சென்ற வாரம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு கட்டம் கட்டமாக மாணவர்கள் பள்ளி செல்கின்றனர்.
ஏறத்தாழ இரண்டு மாதங்கள் வீட்டில் இருந்து படித்த மாணவர்கள் நேரத்தை பயனுள்ள வழிகளில் பயன்படுத்தியுள்ளனர்.
அவர்களில் ஒருவர் நார்த்லேண்ட் தொடக்கப் பள்ளியில் தொடக்கநிலை நான்கில் பயிலும் ஜெஹர்நிஷா ஜகூர் உசேன்.
வீட்டிலிருந்தபடியே கல்வி கற்ற அவர், கட்டுக்கோப்புடன் நேரத்தை செலவழித்து தாமாகப் பாடம் கற்றுக்கொண்டார்.
‘ஸூம்’ தொழில்நுட்பச் செயலி மூலமும் ‘கூகுல் மீட்’ செயலி மூலமும் ஜெஹர்நிஷாவிற்குப் பாடங்கள் நடைபெற்றன.
‘ஸூம்’ செயலியை இயக்க தொடக்கத்தில் அவருக்குத் தெரியவில்லை. தமது தாயாரின் உதவியுடன் அவர் அதைக் கற்றுக்கொண்டார்.
“எனக்குப் பள்ளிக்குச் செல்லத்தான் மிகுந்த ஆசை. ஆசிரியர் முன்னிலையில் படிக்க எனக்கு விருப்பம்’,” என்றார் ஜெஹர்நிஷா.
“பள்ளி திறந்ததும் சென்ற வாரம் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் சென்றேன். இந்த வாரம் நான் வீட்டிலிருந்தபடியே படிக்க வேண்டும். அடுத்த வாரம் மீண்டும் பள்ளிக்குச் செல்வேன்,” என்று அவர் சொன்னார்.
மூன்று சகோதரிகளில் மூத்தவரான அவர், தமது இரு தங்கைகளுக்கும் முன்னுதாரணமாகவும் இருக்கிறார்.
அவரது முதல் தங்கை மெஹர்நிஷா ஜகூர் உசேன் தன் சகோதரிகளுடன் இணைந்து மகிழ்ச்சியாக பயனுள்ள வழியில் செலவிட்டதை நினைத்து மகிழ்கிறார்.
“எங்குமே போகமுடியவில்லை. இருந்தாலும் பெருநாளுக்காக பலகாரங்கள் செய்தது, உறவினர்களை ‘ஸூம்’ செயலி வழியாகச் சந்தித்தது, வீட்டுப்பாடம் செய்தது போன்ற நடவடிக்கைகளால் நல்லவழியில் நேரம் கழிந்தது,” என்று சொன்னார் அவர்.
கொவிட்-19 கிருமித் தொற்றை முறியடிக்கும் சிங்கப்பூரில் எட்டு வாரங்களுக்கு பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இம்மாதம் இரண்டாம் தேதி முதல் கட்டமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும், படிப்படியாக நாட்டின் பல நடவடிக்கைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் பள்ளிகள் முதல்கட்டமாக சென்ற செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.
தொடக்கநிலை ஆறு, உயர்நிலை நான்கு, ஐந்து ஆகிய இறுதியாண்டு நிலைகளில் பயிலும் மாணவர்கள் வாரம் ஐந்து நாட்கள் பள்ளிக்குச் செல்லவேண்டும்.
மற்ற நிலைகளில் பயிலும் மாணவர்கள் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் செல்லவேண்டும்.
தொடக்கநிலை ஆறில் பயிலும் ஹ்ரித்திக் சரவணன், பள்ளிக்குத் திரும்புவது குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளார். வழக்கமாக அமைதியாக இருக்கும் அவர், இந்த இரண்டு மாதங்களில் மாற்றத்தைக் கண்டுள்ளார்.
‘ஸூம்’ செயலி மூலம் வகுப்புகளில் பங்கேற்ற ஹ்ரித்திக், கலந்துரையாடல்களில் தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும் பங்கேற்றுள்ளார்.திடமாகப் பேசக்கூடிய மாற்றத்தை அவர் கண்டுள்ளார்.
தொடக்கநிலை இறுதியாண்டுத் தேர்வை எழுதவிருக்கும் அவர், வீட்டில் இருந்து இணையம் வழி
கல்வி பயிலும்
அனுபவத்தைத் தன்வசப்படுத்தியுள்ளார்.