நவராத்திரியை முன்னிட்டு ‘ஒட்டுமொத்த உலகிற்கே சக்தி கொடுத்து கற்பிக்கும் அதிகாரமுள்ளவர்கள் பெண்கள்’ எனும் தலைப்பில் நடந்தேறிய கலந்துரையாடலில் பிரதான சமயங்களைப் பிரதிநிதித்து பேச்சாளர்கள் பங்கேற்றனர். சென்ற சனிக்கிழமையன்று நடந்த இக்கலந்துரையாடலை ‘சேவ்ஸ்பேசஸ்.எஸ்ஜி’ எனும் சமயங்களுக்கிடையேயான நல்லிணக்கம் பேணும் தளத்தை நிறுவிய எலிசெபெத் டியோ வழிநடத்தினார்.
இந்து சமயத்தைப் பிரதிநிதித்து நேரலையில் கலந்துகொண்ட டாக்டர் தர்ஷனா ஸ்ரீதர், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கான மூத்த கொள்கை ஆலோசகர் ஆவார். அவர் பெண்கள், குழந்தைகளின் அதிகாரமளித்தலுக்குக் குரல் கொடுப்பவர்.
சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட ஸ்ரீ ஞானநந்தா சேவா சமாஜம் எனும் சமய அமைப்பு, ‘இஃப்தென்ஹவ்’ எனும் ஆலோசனை அமைப்புடன் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி கேரி டான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
“வெவ்வேறு சமயங்களாக இருந்தாலும் ஆண், பெண் இரு பாலருமே சமமானவர்கள் என்பதை அனைத்து சமயமும் கோடி காட்டியுள்ளது முக்கியமான கருத்தாகும். இந்தப் பொதுவான கருத்தை அனைவரும் ஏற்று பாலின சமத்துவத்தை நிலைநாட்டவேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
சிங்கப்பூரில் வெவ்வேறு சமயத்தினர் நல்லிணக்கத்தோடு வாழ்வது ஒரு சிறப்பம்சம் என்று கூறிய திருவாட்டி டான், சமூக ஊடகங்களும் மின்னிலக்க தொழில்நுட்பமும் பல பொய்ச் செய்திகளைப் பரப்பும் நிலையில் இதுபோன்ற பாதுகாப்பான சூழலில் வெளிப்படையாகக் கருத்துகளைப் பகிர்வது முக்கியம் என்றார்.
பெண்கள் ஆண்களுக்கு பின் இரண்டாம் நிலை குடிமக்களாகத் தான் கருதப்படவேண்டும் என்று இந்து மதம் வலியுறுத்துகின்றது என்னும் கருத்து உலகில் நிலவி வருகின்றது என்றும் இது திட்டவட்டமான தவறான கருத்து என்றும் டாக்டர் தர்ஷணா ஸ்ரீதர் கூறினார்.
’இந்து மதம் பெண்களை இறை நிலையில் வைத்து பார்க்கும் மதம், வேதங்களும் உபநிஷதங்களும் ஆண் பெண் வித்தியாசம் பார்ப்பதில்லை, சமூகம் தன்னுடைய அடக்குமுறைகளுக்கு இந்து மதத்தை போர்வையாக வைத்து தவறான விளக்கங்களையும் கருத்துக்களையும் உண்மை என பரப்பியுள்ளது,’’ என்று அவர் விவரித்தார்.
தாவோயிசம் சமயத்தைச் சேர்ந்த மாஸ்டர் நியோ லீ கெங், தாம் 2011ஆம் ஆண்டு சமயத் தலைவரானபோது, அதுவரை அச்சமயத்தின் தலைவர்களாக பெரும்பாலும் ஆண்களே இருந்தனர் என்றும் அவ்வாறு இருந்தும் தம்மால் அந்த இடத்திற்கு வரமுடிந்தது சமமான வாய்ப்புகள் இருப்பதைக் குறிக்கிறது என்றும் தெரிவித்தார். வேறுபாடுகள் ஒருவரின் தனித்துவத்தைக் காட்டவேண்டுமே தவிர பிரிவினைகளை ஏற்படுத்தக்கூடாது என்று கூறினார் சிஸ்டர் ஜோன் லோபெஸ். பிரிவுகள் காலங்காலமாக மக்களால் ஏற்படுத்தப்பட்டாலும் கத்தோலிக்க தேவாலயங்கள் அந்த எண்ணத்தை முறியடித்து வருவதாகச் சொன்னார்.
திருமணம், சொத்து உரிமை போன்ற விவகாரங்கள் புனித குர்ஆனில் ‘அந்நிஸா’ என்ற பெண்ணின் பெயரைக் கொண்ட அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார் உஸ்தாஸா லியானா ரோஸ்லி அஸ்மாரா. இந்தியாவில் பெண்கள் கைத்தறி துணிகளைத் தைக்கும் தொழில்முனைப்பைத் தொடங்குவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார் இவர்.
சமயங்களில் அண்மையில் உருவான பஹாஇ சமயத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஃபில்லிஸ் கிம், இரு பாலினங்களும் ஒரு பறவையின் இரு இறக்கைகளைப் போன்றவை என்று எடுத்துரைத்தார். சமமாக இரு இறக்கைகளும் செயல்பட்டால்தான் பறவை பறக்கமுடியும் என்பதைப் போலவே இரு பாலினமும் சமமாகும் என்பதை அந்த சமயம் நம்புவதாகக் குறிப்பிட்டார்.
நவராத்திரி விழாவை முன்னிட்டு பெண்ணுரிமையை மையமாக வைத்து அனைத்து சமயங்களின் நல்லிணக்கமும் ஒருமைப்பாடும் மேலோங்கும் வகையில் இந்நிகழ்ச்சியை நடத்துமாறு பணித்த பூஜ்ய ஸ்ரீ நிரஞ்சனானந்த கிரி ஸ்வாமிகள், அத்வைத தத்துவத்தின் குருவான ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாளின் ஜ்யோதிர் மட பரம்பரையில் தோன்றி, இன்று ஸ்ரீ ஞானானந்த கிரி பீடத்தின் பீடாதிபதியாக உள்ளார்.
ஆதி பராசக்தியின் அம்சமாக வணங்கப்பட வேண்டியவர்கள் பெண்கள், இவ்வுலகின் இயக்கத்துக்கு மூலாதாரமாக இருந்து ஆற்றலளிப்பவர்கள் பெண்கள், ஆனால் மாயையின் தாக்கத்தினாலும் சமூகத்தின் அடக்குமுறையாலும் இதை முழுமையாக உணராது உலகெங்கிலும் பலவகைகளில் அவர்களை கொடுமைப்படுத்தும் நிலைப்பாடு மாறினால் தான் இவ்வுலகம் உய்ய முடியும் என்றும் நிகழ்ச்சியில் காணொளி மூலம் பேசிய ஸ்ரீ நிரஞ்சனானந்த கிரி ஸ்வாமிகள் கூறினார்.
இவ்வாறான சமூக நல தொண்டுகளும் சமூக விழிப்புணர்வு விழாக்களும் தொடர்ந்து நிகழ்த்தி, இந்து மதத்தின் உண்மை தத்துவங்களை வெளிக்கொணர்ந்து, இறை படைப்பின் அனைத்துயிர்களின் நலனுக்காகவும் சேவை செய்யுமாறு ஸ்வாமிகள் கோரினார் என்றும் இது போன்ற நிகழ்வுகள் பல இன நல்லிணக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்று கூறினார் இவ்விழாவின் ஏற்பாட்டுக்குழு தலைவர் டாக்டர் கஜன்.