தம் முதல் குழந்தை பிறந்தபோது, இளஞ்சிறார்கள் தமிழ் கற்பதற்கு முறையான தமிழ் புத்தகங்கள் இல்லாததை உணரத் தொடங்கினார் திருமதி வனிதா வீராசாமி. இதனாலேயே 2017ஆம் ஆண்டில் வண்ணமயமான, சுவாரசியமான தமிழ்ப் புத்தகங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார் அவர்.
கடந்த 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் வாழும் சிங்கப்பூரரான வனிதாவிற்கு எட்டு வயதில் ஒரு மகனும் ஐந்து வயதில் ஒரு மகளும் உள்ளனர். ‘வாரணம் சில்ரன்ஸ் புக்ஸ்’ (Vaaranam Children's Books) என்ற நிறுவனத்தை அமைத்து இதுவரை ஆறு நூல்களை வெளியிட்டுள்ளார் திருமதி வனிதா, 43.
“என் மகன் பிறந்தபோது அவர் தமிழ்ப் புத்தகங்கள் படிக்கவேண்டும் என்று விரும்பினேன். சிங்கப்பூரிலிருந்து என் தாயார் சில புத்தகங்களை அனுப்பினார். ஆனால் ஆங்கிலப் புத்தகங்களை ஒப்பிடும்போது அவற்றின் தரம் சற்று குறைவாகவே இருந்தது. சித்திரங்கள் கவர்ச்சியாக இல்லை. சொற்கள் அதிகமாக இருந்தன. குழந்தைகள் விரும்பிப் படிக்கும் வகையில் இல்லை,” என்றார் இல்லத்தரசி வனிதா.
நூல்களுக்குத் தேவையான சொற்கள், படங்கள், தகவல்கள் போன்றவற்றை ஆராய்ந்து சேகரித்தார் அவர். பின்னர் சித்திரக் கலைஞர் ஒருவரை அணுகி, புத்தகத்திற்குத் தகுந்த படங்களை உருவாக்கச் சொன்னார்.
முதல் நான்கு நூல்களுக்கு இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஸ்ரீமள்ளி பசானி, பிந்தைய இரண்டு நூல்களுக்கு இந்தியாவைச் சேர்ந்த நவ்யா ராஜூ ஆகிய சித்திரக் கலைஞர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டனர்.
பலமுறை திருத்தம் கண்டு இறுதியாக வரும் நூல் படிவம், அச்சடிப்பவர்களுக்கு அனுப்பப்படும். குழந்தைகளுக்கு ஏற்புடைய புத்தகத்தை எப்படி உருவாக்கலாம் என்பதை ஆராய்ந்து அதற்கான விலையும் கணக்கிடப்படும். வரவுசெலவுக்குத் தகுந்தவாறு நூல்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படும்.
“வண்ணச் சித்திரங்கள், பெரிய எழுத்துகள் போன்ற அம்சங்களால் குழந்தைகளை இந்த புத்தகங்கள் ஈர்க்கும். புத்தகத்துடன் தங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ளும் வாய்ப்பையும் வழங்கும். உதாரணத்திற்கு, ‘நிறங்கள்’ என்ற தலைப்பிலான எனது நான்காவது புத்தகம், தொட்டு உணரக்கூடிய விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
“அப்படி ஆடு ஒன்றின் படம் இருந்தால் அதற்குப் பக்கத்தில் கம்பளி போன்று இருக்கும். அதைத் தொடும்போது ஆட்டின் தோல் இப்படித்தான் இருக்கும் என்பதை சிறார்கள் உணர்வர். இதுபோன்ற ஆங்கில புத்தகங்கள் பல உள்ளன. ஆனால் தமிழில் மிக அரிதே என்று நம்புகிறேன்,” என்றார் வனிதா.
