ்.
குறிப்பாக, வயதானவர்களும் நாள்பட்ட நோய் உடையோரும் அவர்களைப் பராமரிப்பவர்களும் மனவுளைச்சலுக்கு ஆளாகும் சாத்தியமுள்ளது என்று அவர் கூறினார்.
காரணம், முதியவர்களைக் கிருமி தொற்றினால் அதிக சிக்கல்களை அது ஏற்படுத்திவிடக்கூடும்.
தங்களது அல்லது தங்களது அன்புக்குரியவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுமோ என்ற கவலையும் முதியவர்களுக்கு ஏற்படலாம் என்றார் அவர்.
உதாரணத்திற்கு, தூங்குவதிலோ அல்லது ஒரு காரியத்தில் கவனம் செலுத்துவதிலோ அவர்கள் சிரமத்தை எதிர்நோக்கக்கூடும்.
எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது?
முடிந்தவரை முதியவர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் நேரத்துடன் உணவருந்தி எளிய உடற்பயிற்சிகளைச் செய்வது உகந்தது என்றும் டாக்டர் நிகிலா கூறினார்.
உதவி தேவைப்பட்டால் குடும்ப உறுப்பினர்களைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்திய அவர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வலம்வரும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை நம்ப வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தெரியாத முதியவர்கள், தொலைபேசிவழி உறவினர்கள், நண்பர்களைத் தொடர்புகொள்ளலாம். தனிமை உணர்வைப் போக்கி பயத்தைக் குறைக்க இது உதவும் என்று டாக்டர் ஜேக்கப் சொன்னார்.
தொலைக்காட்சி, செய்தித்தாள், வானொலி உள்ளிட்ட பிரதான ஊடகங்களில் கொவிட்-19 பற்றி ஆக அண்மைய செய்திகளைத் தெரிந்துகொள்ளலாம்.
குடும்ப உறுப்பினர்கள் எவ்வாறு உதவலாம்?
முதியவர்களின் உடல்நலம், மனநலம் தொடர்பில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா என்பதைக் குடும்ப உறுப்பினர்கள் கவனிக்க வேண்டும் என்று கூறிய டாக்டர் நிகிலா, இதில் அவர்களின் பங்கு முக்கியமானது என்று வலியுறுத்தினார்.
முதியவர்களின் பிரச்சினைகளைச் செவிமடுத்து கேட்பதும் உதவும்.
முதியவர்கள் தனியாக வசித்தால், நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும்போது அவர்களுக்கு உதவ யாராவது தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவசரத்திற்குத் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை அனைவரும் தெரிந்துகொள்வதும் முக்கியம் என்றும் அவர் கூறினார்.
குடும்ப உறுப்பினர்கள் முதியவர்களிடம் ஆக அண்மைய கொவிட்-19 நிலவரத்தைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று டாக்டர் ஜேக்கப் சொன்னார்.
வீட்டில் ஈடுபடக்கூடிய நடவடிக்கைகள்
இசை கேட்பது, உணவு சமைப்பது, ஓவியம் வரைவது, பேரப்பிள்ளைகளுக்குக் கதை சொல்வது, வீட்டு வேலை செய்வது, நூல் வாசிப்பது, தியானம் செய்வது, மெது நடைபயிற்சி மேற்கொள்வது என பல்வேறு நடவடிக்கைகளில் முதியோர் ஈடுபடலாம் என டாக்டர் நிகிலா விவரித்தார்.
வீட்டிலிருந்தவாறு சதுரங்கம் போன்ற விளையாட்டுகளை முதியவர்கள் விளையாடலாம் என்று டாக்டர் ஜேக்கப் குறிப்பிட்டார்.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தெரியாதவர்கள், சமூக ஊடகங்கள் மூலம் உறவினர்கள், நண்பர்களுடன் தொடர்பில் இருப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ளலாம்.
பராமரிப்பாளர்களுக்கு ஓய்வு அவசியம்
‘அல்ஸைமர்ஸ்’ (Alzheimer’s) எனப்படும் நினைவாற்றல் இழப்பு போன்ற நோய்கள் உடையோர் வழக்கமான நடவடிக்கைகளுடன் தொடர்பு வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று டாக்டர் ஜேக்கப் கூறினார்.
“முதியவர்களைப் பராமரிப்பவர்கள், கொவிட்-19 நிலவரத்தைப் பற்றி அவர்களிடம் எளிய முறையில் எடுத்துச் சொல்ல வேண்டும். அதனைப் பற்றி பலமுறை அவர்களுக்கு நினைவுப்படுத்த வேண்டியிருக்கும்.
“விஷயங்களைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் முதியவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். தகவல்களை எழுத்து அல்லது பட வடிவமாக விவரிப்பது உதவும்,” என்றார் அவர்.
