கலை, கலாசாரம், மரபுடைமை என்று பல அம்சங்களில் சிங்கப்பூர் கடந்த ஆண்டுகளில் மேலான அனுபவமும் மேன்மையும் கண்டுள்ளது. அவற்றைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டியது நமது தலையாய கடமைகளில் ஒன்று.
தனிப்பட்ட துறைகளில் கலாசார மரபுடைமை சார்ந்த திறன்களையும் அறிவையும் வளர்த்து, கட்டிக்காத்து வரும் பணியில் சிறப்பாகப் பங்களித்து வரும் தனிமனிதர்களையும் குழுக்களையும் அங்கீகரித்து, கௌரவிக்கும் வண்ணம் தேசிய மரபுடைமைக் கழகம் கடந்த அக்டோபர் மாதம் ‘மரபுடைமையின் புரவலர்’ விருதை அறிமுகம் செய்தது.
இம்மாதம் 4ஆம் தேதி அந்த விருதிற்கான ஆறு வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
வெற்றி பெற்ற குழுக்களும் தனிமனிதர்களும் குறைந்தது பத்தாண்டு அனுபவமும் சமூகத்தில் நன்மதிப்பையும் பெற்றிருக்கவேண்டும்.
விருது பெற்றோரில் ‘அப்சராஸ் ஆர்ட்ஸ்’ கலைக் குழுவும் ஒன்று.
1977ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் இயங்கி வரும் அப்சராஸ் குழு, இந்திய நடனக் கலையைக் கற்கவும் கற்றுத் தரவும் வழிவகுப்பதோடு, அதை முழு நேர நிபுணத்துவப் பணியாக மேற்கொள்ளும் வாய்ப்புகளை வழங்கும் நிறுவனமாகவும் திகழ்ந்து வருகிறது.
“நாட்டியக் கலையோடு தமிழ்மொழியையும் வளர்க்கிறோம். இயல், இசை, நாடகம் என முத்தமிழின் பல கலை அம்சங்களை எங்களது படைப்புகளில் சேர்க்கிறோம். கம்பராமாயணம் போன்ற பழம்பெரும் இலக்கியப் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டாலும் அதை இந்தக் காலத்திற்கு ஏற்றபடி புதிய பாணியில் படைக்கிறோம். அண்மையில் இந்திய விளையாட்டான பரமபதம் குறித்த படைப்பையும் செய்திருந்தோம். நடனக் கலையோடு நின்றுவிடாமல் இந்திய மரபுடைமையிலும் வரலாற்றிலும் கவனம் செலுத்தி வருகிறோம்,” என்றார் அப்சரஸ் ஆர்ட்ஸ் கலை இயக்குநர் திரு அரவிந்த் குமாரசாமி, 54.
2017ல் ‘ஆஞ்சநேயம்-அனுமனின் ராமாயணம்’ என்ற நாட்டிய நாடகத்தை ‘எஸ்பிளனேட்’ அரங்கில் மேடையேற்றியது அப்சராஸ். அனுமனின் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி படைக்கப்பட்ட அந்த ராமாயண நிகழ்ச்சிக்கான அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.
வீட்டிலிருந்தபடி மக்கள் கண்டு ரசிக்க இவ்வாண்டு மார்ச் 24 முதல் 31ஆம் தேதிகளில் ‘சிஸ்டிக் லைஃப்’ நேரலைத் தளத்தின் மூலம் அந்த படைப்பு இணையம் வழியாக ஒளிபரப்பப்பட்டது.
காலத்துடன் பொருந்தி நிற்கும் வகையில், பள்ளிகளிலும் மின்னிலக்கத் தொழில்நுட்பங்கள் வழியாகவும் அப்சராஸ் கிளை பரப்பி வருகிறது.
விருது பெற்ற ஒவ்வொரு வெற்றியாளருக்கும் $5,000 ரொக்கமும் திட்ட மானியமாக $20,000 வரையிலும் வழங்கப்பட்டது.
கொவிட்-19 கிருமித்தொற்றால் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நிதி ஊக்கமளிப்பதாக உள்ளது என்றும் கலைகளையும் கலாசாரத்தையும் தொடர்ந்து பேண உதவுகிறது என்றும் திரு அரவிந்த் குறிப்பிட்டார்.