புதிய அனுபவத்துடன் பள்ளி திரும்பும் மாணவர்கள்

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். வீட்டிலிருந்து கல்வி கற்ற மாணவர்கள், ஒரு மாத விடுமுறையையும் இந்த கொவிட்-19 நோய்ப் பரவல் காலத்தில் வீட்டில் கழித்தனர்.

இவ்வாரத் தொடக்கத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு படிப்படியாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்கின்றனர்.

தொடக்கநிலை ஆறாம் வகுப்பு, உயர்நிலை நான்கு, ஐந்தாம் வகுப்புகள் என இறுதியாண்டுத் தேர்வு எழுதும் நிலைகளில் பயிலும் மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்வார்கள். மற்ற நிலைகளில் பயில்வோர் ஒரு வாரம் விட்டு மறு வாரம் பள்ளிக்குச் செல்வார்கள்.

இந்த ஏற்பாடு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் 36 வயது தாயார் ஜொயென் சரவணன்.

“மாணவர்கள் வீட்டிலிருந்து படிப்பதால் அவர்களைக் கண்காணிக்கவேண்டி உள்ளது,” என்றார் பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அவர்.

ஜொயெனின் மூத்த மகன் தொடக்கநிலை ஆறிலும் இளைய மகள் தொடக்கநிலை ஐந்திலும் பயில்கின்றனர். தற்போதைய நடைமுறையின்படி மூத்த மகன் ஹிரித்திக் அன்றாடம் பள்ளிக்குச் செல்லவேண்டும். இளைய மகள் தான்யா ஒரு வாரம் விட்டு மறு வாரம் போகவேண்டும்.

ஜொயெனின் கணவர் சரவணன் பாதுகாவல் துறையில் பணிபுரிகிறார். எனவே, பகல் நேரங்களில் வீட்டில் எவரும் இருப்பதில்லை.

“எனது பிள்ளைகள் பள்ளி செல்லத் தொடங்கியதில் இருந்து சுதந்திரமாக, பொறுப்புடன் இருப்பதை வலியுறுத்தி வந்துள்ளோம். அதனால் அவர்கள் வீட்டில் இருந்து பாடங்களை முடித்துவிடுவார்கள்,” என்றார் ஜொயென்.

“பள்ளி திறப்பதால், பிள்ளைகள் வகுப்பில் கற்பது, மற்ற மாணவர்களுடன் கலந்துறவாடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். வீட்டில் முடங்கியிருப்பது போன்ற உணர்வு அவர்களுக்கு இருந்தது. இனி அது நீங்கிவிடும்,” என்றார் ஜொயென்.

கொவிட்-19 கிருமித் தொற்று முற்றிலும் நீங்கிவிடவில்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செயல்பாட்டில் உள்ள தால் தாம் கவலைகொள்ளவில்லை என்றார் அவர்.

வீட்டில் இருந்து படித்த மாணவர்களுக்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளதாகவும் அதனால், பள்ளி தொடங்கியதும் புத்துணர்வு பெற்று மாணவர்கள் பள்ளி திரும்புவதாகவும் குறிப்பிட்டார் தனியார் பாலர் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரியும் மகமுதா பேகம்.

தொடக்கநிலை 4, 3, 1 ஆகிய வகுப்புகளில் பயிலும் மூன்று மகள்களுக்குத் தாயான அவர், தமது பிள்ளைகள் ஆர்வத்துடன் வீட்டில் கல்வி கற்றதைப் பார்த்து வியந்ததாகக் கூறினார்.

“வகுப்பில், என் மகள்கள் அதிகம் பேசமாட்டார்கள் என்று அவர்களது ஆசிரியர் சொல்வார். தற்போது காணொளி மூலம் வகுப்புகளில், என் மகள்கள் நன்கு பேசி கலந்துரையாடினர். காணொளி வகுப்புகள் அவர்களது கூச்சத்தையும் அச்சத்தையும் போக்கியுள்ளது,” என்று மகிழ்ச்சி தெரிவித்தார் மகமுதா. தமது பிள்ளைகள் ஆர்வத்துடன் கற்றதுடன் புத்தாக்கத்துடன் சிந்திப்பதையும் தைரியமாகப் பேசுவதையும் அவர் கவனித்தார்.

“இனி வகுப்பில் கல்வி கற்கும்போதும் இதே மாதிரி தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும் வகுப்பில் பேசவேண்டும் என்று பிள்ளைகளுக்குச் சொல்லியுள்ளேன்,” என்றார் அவர்.


பள்ளிக்குச் செல்லத் துடித்த மாணவி

பள்ளி மீண்டும் திறந்த செய்தியைப் பெரும் வரமாகக் கருதுகிறார் 42 வயது பாக்கியம் (உண்மை பெயரல்ல).

“பல உதவித் திட்டங்களால் மடிக்கணினி, இணையத் தொடர்பு போன்றவற்றை பெற்றுள்ளோம். அதனால் வீட்டில் கல்வி கற்பதற்குத் தேவையான வசதிகள் இருந்தன, ஆனால் சூழல்தான்,” என்று அவர் கூறினார்.

அவரது ஒரே மகள் உயர்நிலை மூன்றில் பயில்கிறார். ஓரறை வீட்டில் வசிக்கும் அவர், துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிகிறார். தற்போது வேலையிழந்துள்ள அவரது கணவருக்கு நீண்ட நாட்களாக மது அருந்தும் பழக்கம் உள்ளது.

தினமும் வீட்டிற்கு அருகில் உள்ள காப்பிக் கடையில் மது அருந்தும் அவரால், கடந்த இரண்டு மாதங்களாக நீடிக்கும் கிருமிபரவல் முறியடிப்பு கட்டுப்பாடுகளால் அங்கு சென்று நண்பர்களோடு மது அருந்தமுடியவில்லை. அதனால் வீட்டிலேயே மது அருந்துகிறார். இதனால் பாக்கியத்தின் மகளுக்குக் கல்வியில் கவனம் செலுத்துவது கடினமாக உள்ளது.

“ஓரறை வீடு என்பதால் எல்லாரும் ஓரே இடத்தில்தான் இருக்க வேண்டும். இந்தச் சூழலில் வேறோர் இடத்திற்கும் செல்லமுடியாது. பள்ளி திறந்து விட்டதால், என் மகள் இனி படிக்கலாம்,” என்றார் அவர். தமது மகள் பள்ளிக்கு ஆர்வத்துடன் செல்வதை எண்ணி தாம் மிக்க மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைந்ததாகத் தெரிவித்தார் திருமதி பாக்கியம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!