‘டிமென்ஷியா’ எனப்படும் முதுமைக்காலத்தில் வரும் ஞாபக மறதி நோய் உடையோரைப் பராமரிப்பவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட வேண்டும். அந்த நேரத்தில் முதியவர்களைப் பார்த்துக்கொள்ள குடும்ப உறுப்பினர்கள் உதவலாம்.
இதன்வழி பராமரிப்பாளர்களுக்கு மனவுளைச்சல் ஏற்படுவது, சோர்வு அடைவதற்கான சாத்தியம் குறையும்.
அண்டை வீட்டாரும் உதவலாம்
இக்காலகட்டத்தில் தனிமையில் வாழும் முதியவர்கள், தங்களது பிள்ளைகளுடன் அணுக்கமான உறவை கொண்டிராத முதியவர்களின் நலனைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று ‘விஸ்பரிங் ஹார்ட்ஸ்’ குடும்ப சேவை நிலையத்தின் மூத்த சமூக ஊழியரும் ‘கிளாப்2கேர்’ அமைப்பின் தொண்டூழியருமான குமாரி சந்திரசேகரன் காயத்திரி தெரிவித்தார்.
பெரும்பாலும் பிறருடன் அதிகம் தொடர்பு வைத்துக்கொள்ளாமல் வீட்டில் முடங்கிக்கிடக்கும் முதியவர்களுக்கு கொவிட்-19 நோய் குறித்தும் கிருமி பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் குறித்தும் அதிக விவரம் தெரியாமல் இருக்கலாம்.
முதியவர்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் மட்டும்தான் உதவ வேண்டும் என்றில்லை. அண்டை வீட்டாரும் தங்களது பங்கை ஆற்றலாம். எடுத்துக்காட்டாக, அவர்களுக்கு மளிகைப் பொருட்கள் வாங்க உதவலாம்.
முதியவர்களுக்கு தினசரி உணவு அல்லது இதர தேவைகளுக்கு உதவி தேவைப்பட்டால் சமூக மன்றம், மூத்தோர் நடவடிக்கை நிலையம் அல்லது சமூக சேவை அலுவலகத்திடம் தெரிவிக்கலாம்.
நீங்கள் பெற்றோருடன் சேர்ந்து வசிக்காவிட்டால் கீழ்வரும் குறிப்புகள் உங்களுக்கு உதவும்:
தொலைபேசிவழி தொடர்புகொள்வது அல்லது வாட்ஸ்அப் திறன்பேசி செயலி மூலம் காணொளி அழைப்பு செய்து முதியவர்களைத் தொடர்புகொள்ளலாம். தினமும் இதற்காக குறிப்பிட்ட நேரம் ஒதுக்கினால், பிள்ளைகளுடன் பேச முதியவர்கள் ஆவலுடன் இருப்பர்.
முதியவர்களுக்கு மளிகைப் பொருட்கள், மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்க குடும்ப உறுப்பினர்கள் உதவலாம். முதியவர்கள் அடிக்கடி வெளியே செல்வதற்கான தேவையை இது குறைக்கும். பொருட்களை அவர்களிடம் கொடுத்துவிட்டு செல்லலாம். மளிகைப் பொருட்களை வீட்டிற்கு விநியோகம் செய்யும் சேவையையும் அவர்கள் நாடலாம்.
தற்போது அரசாங்கம் வழங்கும் நிதி ஆதரவு குறித்து முதியவர்களிடம் விளக்கி, தகுந்த உதவி பெற வழிகாட்டலாம்.
முதியவர்கள் வழக்கமாக ஈடுபடும் நடவடிக்கைகளை இப்போது செய்ய முடியாத பட்சத்தில், மாற்று நடவடிக்கைகளை அவர்களுக்கு பரிந்துரைக்கலாம்.
வீட்டிலிருந்து முதியவர்களைப் பராமரிப்பவர்கள் இந்நேரத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். முதியவர்களைச் சமாளிப்பதில் சவாலை எதிர்நோக்கினால், தகுந்த உதவியை நாடவும்.
கீழ்க்கண்ட அமைப்புகளைத் தொடர்புகொண்டு முதியவர்கள் உதவி பெறலாம்:
சமூக சேவை அலுவலகம் - 1800 222 0000
ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு - 1800 650 6060
கொவிட்-19 தொடர்பான தேசிய பராமரிப்பு தொடர்பு எண் - 6202 6868
(‘கிளாப்2கேர்’ அமைப்பின் தமிழில் பேசக்கூடிய தொண்டூழியர்களும் இதில் இடம்பெறுகிறார்கள்)
மனநலக் கழகம் - 6389 2222