ப. பாலசுப்பிரமணியம்
கொவிட்-19 கிருமித்தொற்று முறியடிப்பு காலத்தில் வீட்டிலேயே இருக்கவேண்டியிருந்ததால் பலருக்கும் அன்றாட நடவடிக்கைகளில் சமையல் முக்கிய இடத்தைப் பிடித்தது. ஆரோக்கியமான வீட்டு சமையல் உடல்நலத்தைப் பேணுவதுடன், வீட்டுக்குள் இருக்கும் மன உளைச்சளையும் பலருக்குப் போக்கியது. ஆனால், தீவின் மேற்குப் பகுதியில் வசிக்கும் திருவாட்டி 55 வயது ஜெ.லீலாவுக்கு கடந்த இரண்டு மாத காலத்தில் சமையல் அறை மன உளைச்சலை அதிகரிப்பதாக இருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து சமையலறை அறவே பயன்படுத்த முடியாமல் பல விதத்திலும் சிரமப்பட்டார் அவர்.
பல ஆண்டுகளாக தமது நான்கறை வீட்டை வாடகைக்கு விட்டிருந்த ஜெ.லீலா, மீண்டும் அவ்வீட்டில் வசிக்க வந்தபோது சமையலறையைப் புதுப்பிக்க நினைத்தார். மேலும் அவர் வசிக்கும் அடுக்குமாடி வீடு அரசாங்கத்தின் இல்ல மேம்பாட்டுத் திட்டத்தின் (HIP) புதுப்பிப்புப் பணிகளுக்கு தகுதி பெற, ஒரே காலக்கட்டத்தில் சமையலறை, கழிவறைகளைப் புதுப்பித்து விடலாம் என்று எண்ணினார்.
ஆனால் கொவிட்-19 நிலவரத்தால், இல்ல மேம்பாட்டுத் திட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
எனினும், சமையலறை வேலைகளைத் தொடர ஜெ.லீலா முடிவெடுத்தார். மார்ச் மாத இறுதியில், பணியாளர்கள் சமையல் அறையின் பழைய அலமாரியை அகற்ற தொடங்கிவிட்டனர். ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் வாரத்திற்குள் புதுப்பிப்பு பணிகள் முடிந்திருக்கும்.
ஆனால் கொவிட்-19 அதிரடித் திட்டம் ஏப்ரல் 7ஆம் தேதி நடப்புக்கு வந்ததால் அனைத்து புதுப்பிப்புப் பணிகளும் நிறுத்திவைக்கப்பட்டன.
“இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் புதுப்பிப்புப் பணிகளைத் தொடங்கியிருக்க மாட்டேன். அலமாரியில் இருந்த சமையல் பொருட்களை வீட்டின் வேறு அறைகளில் வைத்திருந்தேன். நல்லவேளையாக பாத்திரங்களைக் கழுவுவதற்கு சமையல் அறையில் தற்காலிகமாக கழுநீர்த் தொட்டி பொருத்தப்பட்டது,” என்று கூறினார் திருவாட்டி லீலா.
வீட்டிலிருந்த இரு மகன்களுக்கும் சமைத்துக் கொடுக்க முடியவில்லை என்பது அவரது கவலை. 27 வயதாகும் மூத்த மகன் நிதித் துறையில் பணிபுரிகிறார். 12 வயது இளைய மகன் படிக்கிறார். இருவருமே வீட்டிலிருந்தவாறு செயல்படு கின்றனர். மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றும் திருவாட்டி லீலா வேலைக்குச் சென்று வந்தார். எனினும், ஒருவேளைகூட வீட்டில் சமைத்துச் சாப்பிட முடியவில்லை. வார இறுதிநாட்களில் எளிய சமையலுக்கு ஓர் ‘இன்டக்ஷன்’ அடுப்பை தற்காலிகமாகப் பயன்படுத்தினார். வார நாட்களில் மாதாந்திர கட்டணம் செலுத்தி மதிய, இரவு உணவுகளை, உணவு விநியோகச் சேவை மூலம் வாங்கினார்.
“புதிய அலமாரி கூடிய விரைவில் என் சமையல் அறையில் பொருத்தப்படும். இம்மாதத்திற்குள் புதுப்பிப்புப் பணிகள் முடிந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. மீண்டும் சமைத்துச் சாப்பிட ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்றார் திருவாட்டி லீலா.