கிட்டத்தட்ட இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு பொருளியலின் ஒரு சிறுபகுதி முதல் கட்டமாக ஜூன் 2ஆம் தேதி முதல் இயங்கத் தொடங்குகிறது. தொடக்கத்தில் இடையூறுகள், பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும் என்றாலும் வெற்றிகரமாகச் செயல்பட்டு, சிங்கப்பூர் இரண்டாவது கட்ட மீட்சியில் நுழையும் என்பதே அனைவரதும் நம்பிக்கை.
ஜூன் 2ஆம் தேதி முதல் கொவிட்-19 நோய்ப்பரவல் முறியடிப்புக் கட்டுப்பாடுகள் முதல் கட்டமாக தளர்த்தப்படுவதை மக்களும் வர்த்தகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அதேநேரத்தில், நிச்சயமற்ற நிலையே இருக்கும் என பலரும் கருதுகின்றனர்.
தங்களது தொழில், சேவைகளை எந்தளவுக்கு வழங்கமுடியும் என்பது குறித்து இன்னும் தெளிவான முடிவுகள் என சில வர்த்தகர்கள் குறிப்பிட்டனர்.
‘லிஷா’ எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்க தலைவரான திரு ராஜ்குமார் சந்திரா, லிட்டில் இந்தியாவில் வர்த்தகச் சூழல் உடனடியாக சூடுபிடிக்காது என்றும் பெரும்பாலான கடைகள் ஜூன் மாதமும் மூடப்பட்டிருக்கும் என்றும் கூறினார்.
இக்காலகட்டத்தில் வர்த்தகங்கள் தங்கள் செயல்முறையை மாற்றியமைத்து இணையம் வழி சேவை வழங்குவதற்குத் தேவையான உதவிகளை லிட்டில் இந்தியா ஆர்கேட்டில் இயங்கும் சிறிய, நடுத்தர நிறுவன நிலையத்தில் பெறலாம். இந்த நிலையம் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபை, ‘என்டர்பிரைஸ் சிங்கப்பூர்’ அமைப்பின் ஆதரவுடன் இயங்குகிறது.
அடுத்த சில மாதங்களுக்கு வர்த்தக நிலைத்தன்மை குறித்த கவலை லிட்டில் இந்தியா வர்த்தகர்களுக்கு உள்ளது. வருமானம் இல்லாத நிலையில் வாடகை, ஊழியர் சம்பளம் போன்ற செலவுகளைச் சமாளிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், சிலர் தங்களது தொழிலை மூடிவிட முடிவெடுத்துள்ளனர் என்றார் திரு ராஜ்குமார்.
மளிகைப் பொருள் விற்பனையாளர்கள் வீட்டு விநியோகச் சேவை வழங்கினாலும் குறைந்த அளவில் அல்லது குறைந்த மதிப்புள்ள பொருட்களை வாங்கும் போது விநியோகத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டணம் வாடிக்கையாளருக்கு கட்டுப்படியானதாக இல்லை. அதனால் எல்லாரும் வாங்குவதில்லை என்று லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் கூறினர்.
தற்போதைய கிருமித்தொற்று நிலவரத்தைக் கருதி, ஒரே நேரத்தில் எல்லாக் கடைகளையும் திறக்க செய்வதும் அபாயமானது. அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இதனை கட்டம் கட்டமாக அணுக வேண்டும் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
ஜூலை மாதம் கடைகள் திறக்கப்படும்போது, சமூக இடைவெளி விதிமுறைகளை வாடிக்கையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும். கடையில் முழுமையான ஊழியர் அணி எண்ணிக்கையுடன் செயல்படுவதாக இருக்காது என்பதை திரு ராஜ்குமார் சுட்டினார்.
“சுற்றுப்பயணிகளை அதிகம் நம்பியுள்ள வர்த்தக வட்டாரங்களில் லிட்டில் இந்தியாவும் ஒன்று. இங்கு இயங்கும் சுமார் 20% சில்லறை வர்த்தகங்கள் சுற்றுப் பயணிகளையே அதிகம் நம்பியுள்ளன. முன்னைய வியாபாரச் சூழல் மீண்டும் லிட்டில் இந்தியாவுக்கு திரும்ப ஓராண்டு வரை எடுக்கலாம்,” என்றார் ஜோதி புஷ்பக்கடை உரிமையாளருமான திரு ராஜ்குமார்.
வர்த்தகர்களும் பொது மக்களும் பெரிதும் எதிர்பார்த்திருப்பது அனைத்துலக விமான சேவைகள். விநியோகம் சீர்பட்டு, பொருளியல் நடவடிக்கைகள் தொடர விமான சேவைகள் அத்தியாவசியமாக உள்ளன.
ஜூன் மாதம் இரண்டாம் தேதி முதல் பயணிகள் சாங்கி விமான நிலையம் வழியாக இடைவழிப் பயணம் செய்யலாம். கட்டங்கட்டமாக விமானப் போக்குவரத்தைத் திறக்கும் நடவடிக்கையை கவனத்துடன் செயல்படுத்தப்படுவதாக சிங்கப்பூர் சிவில் விமானப் போக்கு வரத்து ஆணையம் தெரிவித்தது.
