கொவிட்19 பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருக்கும் வேளையில் மூத்த குடிமக்கள் எவரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் முதியவர்கள் பலரும் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல். இந்தத் தருணத்தைப் பயனுள்ள வழியில் செலவிட்டு, வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார் ஓய்வுபெற்ற துப்புரவு மேற்பார்வையாளரான திருவாட்டி ஜெயமணி ஒவிரெட்டி, 72.
பொழுதுபோக்காகக் கற்றுக்கொண்ட தையல் கலை இவரது எண்ணத்தைச் செயலாக்க உதவியது.
வீட்டில் சொந்தமாகத் தையல் இயந்திரம் வைத்திருக்கும் இவர், தன் செலவிலேயே துணிகளை வாங்கி, முகக்கவசங்களைத் தைத்து, உறவினர்கள், நண்பர்கள் மூலமாக வெளிநாட்டு ஊழியர்களுக்கு விநியோகித்தார். இதுவரை கிட்டத்தட்ட 150 முகக்கவசங்களை இவர் தைத்து விநியோகித்திருக்கிறார்.
“கடந்த 50 ஆண்டுகளாக தையல் கலையைப் பொழுதுபோக்காகக் கொண்டுள்ளேன். வீட்டிலேயே இருக்கும் நேரத்தை ஏன் பயனுள்ள வழியில் செலவிடக்கூடாது என்று நினைத்தேன்,” என்றார் திருவாட்டி ஜெயமணி.
தரமான, வலுவான பருத்தித் துணிகளைக் கொண்டு சிறியது, நடுத்தரமானது, பெரியது என மூன்று வெவ்வேறு அளவுகளில் இவர் முகக்கவசங்களைத் தைத்தார்.
அத்துடன், சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம், ஸ்ரீ நாராயண மிஷன், இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை, சமூக மன்றங்கள், சமய அமைப்புகள் என 15 வெவ்வேறு அமைப்புகளில் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக இவர் தொண்டூழியம் புரிந்து வருகிறார்.
தமது சமூகப் பணிகளுக்காக 2016ஆம் ஆண்டில் ‘எஸ்ஜி சைலன்ட் ஹீரோஸ்’ என்ற விருதை முன்னோடிப் பிரிவில் வென்ற பெருமைக்குரியவர் இவர்.
“சிறு வயதிலேயே மக்கள் சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வேர்விட்டது. தொண்டூழியம் புரிவது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது,” எனக் கூறும் திருவாட்டி ஜெயமணி, உடலில் வலுவுள்ள வரை அதைத் தொடர்வதில் உறுதியாக இருக்கிறார்.