எளிதில் கிழியாத, திடமான தாட்கள் கொண்டு புத்தகங்கள் உருவாக்கப்படுவதுடன் அதில் பாதுகாப்பு அம்சமும் இருப்பதை உறுதிசெய்வதாக வனிதா குறிப்பிட்டார்.
முதல் நூல் தொகுப்பில் உயிர் எழுத்துகளுக்கும் மெய் எழுத்துகளுக்கும் இரண்டு வெவ்வேறு புத்தகங்கள் வெளிவந்தன. ‘பாப்பாவின் முதல் தமிழ் புத்தகம்’ என்ற தலைப்பில் அந்த நூல் தொகுப்பு உருவாக்கம் கண்டது.
கொவிட்-19 காரணத்தால் கடந்த ஆண்டு நூல் தயாரிக்கும் பணிகள் மெதுவடைந்ததாக பகிர்ந்துகொண்டார் வனிதா. இருப்பினும், சென்ற மாதம் ‘பாட்டி வீடு’, ‘எதிர்ப்பதம்’ ஆகிய நூல்களை வெளியிட்டார். ‘பாட்டி வீடு’ தம் சிறு வயது அனுபவங்களை மையமாகக்கொண்டு எழுதப்பட்டதாக வனிதா கூறினார்.
“புத்தகத்தின் இறுதிப் பக்கத்தில் புத்தகத்தை வாசித்த சிறார்கள், தங்களின் தாத்தா பாட்டியோடு எடுத்த படங்களை ஒட்டிக்கொள்ளலாம். இதுபோன்று புத்தாக்க முறையில் புத்தகங்கள் வழங்கவேண்டும் என்பதே என் ஆசை,” என்றார் வனிதா.
ஒவ்வொரு நூலுக்கும் 500 பிரதிகள் என்ற குறைந்த அளவில் அச்சிட்டு வருவதாகவும் தேவை ஏற்பட்டால் மட்டுமே கூடுதலாக அச்சிடுவதாகவும் வனிதா தெரிவித்தார். இதில் தமக்கு லாபம் ஏதுமில்லை என்றும் கூறினார்.
“பணம் சம்பாதிப்பது என் நோக்கமல்ல. குழந்தைகளிடையே தமிழ் ஆர்வத்தை வளர்க்கவேண்டும். தரமான புத்தகங்கள் அதிகம் இல்லை என்றால் எப்படி சிறுவர்களிடம் தமிழ் ஆர்வத்தைத் தூண்ட முடியும்? ஆகையால், என் குழந்தைகளுக்கும் மற்ற சிறார்களுக்கும் தரமான நூல்களைத் தயாரித்து வழங்குவதே என் முக்கிய நோக்கமாக இருக்கிறது,” என்று வலியுறுத்தினார் வனிதா.
இந்திய மரபுடைமை நிலையம், ஆசிய நாகரிக அரும்பொருளகம் ஆகிய இடங்களிலுள்ள கடைகளிலும் புத்தகங்கள் விற்கப்படுகின்றன. இவ்விடங்களில் தற்போது முதல் நான்கு புத்தகங்கள் கிடைக்கும். வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆறு புத்தகங்களும் விற்கப்படும்.
தேசிய நூலகங்களில் தற்போது வனிதாவின் முதல் நான்கு நூல்கள் இரவலுக்குக் கிடைக்கும். கூடிய விரைவில் மற்ற இரண்டு நூல்களும் சேர்க்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார் வனிதா.
மற்ற நாடுகளில் உள்ளோர், இனையம் வழியாக இந்த நூல்களை வாங்குகின்றனர்.
அனைத்து வாரணம் நூல்களை tamilwithlovesg.myshopify.com என்ற இணைப்பில் சிங்கப்பூரர்கள் வாங்கிக்கொள்ளலாம். வர்ணம் நூல்கள் குறித்த முழு விவரங்களுக்கு www.vaaranambooks.com.au/books என்ற இணைய முகவரியை அணுகலாம்.