இந்தியாவில் இரண்டு மாதங்கள் நீடித்த முடக்கநிலை தற்போது நீக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமானச் சேவைகள் ஆரம்பித்துள்ளன. எனினும், அனைத்துலக விமானச் சேவைகள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ஜூன் மாதத்தில் விமானப் பயணத்துறையைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க மாற்றமும் ஏற்படப்போவதில்லை எனக் கருதுவதாக பயண முகவர் தென்னரசன் காமாட்சி, 45 தெரிவித்திருக்கிறார்.
“பயண ரத்துகள், பயணிகளின் தொகையைத் திருப்பி அளித்த போன்ற பணியைத்தான் செய்து வருகிறோம். கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் மேலும் தளர்த்தப்பட்டாலும் இந்தியா, இலங்கை, பங்ளாதேஷ் உள்ளிட்ட நாடுகளின் அனைத்துலக விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இத்துறை தொடர்ந்து மந்தமாக இருக்கும்” என மற்றொரு பயண முகவர் சிரஜ் தெரிவித்தார்.
வாகனப் பழுதுபார்ப்பு முழுச் சேவை
வாகனப் பழுதுபார்ப்பு, சரிபார்ப்புச் சேவை களை ஜூன் 2 முதல் முழுமையாகப் பெறலாம். கிருமிப் பரவல் முறியடிப்பு காலத்தில் அவசர பழுதுபார்ப்புச் சேவைகளை மட்டும் வழங்க முடிந்ததால் வர்த்தகம் 60% சரிந்துவிட்டது. வாகன குளிர்சாதனத்தைட் பழுதுபார்த்தல் உள்ளிட்ட பல சேவைகளை வழங்க முடியவில்லை. மேலும், பட்டறையின் வேலை முறைகளில் பல்வேறு மாற்றங்களைச் செய்யவேண்டி இருந்தது. அவசர சேவையில் ஈடுபடாத ஊழியர்கள் சிலரைத் தற்காலிகமாக ஆட்குறைப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இனி அனைத்துச் சேவைகளையும் தொடர்ந்து வழங்க முடியும்.
கே. வீரமணி, 40 ‘ஓபிடபிள்யூ’ வாகன பழுதுபார்ப்புப் பட்டறை உரிமையாளர்
அனைத்து சட்ட சேவைகளையும் பெறலாம்
உயில் எழுதுவது, சொத்து, நிதி குறித்த சட்ட தேவைகள் போன்ற அத்தியாவசிய சட்ட சேவைகள் மட்டுமே தற்போது வழங் கப்படுகிறது. ஜூன் 2ஆம் தேதி முதல் அனைத்து சட்ட சேவைகளையும் மக்கள் பெறலாம். எனினும் சட்டத் துறையில் பணி புரிவோர் முடிந்தவரை இணைய காணொளி வசதியைப் பயன்படுத்தவேண்டும்.
திரு ராஜன் சுப்பிரமணியம்
எட்மண்ட் பெரேரா சட்ட நிறுவனம்
இந்திய இறக்குமதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பூ வியாபாரம்
இந்தியாவிலிருந்தே பூ வருவதால், இந்தியா எல்லைகளை மூடியதும் நானும் என் கணவரும் பூக் கடையை மூடிவிட்டோம். எனினும், எனது கணக்காய்வு வர்த்தகம், விடுதி உள்ளிட்ட மற்ற பல வர்த்தகங்களின் மூலம் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கினோம். ஆட்குறைப்பு செய்யவில்லை. சரக்குச் சேவைகள் தொடங்கப்பட்டாலும் இந்தியாவின் முடக்கநிலை முடிவுக்கு வந்து, அனைத்துலக போக்குவரத்து சேவை மீண்டும் செயல்படத் தொடங்கும்போதுதான் வர்த்தகங்கள் சீர்படும்.
திருவாட்டி விஜி ஜெகதீஷ், 55
மித்ரா புஷ்பக் கடை
முழுமையான சிகையலங்காரச் சேவைகள்
ஜூன் 1ஆம் தேதி முதல் முடி திருத்தச் சேவைகளுக்கான தடை முழுமையாக நீக்கப்படுவதில் மகிழ்ச்சி. முடிக்கு சாயம் பூசுதல், முடி சிகிச்சை உட்பட அனைத்துச் சேவைகளையும் இனி வழங்கலாம். கிருமிப் பரவல் முறியடிப்பு கால கட்டமான மே 12ஆம் தேதி முதல் மிக அடிப்படையான முடிதிருத்த சேவைகளையே வழங்க முடிந்தது. அதனால் ஆட்குறைப்பு செய்ய வேண்டிய நிலையில் இருந்தேன். தற்போது ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள எண்ணியிருக்கிறேன்.
திரு ஆர். ராம், 58,
‘பெர்ஃபெக் ஸ்டைல்’ சிகையலங்கார நிறுவன உரிமையாளர்
அழகுப் பராமரிப்புச் சேவை
முடிதிருத்துதல், தலைமுடிக்கு வண்ணமிடுதல் உட்பட முடிதிருத்த சேவைகளை வழங்கினாலும், அழகுப் பராமரிப்புச் சேவையின் கீழ் எனது கடையின் உரிமம் உள்ளதால், என்னால் ஜூன் மாதத்திலும் செயல்பட முடியாது. இதே சேவைகளை வழங்கும் சில நிறுவனங்கள் சிகை அலங்கார நிறுவனங்களாகப் பதிவு செய்திருப்பதால், அவை முழுமையாக முடக்கப்படவில்லை. ஏழு மாதங்களுக்கு முன்தான் இத்தொழிலை ஆரம்பித்தேன். இரண்டாவது கட்டத்திலாவது கடையைத் திறக்கமுடியும் என நம்புகிறேன். இல்லாவிட்டால் சிரமம் பன்மடங்காகும்.
குளிர்சாதனம் வாங்கலாம், பொருத்தலாம்
ஜூன் 2ஆம் தேதி முதல் குளிர்சாதன பராமரிப்பு, பழுதுபார்ப்புச் சேவைகள் உட்பட வீடுகள், அலுவகங்களுக்குப் புதிய குளிர்சாதனம் வாங்குவது, பொருத்துவது என அனைத்து சேவைகளையும் பெறலாம். தற்போது அத்தியாவசிய காரணங்களுக்கு மட்டுமே சேவையளித்து வருகிறோம்.
ஜூன் 2ஆம் தேதிக்குப் பிறகு குளிர்சாதன சேவைகளுக்குப் பலர் இப்போதே முன்பதிவு செய்துள்ளனர். கோரிக்கைகள் நிறைந்து இருப்பதால் மக்கள் சற்று பொறுமையாக இருக்கவேண்டும். ஜூன் மாத தொடக்கத்தில் உடனடியாக சேவை கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது.
- திரு தினேஷ் குமார், 40.
வென்ச்சர் ஏர்கோன் சர்வீசஸ்,
நிறுவன உரிமையாளர்
எதற்கெல்லாம் வெளியே செல்ல முடியாது...
* நண்பர், காதலரைக் காணச் செல்ல முடியாது.
* வேறு வீட்டில் வசிக்கும் பெற்றோர், தாத்தா, பாட்டியைச் சென்று பார்க்கலாம். ஆனால் அவர்கள் உங்கள் வீட்டுக்கு வரக்கூடாது.
* வெவ்வேறு வீடுகளில் தங்கியிருக்கும் சகோதரர்கள் ஒருவரையொருவர் நேரில் சென்று சந்திக்க முடியாது.
* பிள்ளைகள் இல்லாத முதியோருக்கு விதிவிலக்குகள் அளிக்கப்படலாம். அவர்களது உடன்பிறப்புகள் அல்லது உடன்பிறப்புகளின் பிள்ளைகள் சுகாதார அமைச்சிடம் உரிய விதிவிலக்குக்காக விண்ணப்பிக்க வேண்டும்.
* முதியோர் இல்லங்கள் உள்ளிட்ட பராமரிப்பு இல்லங்களுக்குச் செல்ல முடியாது. இரண்டாவது கட்டத்தில் இது மறுஆய்வு செய்யப்படும்.
* வேலைக்காக வெளிநாடு செல்ல முடியாது. புதிய அறிவிப்பு வெளிவரும் வரை தற்போதைய பயணக் கட்டுப்பாடுகள் தொடரும்.
* மார்ச் 27ஆம் தேதி முதல் பயண ஆலோசனைகளுக்குப் புறம்பாக வெளிநாடு சென்று திரும்பும் சிங்கப்பூரர்களுக்கு 14 நாட்களுக்குள் கொவிட்-19 தொற்று அறிகுறிகள் தென்பட்டால் அவர்களது மருத்துவமனைக் கட்டணங்களுக்குச் சலுகைகள் அளிக்கப்படமாட்டாது. எனினும், சிங்கப்பூரைப் போன்று சமூகப் பரவலின் அபாயம் மிகக் குறைவாக உள்ள நாடுகளுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பயணங்களுக்கான சாத்தியத்தை சிங்கப்பூர் ஆராய்ந்து வருகிறது. இதற்கும் உலகளாவிய கிருமிப் பரவல் நிலைமைக்கும் தொடர்பு உள்ளதால் இதற்கான நடவடிக்கைகள் தனியாகக் கையாளப்படும்.
* நீங்கள் மட்டுமோ அல்லது உங்களது குடும்பத்தினரோ விடுமுறைக்காக ஹோட்டலில் தங்க முடியாது.
சுகாதார ஊழியர்கள், பயணக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கும் வசதியை ஹோட்டல்கள் தற்போது வழங்கி வருகின்றன.
* மண்டாய் தகனச்சாலை உள்ளிட்ட அரசாங்கத்திற்குச் சொந்தமான தகனச் சாலைகளுக்கு எவரும் செல்ல முடியாது. சுவா சூ காங் இடுகாடும் பொதுமக்களுக்கு மூடப்பட்டிருக்கும். ‘கொலம்பேரிய’ங்களும் மூடப்பட்டிருக்கும்.
* வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்ல தற்போது அனுமதியில்லை.